search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couples misunderstanding"

    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள். எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கும் தம்பதிகளை பிரித்துவிடுகிறது. இளம் பெண்கள், காதலால் கற்பிழப்பது, தற்கொலை செய்வது, மானபங்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வேடிக்கையாய் வெளியிடும் புகைப்படங்களும், விமர்சனங்களும்கூட கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை வளர்த்து, விவாகரத்து வரை கொண்டுபோய்விடுகிறது.

    அமெரிக்காவில் 20 சதவீத விவாகரத்திற்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது 5 விவாகரத்துகளில் ஒன்று சமூக வலைத்தள பிரச்சினையால் உருவானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் வெளியாவதில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தினால் இந்திய விவாகரத்து சதவீதம் இதையும் மிஞ்சும் என்று கூறலாம்.

    ஏனெனில் இங்கு சமூகவலைத்தளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எவை, எவை அச்சுறுத்தலாக மாறும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சகஜமாக, விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். செல்போன் எண்கள், உண்மையான முகவரி முதல் தங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு பதிவிடுகிறவர்களும் உண்டு. எல்லோரும் தொடர்புகொள்ளும் விதத்தில் இணைய பக்கத்தை வைத்திருப்பவர்கள் தங்களை அறியாமலே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் நுழைவார்கள் என்ற விழிப்புணர்வு கொண்ட பெண்கள்கூட, வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நமக்கு அறிமுகமுள்ள, நம்மை அறிந்தவர்கள்தானே நமது வாட்ஸ் ஆப் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சினையை வரவழைத்துக் கொள்கிறார்கள். புகைப்படங்கள் நண்பர் மூலமாகவோ, பகிர்தல் மூலமாகவோ, குழு மூலமாகவோ மற்றவர்களுக்குச் செல்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    சமூக இணையதளங்கள் வந்ததில் இருந்து அறிமுகமில்லாத புதிய நட்பால் கற்பை இழந்தவர்கள், நகை, பணம் இழந்தவர்கள், மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் என உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதி காவல் நிலையம் செல்லாமல், வலைத்தள கணக்கை மூடிவிட்டு, செல்போன் எண்களை மாற்றிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.



    விவாகரத்திற்கு வழிவகுத்த தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்த சமூக வலைத்தளங்கள் எவை என்பது பற்றி அமெரிக்காவில் ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில் 66 சதவீதம் பேர் பேஸ்புக்கை குறிப்பிட்டுள்ளனர். மை ஸ்பேஸ் தளம் 15 சதவீதமும், டுவிட்டர் 5 சதவீதமும் பாதிப்புக்கு துணையிருந்ததாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கூறி உள்ளனர்.

    மனைவி படுக்கை அறைக்கு வந்தபிறகு, கணவர் தன்னுடைய நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் சமூகவலைத்தளம் வழியாக உரையாடுவது மனைவிமார்களை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. அதே நேரம் மனைவி தனது நெருங்கிய வட்டத்துடன் சமூகவலைத்தளங்களில் உறவாடும்போது, கணவர் இன்னும் ஆக்ரோஷம் காட்டுவதும், சந்தேகம் அடைவதும் அதிகரித்து பிரச்சினைக்கு வழிவகுத்துவிடுகிறது.

    வாட்ஸ் ஆப் வலைத்தளம் வந்தபிறகு இந்த பிரிவுகளும், உறவு மோதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இந்த தளத்தில் ஒருவர் எப்போது செய்தியை பார்த்தார் என்பதை அறிய முடியும் என்பதால் அன்புக்குரியவர், தான் அனுப்பிய தகவலைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பதை கணித்து அதையும் பிரச்சினை யாக்கிவிடுகிறார்கள். ‘ஆன்லைனில் இருந்துகொண்டு தன் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கிறாரே, நீண்ட நேரம் யாருடன் உரையாடிக் கொண்டிருப்பார்?’ என்பது போன்ற கேள்விகளும், சிந்தனைகளும் நிறைய குடும்பங்களில் சந்தேக விதைகளைத் தூவுகின்றன.

