search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avani festival"

    • பிரியாவிடை சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். அதன்படி ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களில் குறிப்பிடத்தக்க 12 லீலைகளை விளக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று நரியை பரியாக்கிய லீலை நடந்தது. சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று காலை பிரியாவிடை சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். அதன்பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளினர்.

    சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல், பழைய சொக்கநாதர் கோவில், திருமலைராயர்படித்துறை ரோடு, பேச்சி யம்மன்படித்துறை, ஒர்க்‌ஷாப் ரோடு வழியாக ஆரப்பாளையம் வைகை தென்கரையில் உள்ள புட்டுதோப்பு மண்டபத்துக்கு வந்தடைந்தது.

    வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் புட்டு தோப்பு மண்டபத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் புட்டுதோப்பு மண்டபத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. சுவாமி-அம்மன் கோவிலுக்கு திரும்பியபின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்.

    • அம்பாளுக்கு பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால் வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆவணித் தபசு திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 3-ந் தேதி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    மாலையில் ஒப்பனையம்மாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 3.45 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சுவாமி தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர். 6.30 மணிக்கு அம்பாளுக்கு, முகலிங்கநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

    விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜன், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் மற்றும் பக்தர்கள், மண்டகப்படிதாரர்கள் கலந்துகொண்டனர்.

    இரவு 9.30 மணிக்கு அம்பாளுக்கு பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவுப்படி சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, பவுல் ஜேசுதாசன், கருப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    • இன்று(திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் இன்று நரியை பரியாக்கும் லீலை நடக்கிறது. இதில் சுவாமியுடன் வீதிஉலா வருவதற்கு திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பட்டார்.

    மாணிக்கவாசகர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று திருவாசகத்தை உலகுக்கு அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவின் போது 16 கால் மண்டபத்தில் நரியை பரியாக்கும் நிகழ்ச்சி, புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில், இன்று(திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமையும்) மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.

    மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேசுவரருடன் இணைந்து மாணிக்கவாசகர் வீதிஉலா வருவதற்காக திருவாதவூர் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் நேற்று காலை புறப்பட்டார். செல்லும் வழியில் திருக்கண் மண்டபங்களில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்புரிந்தார்.

    பக்தர்கள் மாணிக்கவாசகரை வரவேற்று வழிபட்டு அன்னதானம் வழங்கினர். வழி நெடுக மண்டகப்படிகளில் அருள்பாலித்து இன்று மீனாட்சி அம்மன் கோவிலை அவர் வந்தடைவார்.

    அரிவர்தன பாண்டியன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரிடம், குதிரைகள் வாங்கி வரும்படி பொற்காசுகளை கொடுத்து மன்னர் அனுப்பியுள்ளார். ஆனால் மாணிக்கவாசகர் குதிரை வாங்கச்செல்லும் வழியில் சிவகங்கை அருகே ஆவுடையார்கோவில் என்னும் ஊரில் சிவன் கோவிலை கட்டுகிறார்.

    குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் கோவிலை கட்டியதால் கையில் பணம் இல்லாத மாணிக்கவாசகரின் நிலையை கண்ட சிவபெருமான் நரிகளை பரிகளாக(குதிரைகளாக) மாற்றி மாணிக்கவாசகரிடம் அனுப்பி வைத்தார். அந்த குதிரைகளை மாணிக்கவாசகர் மதுரைக்கு மன்னனிடம் அனுப்பியதாக புராண வரலாறு கூறுகிறது.

    • மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதம் மீனாட்சி ஆட்சி புரிவதாக ஐதீகம்.
    • ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமி ஆட்சி புரிவதாக ஐதீகம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை வளையல் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

    மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதம் மீனாட்சியும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமியும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி மீனாட்சி ஆட்சி முடிந்து சுவாமி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளதை முன்னிட்டு சுந்தரேசுவரர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சியுடன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு இரவு 7.45 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், 2-ம் பிரகாரம் வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார்.

    வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:

    தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குடன் இருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷி பத்தினிகளும் அவரது அழகிலேயே மயங்கி ஆடைகளையும், அணிகலன்களையும் நெகிழ்ந்து நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அந்த பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூடுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று கூறினார்கள்.

    அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் தீர்ந்து, சிவலோகம் சென்றதாக வரலாறு கூறுகிறது.

    • சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • நாளை புட்டு திருவிழா நடைபெறுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவையொட்டி மதுரையில் நடைபெறும் புட்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நாளை புட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் இன்று காலை மதுரைக்கு பல்லக்கில் புறப்பட்டார்.

    சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனால் சுவாமி வரும் வழிகள் திருவிழாகோலம் பூண்டிருந்தது.

    • 12-ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
    • 12-ம்தேதி இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.

    அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், கருடன், நாகம், சூரியன், பூபல்லக்கு, அன்னம், இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார்.

    பதினொரு நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு முழு நேரம் நடைதிறப்பு மற்றும் தினமும் மதியம் உச்சிபடிப்பு, அன்னப்பால் கஞ்சி தர்மமும் இரவு 7 மணிக்குமேல் அன்னதர்மமும் நடைபெறுகிறது. எட்டாம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பத்தாம் திருநாளன்று முந்திரி கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தன குடம், பால்குடம் மற்றும் சிறப்பு பணிவிடை நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி பதினோராம் திருநாளன்று மாலை 4 மணிக்கு சிறப்பு செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடைபெறும்.

    11-ம் திருநாளன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யாபவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.

    • 10-ந்தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 11-ந்தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி முன்பு காலை 9.25 மணிக்கு மேள, தாள, பஞ்ச வாத்திய வெடி முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.

    கொடிப்பட்டத்தை மாத்தூர் மடம் தந்திரி சஜித் நாராயணரூ கொடிமரத்தில் ஏற்றினார். பின்னர் கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கோவில் கண்காணிப்பாளர் சோனாச்சலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், வட்டப்பள்ளி மடம் ஸ்தாணிகர் டாக்டர் பிரசாத், தெற்கு மண்மடம் திலீபன் நம்பூதிரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மரபு படி கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிபட்டத்தை மேள, தாளத்துடன் கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனியும், 9-ம் திருவிழாவான வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அமர செய்து நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    10-ம் திருவிழாவான 11-ந் தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 5-வது நாளான நேற்று காலை உலவாக் கோட்டை அருளிய லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

    விழாவில் உலவாக் கோட்டை அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    அடியார்க்கு நல்லார் என்ற ஒரு அடியார் மதுரையில் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். அவரது செல்வம் குறைந்த போதும் கடன் பொற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். கடனும் கிடைக்காத நிலையில் அவர் வருந்தினார். இந்தநிலையில், தனது மனைவியுடன் சோமசுந்தரரை தரிசித்து பின் உயிர் துறப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.

    அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். அதன்படியே இருவருக்கும் வீடு திரும்பி உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது.

    • மதுரை வந்ததும் நால்வர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 10-ந்தேதி வரை மதுரையிலேயே தங்கி நகர்வலம் வருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஆவணி மாதத்தில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழாவின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஆகிய 2 நிகழ்ச்சிகளிலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளுவது வரலாற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலதிருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 6-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது.

    இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்கிறார்.இதற்காக வருகின்ற 5-ந்தேதி கோவிலில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் அருள் ஆட்சி புரியும் பாண்டிய மண்டலமான மீனாட்சி பட்டணத்திற்கு (மதுரை) வருகிறார்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் திருக்கண் அமைத்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன்வழிபடுகிறார்கள். மீனாட்சி அம்மன்கோவிலுக்கு வந்ததும் நால்வர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள் 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பாண்டிய மன்னனாக முருகப் பெருமான் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதனை தொடர்ந்து வருகின்ற 10-ந்தேதி வரை மதுரையிலேயே தங்கி நகர்வலம் வருகிறார். பிறகு 10-ந் தேதி மாலையில் பூப்பல்லக்கில் தன் இருப்பிடமான திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டு வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது.
    • விழாவின் 4-ம் நாளில் தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறப்பு அலங்காரங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. விழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    முன்பு மதுரையை சூடாமணி பாண்டியன் (செண்பகப்பாண்டியன்) என்ற மன்னன் ஆட்சி செய்தான்.

    இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்பக மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். இளவேனிற் காலத்தில் அரசி அங்கிருக்கும் போது அந்த நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய வாசனையை மன்னன் உணர்ந்தான். அது தன் தேவியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டான்.

    தன் ஐயத்தை நீக்குபவருக்கு ஆயிரம் பொன் பரிசாக கொடுக்கப்படும் என்று கூறி அதனை சங்க மண்டபத்தில் தொங்க விட்டான். பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள். ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

    இந்த நிலையில் தருமி என்ற ஒருவன் சொக்கநாதரை பூஜிக்க விரும்பினான். ஆனால் மணமான பிறகே சிவனை பூஜிக்கலாம் என்பதால் அரசன் அறிவித்த பரிசு தனக்கு கிடைத்தால் அதன் மூலம் தானும் மணம் புரிந்து, இறைப்பணி செய்யலாம் என்று கருதி இறைவனை வேண்டினான்.

    அவனது வேண்டுகோளை ஏற்று இறைவன், "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற், செறியெயிற் றரிவை கூந்தலில், நறியவு முளதோ நீ அறியும் பூவே" என்ற பாடல் எழுதப்பட்ட ஓலையினை அவனுக்கு வழங்கினார்.

    தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி, அந்த பொற்கிழியை அவருக்கு அளிக்க உத்தரவிட்டான். அப்போது தலைமைப்புலவர் நக்கீரர் குறுக்கீட்டு தடுத்து நிறுத்தி, அந்த பாட்டில் பிழை உள்ளது என்று கூறினார். உடனே இறைவன் ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு வந்தார். அங்கு தன் பாடலில் என்ன குற்றம் என்று கேட்க, நக்கீரரும் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடர இறுதியாக இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்ற அறிந்த பின்னரும் நக்கீரர், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாட இறைவனின் நெற்றிக் கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரை குளத்தில் நக்கீரர் விழுந்தார். அதன்பின்னர் இறைவனும் மறைந்தார்.

    இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப்புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன் மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி, பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரரை உயிர்ப்பித்து கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராணம் கூறுகிறது.

    • ஆவணி மூலத்திருவிழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. அதில் திருவிளையாடல் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. அதில் 3-ம் நாளான நேற்று காலை மாணிக்கம் விற்ற லீலை நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

    விழாவில் சாமி மாணிக்கம் விற்ற லீலை நிகழ்ச்சி குறித்த புராண வரலாறு வருமாறு:-

    மதுரையை வீரபாண்டியன் என்ற அரசன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்த நேரத்தில் வேட்டையாட சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், அரசனின் மகுடத்தையும் கவர்ந்து சென்றனர்.

    இதற்கிடையில் இளவரசனுக்கு முடிசூடலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போது தான் மணிமகுடம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் களவு போனதை அறிந்து சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோவிலுக்கு சென்றனர்.

    அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். மேலும் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்ற செய்திகளையும் கூறினார்.

    பின்னர் புதிய மணிமகுடம் செய்து அதனை இளவரசனுக்கு சூட்டி அவரை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு இறைவன் மறைந்தார்.

    இதற்கிடையில் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்க பெற்று அனைவரும் நலமுடன் வாழ்ந்தார்கள். மேலும் அபிடேக பாண்டியன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

    • 10-ந்தேதி மாலை 5 மணி அளவில் தேரோட்டம் நடக்கிறது.
    • 11-ம் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி, மாசி திருவிழா தாணுமாலய சாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 2-ந் தேதி காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ கொடியேற்றுகிறார்.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளையில் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 10-ந் தேதி மாலை 5 மணி அளவில் இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அமர செய்து நான்கு ரத வீதிகளில் உலா வரும் தேரோட்டம் நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவான 11-ம் தேதி திரு ஆராட்டு வைபவமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    ×