என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கிறார்கள். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதை தடுக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ.100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ.200 கோடி என ரூ.300 கோடியில் உலகமே வியக்கும் வகையில் திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்தப்பட பெறும் திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இந்த பணியை தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பகுதி மக்களுக்காக குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடியில் சரி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தந்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படும்.

    திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி சொத்து வரி குறைக்கப்படும். தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு. எனவே அனைத்து நல்ல திட்டங்களை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது.
    • இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

    இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

    இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். இன்று முதல் 3 நாட்களும் மதுகுடிக்க முடியாது என்பதால் பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர்.

    மேலும் பலர் நன்றாக மது குடித்து விட்டு தங்களது தேவைக்காக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒரு பீர், 3 குவார்ட்டர் பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி கூடுதல் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.

    ஆனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று குவிந்த மது பிரியர்கள் மூன்று, மூன்று பாட்டில்களாக வாங்கி தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.

    இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத் தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

    இதைத் தொடர்ந்து அது போன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட 2½ மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் 2½ மடங்கு அளவுக்கு நேற்று கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மீண்டும் மூடப்படும். இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது.

    கோவில்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பகுதியில் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜவஹர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி வீரபாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் அதற்கான ஆவணங்ளை கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி யராஜனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தார்-கடம்பூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த மசாலா பொருட்கள் வியாபாரி முத்துக்குமார் என்பவர் எவ்வித உரிய ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய்எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜிடம் ஒப்படைத்தனர்.

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.
    • மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் பல துறைகளை சேர்ந்த 4 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதியையும், ஒரே தொகுதிக்குள் பணியாற்றினால் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வசதியையும் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

    வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரித்து, அவர் நியமிக்கும் அதிகாரி மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார். அதன் பின்னரும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணி வரை தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும்.

    அத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். அங்கு அவர் சென்று அந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை அளித்துவிட்டு, அவர் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்று வருவார்.

    இந்நிலையில் இந்தப்பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், இதனால் கால விரயம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, தபால் ஓட்டுகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்து, தொகுதிகளுக்கு பிரிந்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

    அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுள்ளது.


    இங்கு இன்று காலை 9 மணியில் இருந்து, மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்தல் கமிஷனின் தபால் ஓட்டுகளுக்கான இந்த புதிய நடைமுறையின் படி திருச்சியில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து, திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள்.

    இங்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் அதன்படி நேற்று வரை பெறப்பட்ட எல்லா தபால் ஓட்டுகளும் திருச்சி மையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, உடனடியாக எல்லா தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் கால விரயம் கூடுதல் செலவு ஆகியவை தவிர்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன்.
    • ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

    காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

    இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

    தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

    பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
    • தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.


    திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

    நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?

    தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • நாக்பூர் தொகுதிக்காக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான நிதின் கட்கரி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாக்பூர் தொகுதிக்காக மட்டுமே இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கடந்த பத்து ஆண்டுகளில் அவர் செய்த பணி குறித்த தகவல்களையும் அதில் சேர்த்துள்ளார்.

    அந்த வகையில், மூன்றாவது முறை வெற்றி பெறும் பட்சத்தில் நாக்பூரை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக அவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாக்பூரை முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியோடு சேரிகளை ஒழுங்குப்படுத்தி, புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிக பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படும்.

    நாக்பூரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2029 ஆம் ஆண்டிற்குள் விதர்பா பகுதியில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 2070 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நிதின் கட்கரி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளார். 

    • குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளில் 2 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.
    • ஜெயிலில் இருக்கும் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இடம் பிடித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மீடியாக்களில் தோன்றி பேட்டியளித்து வருகிறார்.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் 40 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    முக்கியமாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இடம் பெற்றுள்ளது. ஜெயிலில் இருக்கும் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங், மாநிலங்களவை எம்.பி. சஞ்ச் சிங், ராகவ் சதா, சந்தீப் பதக் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சுனிதா கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்காக ஜார்க்கண்ட் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் எனத் தகவல் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்தியா கூட்டணி கடந்த மாதம் 31-ந்தேதி டெல்லியில் பேரணி நடத்தினர். அப்போது சுனிதா கெஜ்ரிவால், கல்பனா சோரன் ஆகியோரை சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. இதில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 24 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

    • கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.
    • கோவை ரைசிங் என்ற தலைப்பில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

    கோவை:

    தி.மு.க. சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவை ரைசிங் என்ற தலைப்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு:

    கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.

    கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்.

    கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும். புதிய பசுமை தொழில் பூங்காக்கள் நிறுவப்படும்.

    நகை தொழில் புத்துயிர் பெறவும், கிரில் உற்பத்தியாளர்களுக்காகவும் கோவையில் சிட்கோ பூங்கா நிறுவப்படும்.

    விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்.

    பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கோழிப்பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சனைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
    • நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்றார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும்போது மனம் அமைதி கொள்கிறது.

    பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.

    இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யுபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடுமுழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

    ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார்.

    நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி.

    நாடு முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார் என தெரிவித்தார்.

    ×