search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul constituency"

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வேலுசாமி 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் வேலுசாமி, பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து, அ.ம.மு.க. சார்பில் ஜோதிமுருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான், மக்கள் நீதிமய்யம் சார்பில் டாக்டர் சுதாகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி முன்னிலையில் இருந்தார். 23 சுற்றுகள் முடிவில் அவர் 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு விபரம் வருமாறு:-

    தி.மு.க - 7,46,523

    பா.ம.க. - 2,07,551

    ம.நீ.ம. - 38,784

    பெரும்பாலான தொகுதிகளில் பிரதான கட்சிகளை அடுத்த 3-ம் இடத்தை அ.ம.மு.க. பிடித்திருந்தது. சில தொகுதிகளில் 3-ம் இடத்தை மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் கைப்பற்றி இருந்தன. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் 3-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர்அலிகான் பிடித்திருந்தார்.

    ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது நூதன முறையில் சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்தும், டீக்கடைகளில் டீ போட்டும், புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்ததும் பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    திண்டுக்கல்:

    எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டு முதன் முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் சந்தித்த தேர்தல் திண்டுக்கல் பகுதி மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் சுமார் 2,60,824 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். அந்த இடைத்தேர்தலில் தான் அதிமுக முதல் முதலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றிப்பெற்று திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.

    அதன் பிறகு திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க.வுக்கு மிகவும் ராசியான தொகுதியாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அந்த சூழ்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பாக வேலுச்சாமி போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பாக ஜோதிமுருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.

    இந்த தொகுதி உருவாக்கப்பட்ட 1952-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.

    1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா. இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2 முறை அ.தி.மு.க.வும், பின்பு 2 முறை காங்கிரசும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி அ.தி.மு.க. வசமானது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயகுமார் வெற்றி பெற்று எம்.பி.யானார். அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்து கூட்டணி கட்சியினருக்கே ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. தனது வேட்பாளரை நிறுத்தியது.

    இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    ×