search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IG Pon Manickavel"

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswamy #TNAssembly #IGPonManickavel
    சென்னை:

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், தன்னிடம் கேட்காமல் அந்த பிரிவில் உள்ள போலீசாரை இடமாற்றம் செய்வதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் ஐ.ஜி.யின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கேட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு ரூ.35 லட்சத்து 39 ஆயிரத்து 857 ரூபாய் செலவில்  உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கேட்டபடி 320 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோரிய வசதிகளை செய்து தரவில்லை என்பது எப்படி நியாயமாகும்?

    பணியிட மாற்றம் என்பது அனைத்து ஆட்சியிலும் நடைபெறும் ஒன்றுதான். அதிமுக ஆட்சியில்தான் சிலைகள் திருடப்பட்டது போல காங்கிரஸின் ராமசாமி கூறி வருகிறார். சிலை திருட்டு குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்பது போல் ராமசாமி கூறி வருகிறார். நாங்கள் எப்போதும் தெய்வ பக்தி உடையவர்கள். நானும் தெய்வ பக்தி உடையவன். ஆகவே, உங்களுக்கு அந்த மாறுபட்ட கருத்தே தேவையில்லை.

    சிலை திருட்டு தடுப்பு பிரிவை உருவாக்கிய ஆட்சியே அ.தி.மு.க. ஆட்சிதான். எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைக் கடத்தல் பிரிவு தொடர்ந்து செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswamy #TNAssembly #IGPonManickavel

    சிலைகள் கடத்தல் சம்பந்தமாக நடைபெற்று வரும் விசாரணையில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பழம்பெரும் புகழ் மிக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நமது மாநிலத்தில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டதும், வெளி மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதும், சிலை கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகள் கடத்தப்பட்டது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

    குறிப்பாக தமிழக அரசு சிலைகளை பாதுகாக்க பாதுகாப்பு அறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை, சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்திருப்பது உட்பட சில குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருக்கிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசு சந்தேகத்திற்கு இடம் கொடுத்திருக்கிறது.

    எனவே சிலைகள் கடத்தல் சம்பந்தமாக நடைபெற்று வரும் விசாரணையில் எவ்வித குறுக்கீடும், பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். குறிப்பாக சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் குழுவுக்கு தேவைப்படும் உதவிகளை முறையாக, நேர்மையாக செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அதன் மூலம் விசாரணைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமல் விரைந்து விசாரணை நடைபெற வேண்டும்.

    எனவே தமிழக அரசு சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் சிலை கடத்தல் சம்பந்தமான வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    தஞ்சை பெரிய கோவிலில் திருடப்பட்ட தங்கம்-வெள்ளி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளன என்றும், அவற்றை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.
    சிலை கடத்தல் தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ஏராளமான சிலைகள் திருடப்பட்டு, பின்னர் கடத்திச் செல்லப்பட்டு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்திச் சென்று விற்கப்பட்ட ராஜராஜ சோழன் ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்து ராணி லோகமாதேவி ஐம்பொன் சிலையும் குஜராத் மாநிலத்தில் உள்ள மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் இருந்து மேலும் பல சிலைகள் திருடப்பட்ட விவரம் கண்டறியப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார், 2 உமாபரமேஸ்வரி சிலைகளை தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்துள்ளார். ராஜராஜ சோழனின் தந்தை பொன் மாளிகை துஞ்சின தேவர் சிலை, ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவியின் சிலை போன்றவையும் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளுக்கும் தினமும் அபிஷேகம் செய்ய ராஜராஜ சோழன் கட்டளையிட்டு இருந்தார். அதன்படி, இந்த இரண்டு சிலைகளுக்கும் தினமும் பெரிய கோவிலில் அபிஷேகம் நடக்குமாம்.

    ராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி, திருக்கோவிலூர் மலையமான் சிற்றரசரின் மகள் ஆவார். ராஜராஜ சோழனின் தளபதி 3 அடி உயரத்தில் அர்த்தநாரீஸ்வரர் ஐம்பொன் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த சிலையையும் காணவில்லை. திருட்டு போயுள்ளது.

    மேலும் ராஜராஜ சோழன் 450 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட கொல்கைதேவர் சிலையையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்துள்ளார். மேலும் வெள்ளியினால் செய்யப்பட்ட 4 வாசுதேவர் சிலைகளும், 365 கிராம் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சேத்திரபாலர் சிலையும் தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இரண்டு தங்கத்திலான சிலைகளும், 4 வெள்ளி சிலைகளும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு திருடப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இந்த சிலைகள் தஞ்சை கபிஸ்தலத்திற்கு அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி என்பவர் மூலமாக கோடிக்கணக்கில் விற்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் விற்ற பணத்தில் சென்னை வேப்பேரியில் கூட 7 கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதுபற்றியெல்லாம் புலன் விசாரணை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் இன்னும் கைது செய்யவில்லை.

    இதுபோல தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் 25-ந் தேதி ஆஜராகும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சசிகலா உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் வேலை பார்த்த நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்றுக்கொண்டவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 9-ந் தேதி அப்பல்லோ டாக்டர் சாந்தாராம் விசாரணையில் பங்கேற்றார். இடையில் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது வரும் 25-ந் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்க இருக்கிறது.

    அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன், ஜெயலலிதா தோழியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர்சயத் ஆகியோர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் 25-ந் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கின்றனர். ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பதால் பதர்சயத் ஆணையத்திடம் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து தனக்கு தெரிந்த பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதில் சசிகலா உதவியாளர் கே.பி.கார்த்திகேயன் மறு விசாரணைக்காக ஆஜர் ஆகிறார்.

    அதேவேளையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் பொன்.மாணிக்கவேலும் முதல் முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, விளக்கமளிக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, கடந்த 2012-ம் ஆண்டு பொன்.மாணிக்கவேல் மாநில உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார். எனவே அவர் அந்த பதவியில் இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த இருக்கிறார். எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வரும் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

    இதனை தொடர்ந்து 26-ந் தேதி சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார். அப்போது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கூடுதல் டி.எஸ்.பி. வீரபெருமாள், கவர்னர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் ஆர்.சீனிவாசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் நேரில் ஆஜராகி, குறுக்கு விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதற்கான சம்மன் அவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    ×