    கடைசியாக எப்போது வாட்ஸ் ஆப்பை திறந்தார் என்ற நேரத்தை கணிக்க முடிவதால், இரவு வெகுநேரம் கழித்து இணையத்தை திறக்கும் கணவர் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழலை உருவாக்குகிறது. நாம் தூங்கிய பிறகு யாரிடம் உரையாடினார், என்ன பேசியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், சந்தேகமும் பிரச்சினைக்கு அடித்தளமிடுகிறது.

    நண்பர்கள், தோழிகள், காதலிகளின் புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்தாலோ அல்லது பாராட்டி எழுதினாலோ அதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கும், இவருக்கும் என்ன உறவு? என்ற சந்தேக கண்ணோட்டத்துடன் சிலர் பின்தொடர தொடங்குகிறார்கள். அது மோசமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா சென்றது, விழாக்களில் பங்கேற்றது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் அதுவும் பிற்காலத்தில் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.



    விழாவில் தோழியுடன் எடுத்த படத்தைக் காட்டி அவள் யார்? என்று விசாரிக்கும் மனைவிமார்கள் உண்டு. அடுத்து அவளை எப்போதெல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் காட்டுவார்கள், அல்லது அதையே சந்தேக நோக்குடன் பார்ப்பார்கள். அடுத்து அலுவலக மீட்டிங் என்றோ, விழா என்றோ கூறினால் அந்த தோழியும் இடம்பெறுவாளா என்று நோட்டமிடுவார்கள். இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

    கணவரின் பேஸ்புக், டுவிட்டர் பாஸ்வேர்டுகள் தங்களுக்கும் தெரியவேண்டும் என்று விரும்பும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலும் இணையதள பிரச்சினைகளை அறிந்தவர்கள் கணவரின் கணக்கையே தனது கணக்காக பயன்படுத்துவதும் உண்டு. அப்படியிருக்கும்போது நண்பன் என நினைத்து அவருடைய மனைவியிடம் உறவாடும் ஆண் நண்பர்கள், ரகசியங்களை பகிர்ந்து கொண்டு சிக்கலை கிளப்பியிருக்கிறார்கள். மனைவியின் தோழிகளுடன் நட்பு பாராட்டி, அதனால் மனைவியின் கோபத்துக்கு ஆளான ஆண்களும் இருக்கிறார்கள்.

    வலைத்தளங்களில் ஞாபகப்படுத்தும் விதமாக பழைய புகைப்படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து காண்பிக்கும் வசதி உண்டு. அப்போது பழைய தோழிகள், பழைய ஆண் நண்பர்களைப் பற்றிய புகைப்படத்தை கணவரோ, மனைவியோ பார்க்கும் சூழல் ஏற்பட்டதால், சிலரது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. தற்கால விவாகரத்து வழக்குகளின்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்கள், வலைத்தள புகைப்படங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன. விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கேட்ட பெண்கள், விவாகரத்திற்குப் பிறகு, கணவர் சுற்றுலா சென்றது, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களைக் காட்டி, அதிக சம்பாத்தியம் இருப்பதாக கூறி ஜீவனாம்சத்திற்கும், குழந்தை பராமரிப்பிற்கும் கூடுதல் தொகை கேட்ட முறையீடுகளும் நிகழ்ந்துள்ளன.

