என் மலர்
உலகம்
- எப்ஸ்டீன் கோப்பு தொடர்பாக தந்தையிடம் கேள்வி கேட்ட மகள்
- ஒருவேளை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால் எனக் கேள்வி கேட்ட மகள் பலி.
அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வருபவர் கிரிஸ் ஹாரிசன். இவரது 23 வயது மகள் லூசி ஹாரிசன் தந்தையை சந்திப்பதற்காக தனது காதலன் சாம் லிட்லர் உடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
கிரிஸ் ஹாரிசன் வீட்டின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்துள்ளார். ஆனால் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான லூசி இதை அறிந்தததும் கோபம் அடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 10 அன்று காலை துப்பாக்கி கலாச்சாரம் குறித்தும், டொனால்ட் டிரம்ப் குறித்து தந்தைக்கும் மகளுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் குறித்து எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "ஒருவேளை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?" என்று லூசி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, "எனக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள், அதனால் எனக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு இருக்காது" என்று கிரிஸ் பதிலளித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த லூசி தனது அறைக்குச் சென்றுள்ளார்.
வாக்குவாதம் நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, கிரிஸ் தனது மகள் லூசியைத் தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
காதலன் லிட்லர் ஓடிச் சென்று பார்த்தபோது, லூசி நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை மகளிடம் காட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்ததாகக் கிரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கிரிஸ் முன்னதாக மதுவுக்கு அடிமையாக இருந்தவர் என்பதும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று அவர் 500 மி.லி. வெள்ளை ஒயின் அருந்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. லூசியின் காதலன் சாம் லிட்லர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
13 வயது சிறுமியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேச பாராளுமன்றத்தின் 299 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு.
- வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வரும் பொதுமக்கள்.
வங்காளதேசத்தில் இன்று காலை 7.30 மணிக்கு பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில் இந்த தேர்தல் கவனத்தை ஈர்த்துள்ளது. 350 தொகுதிகளை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதா சார முறையில் தேர்வு செய்யப்படும்.
தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. மேலும் சில கட்சிகளும் களத்தில் உள்ளன.
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 9.58 லட்சம் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 42,779 வாக்குச்சாவடி மையங்களில் 90 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக தலைநகர் டாக்கா வில் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் நாடு முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். டாக்கா-17 தொகுதியில் போட்டியிடும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரகுமான் தனது வாக்கை பதிவு செய்தார்.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரகுமான் வாக்களித்தார். தேர்தல் நேரத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டன. போகுரா பகுதி வாக்குச்சாவடி அருகே பி.என்.பி கட்சியின் மாணவர் தலைவர் மிலோன் மியா கத்தியால் குத்தப்பட்டார்.
பரிசாலின் பாபுகஞ்ச் உபாசிலா பகுதியில் பணம் மற்றும் தேர்தல் சீட்டுகளுடன் திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சில மாவட்டங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
வாக்குப்பதிவு மாலை 4.30 மணிக்கு முடிவடையும். அதன்பின் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தலின் முழுமையான வெற்றி விவரம் நாளை தெரியவரும். மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் கலிதா ஜியா மறைவுக்கு அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுகிறார். அக்கட்சிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கடும் சவாலாக உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கூட்டணியில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த மாணவர் இயக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலுடன் 84 அம்ச ஜனநாயக சீா்திருத்தங்களை உள்ளடக்கிய 'ஜூலை தேசிய சாசனம் 2025' மீதான மக்கள் வாக் கெடுப்பும் நடைபெற்றது.
- முதலில் தனது தாய் மற்றும் தம்பியை சுட்டுக்கொன்ற திருநங்கை.
- தாக்குதலுக்குப் பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டம்ளர் ரிட்ஜ் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவிகள், 2 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியை உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 18 வயது திருநங்கையான இவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ்ஸி, முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பின்னரே தான் முன்பு பயின்ற பள்ளிக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு ஜெஸ்ஸி பள்ளியின் நூலகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரையும் சேர்த்து இந்த சமபவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆணாகப் பிறந்த ஜெஸ்ஸி, தன்னை திருநங்கையாக அடையாளபப்படுத்தி கொண்டார். சமூக அழுத்தம் காரணமாக அவருக்குக் மனநல பிரச்சனைகள் இருந்ததாகவும், முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று வெவ்வேறு காரணங்களுக்காக விசாரணை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அரசு அலுவலகங்களில் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.
கனடாவில் 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
- படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் இருந்தனர்.
- மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரம்.
