என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மரியஜெனிபர் போட்டியிடுகிறார். விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (28-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
நாளை காலை 9 மணிக்கு விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனையில், அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு அழகிய மண்டபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரியஜெனிபருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
11 மணிக்கு திங்கள்நகரிலும், 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் பெல்வின் ஜோ மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் அவர் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்கள். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்து இருக்கும். கூட்டணி வைத்தவர்களுக்கு சைக்கிள், குக்கர் சின்னம் போல் எனக்கும் கிடைத்து இருக்கும். தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை.
சின்னத்தில் விவசாயம் இல்லை என்றால் என்ன நான் எப்போதும் விவசாயி தான். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்திலேயே போட்டியிடுவதற்காக கடைசி நொடி வரையும் போராடினோம். அது கிடைக்காததால் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள மைக் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அம்பேத்கர், காமராஜர், அண்ணா மற்றும் உலக தலைவர்களான ஸ்டாலின், பெடல் காஸ்ட்ரோ என பல மேதைகளை இந்த "மைக்"கே உருவாக்கி இருக்கிறது.
எனவே மக்கள் மத்தியில் இந்த சின்னத்தை கொண்டு சேர்த்து அந்த மேதைகளை போல நாங்களும் தேர்தலில் புரட்சி செய்வோம்.
எந்த சூழலிலும் யாருட னும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிரபாகரனின் மகனான நான் இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். 7 சதவீத ஓட்டுகளை வாங்கியதற்கே எங்கள் மீது இவ்வளவு பயமா? வரும் காலங்களில் எப்படி வருகிறோம் பாருங்கள்.
பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் முடிந்த பிறகு எங்களுக்கு தேசிய விலங்கான புலி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோர உள்ளோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும். இல்லையென்றால் எண்களில் களம் இறங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான பலம் என்ன என்பது தெரிய வரும்.
பா.ஜனதா களம் இறங்கும் தொகுதிகளில் தி.மு.க. வலுவான போட்டியை உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார். அதில் தேர்தலில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தலில் சின்னம் இருக்க கூடாது, வாக்கு எந்திரங்களுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார்.
- தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாகவும், 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
இவ்வாறாக ரொக்கப்பணம், வங்கி கையிருப்பு என மொத்தம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தனது கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்கப்பணம், கையிருப்பு, கார் என மொத்தம் ரூ.66 லட்சத்து 21 ஆயிரத்து 347 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 550 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 897 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 கடன் இருப்பதாகவும், கணவர் பெயரில் கடன் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.38.77 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.18.54 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பாக ரூ.30.34 கோடி காட்டியிருந்தார். ஆனால் இந்த முறை மொத்த சொத்து மதிப்பாக ரூ.57.32 கோடி காட்டியுள்ளார்.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.27 கோடி வரை உயர்ந்துள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.17 கோடி அளவும், அசையா சொத்து மதிப்பு சுமார் ரூ.10 கோடி அளவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
- எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசலியான் நசரேத், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் எடப்பாடி பழனிசாமி தங்கி உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் பசலியான் நசரேத், ராணியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., பார்வர்ட் பிளாக், புரட்சி பாரதம் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் மதியமே தொண்டர்கள் வர தொடங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் நாகராஜா திடலுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. தொண்டர்களின் வருகையால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு சங்கரன்கோவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
- தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
- தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-
* சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
* தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
* மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து பரிந்துரைக்க வலியுறுத்தப்படும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும்.
* 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
* கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் உணவு தானியங்களுக்கு தடை விதிக்கப்படும்.
* குறிப்பிட்ட காலத்துக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
* மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை திரும்ப பெறப்படும்.
* தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
* தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
* கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு கொடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.
* அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.
* சென்னையில் ரூ. ஆயிரம் கோடியில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.
* நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* போதைப் பொருட்களை ஒழிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.
* மது விலக்கை நடை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புகையிலை பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
* ஜி.எஸ்.டி. வரி 2 அடுக்குகளாக குறைக்கப்படும்.
* பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும்.
* தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறையும்.
* தொழில் தொடங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.
* தருமபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ஒரு ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
* தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.
* திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்.
* மது விலக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.