    குழந்தைகளை தாங்கள்தான் பராமரிப்போம் என்று கூறி குழந்தையை தன்வசம் வைத்துக் கொண்ட தாய், வேலைக்குச் சென்று தாமதமாக வருவதையும், பார்ட்டிகளில் கலந்து கொண்டதையும், அப்போது மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதையும் வலைத்தளங்களில் அறிந்து கொண்டு, அவற்றை காரணம் காட்டி, குழந்தை மீது அதிக அக்கறை காட்டாதவர் என்று கூறி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டும் மேலைநாடுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    எனவே சாதாரண விஷயங்களும், சமூக வலைத்தளங்களால் பிரச்சினைக்குரியதாக மாறும் அபாயம் நிறைய உண்டு. எனவே திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, விவாகரத்து ஆனாலும் சரி, இணையதளம் என்றால் எச்சரிக்கை அவசியம். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை மற்றவர் ரசிக்கும் வேடிக்கைக் களமாக மாறிவிடும். 
    கணவர் சில விஷயங்களை எதிர்பார்க்காமல் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவாள். இப்போது கணவன் எந்த விஷயங்களை செய்தால் மனைவி சந்தோஷப்படுவாள் என்பதை பற்றி பார்க்கலாம்.
    கணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், மனைவிக்கு தேவையான வேலைகள் என்னென்ன நீங்கள் ஒரு கணவனாக செய்துள்ளீர்கள்? அட்லீஸ்ட் இந்த லிஸ்ட்ல இருக்க இந்த விஷயமாவது கட்டின மனைவிக்காக செஞ்சிருக்கீங்களா?

    மனைவி சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவை செய்துள்ளீர்களா? இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.

    சமையல் செய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் அவருடன் சேர்ந்து சமைக்க உதவுவது.



    சண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக சென்று மன்னிப்பு கேட்டு, அரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா? இல்லையேல் அடுத்த முறை சண்டையிடும் போது கொடுத்து பாருங்கள். சண்டை மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள கோபமும் ஒரு நொடியில் அடங்கிவிடும்.

    இப்போதெல்லாம், மாடர்ன் கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள். இது உடலளவில் பாதிக்கப்படும் அவர்களுள் மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் மனைவியை அனுசரித்து பழகுங்கள்.

    மனைவி வேலை விஷயமாக அல்லது வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் அவருக்காக ஏர்போர்ட், ரெயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், அவருக்காக காத்திருந்தது உண்டா? இது போன்ற செயல்களை நீங்கள் மனம், முகம் சுளிக்காமல் செய்தால், அதை பற்றி தம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவது மனைவிக்கு பிடித்தமான செயலாகும்.
    சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றி பாருங்கள் அன்பு நிலைத்திருக்கும்.
    ‘அதிகம் விவாதிக்கிற, சண்டை போட்டுக் கொள்கிற தம்பதிகளே ஒருவருக்கொருவர் அதீத அன்புடன் இருக்கிறார்கள்’ என்கிறார்கள்.

    பிடிக்காத ஒருவர் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும், பிடித்த ஒருவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதும்தான் தம்பதிகளின் சண்டைக்கு முக்கிய காரணம். கருத்து வேறுபாடு இல்லாத காதலர்களே / தம்பதிகளே கிடையாது. அந்த கருத்து வேறுபாட்டை இருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த உறவு தித்திக்கிறது.

    அதனால், சண்டையில்லாத உறவு சாத்தியம் இல்லை. ஆனால், சண்டை வரும்போது இந்த 6 விஷயங்களை மட்டும் மறக்காமல் பின்பற்றுங்கள்.

    1. தன்னுடைய கருத்தை மற்றவரின்மேல் திணிக்கக் கூடாது.
    2. பார்ட்னர் முக்கிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதை திசை திருப்பவோ, புறக்கணிக்கவோ கூடாது.
    3. அடுத்தவர் பேசுவதையும் கவனியுங்கள்.

    4. மற்றவர் நலன் சார்ந்ததாகவே உங்கள் முடிவுகள் இருக்கட்டும்.
    5. கடுமையான வார்த்தைகள் கூடவே கூடாது.
    6. விட்டுக் கொடுப்பதன் மூலம் உறவைப் பாதுகாக்க முடியும்.‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்’ என்று வள்ளுவர் சொன்னது சரிதான்!
    விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
    திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

    ‘தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.

    கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.

    கணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.

    ஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.

    அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜான்காட்மேன், தம்பதிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பற்றி பட்டியலிடுகிறார். ‘அன்பாக, அனுசரனையாக பேச பெரும்பாலான தம்பதிகளுக்கு தெரிவதில்லை. ஒருவரை ஒருவர் குறை சொல்வது கூட பெரிய விஷயமல்ல. மற்றவர் முன் குறை சொல்வதுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை உறவைப் பலப்படுத்தவும் செய்யும், பாழ்படுத்தவும் செய்யும். மோசமான பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருப்பதே நல்லது. ஒருவரை ஒருவர் உடல் குறைபாடுகளைப் பற்றி இழிவாகப் பேசுவது, மற்றவர்கள் முன் அவமதிப்பது, பாதுகாப்பை பறிப்பது, சந்தேகப்படுவது போன்ற பேச்சுவார்த்தைகள் வாக்குவாதத்தில் முடியும்.



    சண்டை போட்டு முடிந்த பின்பு சிந்திப்பதும், சமாதானம் செய்வதும் அதிகப் பலனை தராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது முக்கியமல்ல. அந்த பேச்சுவார்த்தை எதில் போய் முடிகிறது என்பது தான் முக்கியம். குடும்ப விஷயங்களை பேசும்போது பிரச்சினைக்குரிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இருவருக்கும் இடையே அறிமுகமாகும் வேற்றுநபரால் பிரச்சினை ஏற்படக்கூடும். அந்த வேற்றுநபர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மாவாகக் கூட இருக்கலாம். அவர்கள் நன்மை செய்பவராகவே இருக்கலாம். ஆனால் தன்னை விட வேறுநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது உறவுகளுக்கு இடையில் பிரச்சினை தோன்றுகிறது’ என்கிறார், ஜான் காட்மேன்.

    தொலைக்காட்சி நடிகை சுபாங்கி ஆத்ரே சொல்கிறார்:

    ‘‘சினிமா, தொலைக்காட்சி நடிகைகளை பொறுத்தவரை திருமண வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமுமில்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். பெண்களில் நிறைய பேர் சந்தேகத்திற்குள்ளாகிறார்கள். தேவையில்லாமல் துணை ஏற்படுத்தும் சந்தேகத்தால் திருமண முறிவுகள் அதிகரிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்தான்! திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டவர்கள் விவாகரத்தில் இருந்து ஓரளவு தப்பித்துவிடலாம். என்னோடு வேலை செய்யும் பலருடைய பிரச்சினை இது தான். கணவன் - மனைவி இடையே நம்பிக்கை இன்மையால் வாழ்க்கை துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த விஷயத்தில் என் கணவர் அப்படி அல்ல. அவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிரச்சினைக்குரிய விஷயங்களை ஓரங்கட்டிவிடுகிறது’’ என்கிறார்.

    மனநல மருத்துவர் பூஜா ஆனந்த் சர்மாவின் கருத்து பெண்களும் விவாகரத்துக்கு ஒருவகையில் முக்கிய காரணமாகிவிடுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.

    ‘‘முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.



    முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது’’ என்கிறார், பூஜா.

    அவசரகதியில் தம்பதியர் எடுக்கும் முடிவு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக செய்துவிடும் என்கிறார் தொலைக்காட்சி நடிகை வந்தனா பதாக். அவர் சொல்கிறார்: ‘‘இப்போது எல்லோரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம். இதுவும் கணவன் - மனைவி பிரிவுக்கு காரணம். அவர்கள் குடும்பத்திற்கென்று நேரத்தை ஒதுக்கினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

    தன் காலில் தானே நிற்கும் பலம் இருக்கும் தைரியத்தில் இன்று திருமண வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டால் நாளை தனிமை என்னும் பயங்கரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவாகரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். மனதாலும் சரி உடலாலும் சரி அந்தப் பாதிப்புகள் உடனே வெளியே தெரியாது. அது குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். படித்தவர்கள் கூட இதுபற்றி யோசிப்பதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

    நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்’’ என்கிறார். 
    ×