சூடானில் உள்ள நைல் நதியில் நேற்று பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நைல் நதி மாகாணத்தின் வடக்கு பகுதியின் உள்ள ஷெண்டி மாவட்டத்தில் நைல் நதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்திலிருந்து 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
மாயமானவர்களை மீட்க சிறப்பு மீட்புக் குழுக்களையும் போதிய உபகரணங்களையும் அனுப்புமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023 முதல் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது, படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பயணிகளை ஏற்றுவது உள்ளிட்டவற்றைத்தால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
- துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
- அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான்.
தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளியில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த இளைஞன் பள்ளிக்குள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தான்.
தகவலறிந்து விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இறுதியில் அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான். அவனை கைது செய்த போலீசார் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த பள்ளி தாளாளர் மற்றும் 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்த பள்ளிக்குள் நுழைவதற்கு முன் அந்த இளைஞன் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் தனது தங்கையை கண்டித்த ஆசிரியரை தேடி அங்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
- முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது, "ஒப்பந்தம் செய்துகொள்வதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தேர்தலுக்காக நாடு முழுவதும் 43,000 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12-ம் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. 350 இடங்களைக் கொண்ட வங்கதேச பாராளுமன்றத்தில் 300 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்கதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- ஹாங்காங்கைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
- அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
பீஜிங்:
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, 'ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை' என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என கூறப்பட்டது. எனினும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.
சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது பிராந்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் நிறுத்தப்பட்டது.
ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதிசெய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டு, அவர் கடந்தாண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
ஜிம்மி லாய்க்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்தன.
இந்நிலையில், ஹாங்காங்கின் இறையாண்மை மற்றும் சட்ட விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
- பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகை சென்று சந்தித்தார்.
வாஷிங்டன்:
ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துமாறு அதிபர் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நேதன்யாகு இன்று அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்தார். வரை அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.
அப்போது, ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்தவேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் கிளர்ச்சிப் படைகளுடனான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.
- புயலின் தாக்கத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 66 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன.
- ஜனவரி 31 ஆம் தேதி வடமேற்கு மடகாஸ்கரை வெப்பமண்டல சூறாவளி ஃபிட்டியா தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், இரண்டாவது பெரிய புயல் தாக்கியதால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.
மடகாஸ்கரில் கெசானி புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமாசினாவில் நேற்றிரவு புயல் கரையை கடக்கும்போது பெய்த கனமழை, காற்றால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 20 பேர் இறந்ததாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் தேசிய இடர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 66 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. டோமாசினாவில் 90 சதவீத வீடுகளின் கூரைகள் புயலால் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து பலவீனமடைந்து வருகிறது. எனினும், தலைநகர் அண்டனானரிவோ உட்பட பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி வடமேற்கு மடகாஸ்கரை வெப்பமண்டல சூறாவளி ஃபிட்டியா தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், இரண்டாவது பெரிய புயல் தாக்கியதால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன. அக்டோபர் மாதம் நடந்த ராணுவப் புரட்சிக்கு பிறகு, மடகாஸ்கரின் அதிகாரத்தைக் கைப்பற்றிய கர்னல் மைக்கேல் ஆண்ட்ரியானிரினா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்யவும், பொதுமக்களைச் சந்திக்கவும் டோமாசினா நகருக்குச் சென்றார். இது குறித்த வீடியோக்கள் அதிபர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- இந்திய தலைவர்கள் யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை
- இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியை ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாரும் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஷ்ய எண்ணெய்யை இனி வாங்கப்போவதில்லை என்ற இந்தியாவின் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். பிரதமர் மோடி மற்றும் பிற இந்தியத் தலைவர்கள் உட்பட வேறு யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை" என்று கூறினார்.
கடந்த வாரம் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அறிவித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியையும் ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.
ஆனால் தற்போதுவரை இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
- அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளது.
இந்நிலையில் முதலில் 30 சதவீதமே வரி விதித்ததாகவும், ஆனால் கூடுதலாக 9 சதவீதம் வரிவிதிக்க ஒரு காரணம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், சுவிட்சர்லாந்து மீதான 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அது முதலில் சுவிஸ் பிரதமர் என்று நினத்தேன். ஆனால் மறுப்புறம் போனில் பேசியது சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர் கரின் கெல்லர்.
அவர் வரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.
நீங்கள் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எங்களுடன் வர்த்தகத்தில் உங்களுக்கு 42 பில்லியன் டாலர் உபரி உள்ளது நான் விளக்கினேன்.
இருப்பினும், 'நாங்கள் ஒரு சிறிய நாடு' என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன்" என்று கூறியுள்ளார்.