* பாட திட்டங்களில் விளையாட்டு சேர்க்கப்படும்.
* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.
- கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கோவை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.
இதனையொட்டி அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.
பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.
முக்கிய இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசனையும் மேற்கொள்கிறார். நேற்று தொகுதிக்குட்பட்ட பல்லடம், சூலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இன்று பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களுடன் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
#WATCH | Tamil Nadu BJP chief K Annamalai files nomination from Coimbatore parliamentary constituency pic.twitter.com/WYHWmmASrV
— ANI (@ANI) March 27, 2024
- ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம்.
- சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம்.
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம்.
ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தை மதித்தாலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளேன்.
சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம். புதிய சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவேன்.
பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் தற்போது இல்லை" என்றார்.
- திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
- ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை.
திருச்சி:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு காலை 11 மணிக்கு கிடைக்கப் பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையத்தில் 188 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பம்பரம் சின்னம் இல்லை. அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் ம.தி.மு.க. தவிர்த்து வேறு யாரும் பம்பரம் சின்னம் கேட்கவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு இல்லை என ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரியவருகிறது.
- தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.
23-ந்தேதி தஞ்சை, நாகையிலும், 25-ந்தேதி நெல்லை, கன்னியாகுமரியிலும், நேற்று (26-ந்தேதி) தூத்துக்குடியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேசினார். தூத்துக்குடியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் வருகை தந்தார்.
மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.

இதில் தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு களம் காணும் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேச உள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பாராளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தென்காசி சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நட்டு, தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிரசார கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று பின்னர் விமானத்தில் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சென்றடையும். அதே போல் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகளும் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்படும். அத்துடன் இன்று முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
- 13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பிரேமலதாவின் தே.மு.தி.க. இடம்பெற்றுள்ளது. 5 பாராளுமன்றத் தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரேமலதாவின் சுற்றுப் பயண திட்டத்தை இன்று (புதன்கிழமை) காலை தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டது. பிரேமலதா எந்தெந்த தேதிகளில் எந்தெந்த ஊர்களில் பிரசாரம் செய்கிறார் என்ற விவரம் வருமாறு:-
29-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, 30-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 31-ந்தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், 1-ந்தேதி பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி.
2-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், 3 மற்றும் 4-ந் தேதி திருவள்ளூர் , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 5 மற்றும் 6-ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, 7 மற்றும் 8-ந் தேதி கடலூர்.
9 மற்றும் 10-ந் தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், 11-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்.
13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனி, 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகர், 17-ந் தேதி மாலை அவர் விருதுநகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கடைசி 2 அல்லது 3 நாட்கள் மட்டும் பிரேமலதா பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.
- தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தலைவர்கள் பிரசாரத்துக்கு 21 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
- அநேகமாக பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வருவார் என்று தெரிகிறது.
சென்னை:
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 4 தடவை வந்து பிரசாரம் செய்துள்ளார். சென்னை, பல்லடம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களில் அவரது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளார். தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் சுற்றுப்பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தலைவர்கள் பிரசாரத்துக்கு 21 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அந்த காலக்கட்டத்தில் பிரதமர் மோடி 3 தடவை வர வாய்ப்பு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒரு தடவை வர மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அப்போது அவர் 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. கரூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 3 நகரங்களுக்கு பிரதமர் மோடி செல்லக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
அநேகமாக பிரதமர் மோடி அடுத்த வாரம் தமிழகம் வருவார் என்று தெரிகிறது. ஆனால் உத்தரபிரதேசத்திலும் அவர் 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கேற்ப அவரது தமிழக சுற்றுப் பயணம் அமையும்.
வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் 2-வது வாரமும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு மீண்டும் வருவார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
- வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார்.
- கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட அமைச்சர் நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று வேட்பாளராக களம் இறங்கியவுடன் தேர்தல் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறார்.
கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.
சென்னைக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து நலம் விசாரித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து தனக்காக புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு ராமதாஸ் பதிலளிக்காவிட்டாலும், கடலூர், விழுப்புரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால் புதுச்சேரியிலும் அவர் பிரசாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் புதுவை மாநில பா.ம.க. தலைவர் கணபதியிடம், நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.






