search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு: பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
    X

    அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு: பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நடவடிக்கை

    பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு எதிராக ஜாமீன் வழங்கத்தக்க பிடிவாரண்டு பிறப்பித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், பாகிஸ்தான் தேர்தல் கமிஷனை அவமதிக்கிற வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக இம்ரான்கான் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அக்பர் எஸ். பாபர் என்பவர், தேர்தல் கமிஷனில் அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அது விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

    ஆனால் இம்ரான்கான், “தனிப்பட்ட ஒரு நபர் மீது தேர்தல் கமிஷன், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது, அந்த உரிமை சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஐகோர்ட்டுகளுக்கும்தான் உண்டு” என கூறினார். இதை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.

    இந்த நிலையில் இம்ரான்கான் மீதான அவமதிப்பு வழக்கில் தேர்தல் கமிஷன் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது விசாரணைக்கு இம்ரான்கான் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் பாபர் அவான், இம்ரான்கான் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வெளிநாடு சென்று விட்டு நாடு திரும்பி உள்ளதாக தெரிவித்தார். மேலும், இம்ரான்கான் தேர்தல் கமிஷனை மதிக்கிறார், தேர்தல் கமிஷன் எப்போது உத்தரவிடுகிறதோ அப்போது அவர் ஆஜராவார் என கூறினார்.



    ஆனால் வழக்குதாரர் அக்பர் எஸ். பாபரின் வக்கீல், “தேர்தல் கமிஷன் உத்தரவை இம்ரான்கான் மீறி விட்டார். அவர் தேர்தல் கமிஷனை மதித்திருந்தால் இங்கு ஆஜராகி இருப்பார். எனவே இதில் தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டிய வழக்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

    அதைத் தொடர்ந்து இந்த அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. மேலும், இம்ரான்கானுக்கு எதிராக ஜாமீன் வழங்கத்தக்க பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இம்ரான்கானை 25-ந் தேதி ஆஜர்படுத்தும்படி அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×