என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிரம்மச்சாரிணி தேவி பார்வதி தேவியின் ஒரு அவதாரம்.
- பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.
நவராத்திரி 2-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் பிரம்மச்சாரிணி தேவி. இவர் பார்வதி தேவியின் ஒரு அவதாரம் ஆவார். மேலும் மகாதேவியின் நவதுர்கா வடிவங்களில் இரண்டாவது அம்சம் ஆவார்.
பார்வதி தேவி சிவனை அடைய விரும்பி கடுமையான தவம் செய்து வந்தார். அப்போது அவர் எடுத்த தவமான, கற்பு நிறைந்த பிரம்மச்சாரி நிலைமையே பிரம்மச்சாரிணி என்ற வடிவமாக கருதப்படுகிறது.
"பிரம்மம் சாரித்தல்" எனப் பொருள் தரும் பெயர் காரணமாக, தவம், கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் ஆகியவற்றின் சின்னமாக பிரம்மச்சாரிணி தேவி கருதப்படுகிறாள்.
பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் ஜபமாலை மற்றும் மற்றொரு கரத்தில் கமண்டலத்தை ஏந்தியிருப்பார்.
இந்து தத்துவத்தில் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கும் பெண்ணைக் குறிக்கும் விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையின் சின்னமாக இருக்கிறாள்.
பிரம்மச்சாரிணியின் கதை, அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சக்தியைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. இதில் தீவிர தியானம், உண்ணாவிரதம் மற்றும் காதல் வெளிப்படுவதற்காக பல வருட காத்திருப்பு ஆகியவை அடங்கும். எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், தனது பக்தர்கள் தங்கள் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நம:" எனும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.
- நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். மற்ற மூன்று நவராத்திரிகளை கடைப்பிடிக்காதவர்கள் புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.
நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.
நவராத்திரியின் இரண்டாம் நாளும் துவிதியை திதியில் வரும் செவ்வாய்கிழமையான இன்று சிவனை பெற தவம் செய்த பராசக்தியின் வடிவமான பிரம்மசாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சக்தி மற்றும் உறுதியை குறிக்கிறது. மேலும் பிரம்மசாரிணி தேவிக்கு ஜபமாலை, கமண்டலம் சின்னமாக கருதப்படுகிறது.

பக்தர்கள் சிவப்பு ரோஜாக்கள் அல்லது செம்பருத்தி இதழ்களைப் பயன்படுத்தி இல்லத்தில் ரங்கோலி கோலமிட்டும், சிவப்பு நிற மலர்களான ரோஜாக்கள் மற்றும் செம்பருத்திகளை கொண்டு அம்மனுக்கு வழிபாடு நடத்தலாம்.
- முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கினார்.
- மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
தேசிய தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை. பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என்று தெரிவித்தார்.
மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார், பின்னர் குஜராத்தின் முதல்வரானார், பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது என்று அமித் ஷா தெரிவித்தார்.
தொடர்ந்து, முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையை மோடி உருவாக்கியதாக அமித் ஷா நெகிழ்ச்சி தெரிவித்தார்.
- பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
- நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள் மாற்றங்கான வேண்டும்.
இந்தியாவின் நீதித்துறை அமைப்பே, நாட்டை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான மிகப்பெரிய தடையாக உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் விமர்சித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற 'நியாய நிர்மாண் 2025' மாநாட்டில் பேசிய சன்யால், "வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் 20-25 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நேரத்தில் துரிதமான வளர்ச்சி தேவை. ஆனால், நீதி அமைப்பில் உள்ள மெதுவான நடைமுறைகள், அமலாக்கத்தில் உள்ள பலவீனங்கள் மற்றும் வழக்குகளில் தாமதமான தீர்ப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளன.
நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் 'மை லார்ட்' போன்ற பழமையான சம்பிரதாயங்கள், நீண்ட விடுமுறைகள் மற்றும் நீதித்துறையில் உள்ள படிநிலைகள் ஆகியவை மாற்றங்கான வேண்டும்.
நீதித்துறை என்பது ஒரு பொது சேவை. அதை மற்ற அரசு சேவைகளைப் போலவே நவீனமயமாக்க வேண்டும்
நீதித்துறை அமைப்பு முழுமையாக சீர்திருத்தப்படாவிட்டால், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கு இலக்கை நாம் அடைய முடியாது" என்று தெரிவித்தார்.
- ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
- பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது.
நாட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2016-ல் 'தி வயர்' செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரை தொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அமிதா சிங் அந்த பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர்கள் மீது 2017 இல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த கட்டுரையில், அமிதா சிங் ஒரு குழுவை வழிநடத்தி, ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வரும் நிலையில் உயர்நீதிமன்றம் பலமுறை தி வயருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி சுந்தரேஷ், "இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்வளவு காலம் இந்த வழக்கை இழுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "கிரிமினல் அவதூறு சட்டங்களை நீக்கும் நேரம் வந்துவிட்டது" என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் நீதிபதி வாய்மொழியாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் அவதூறு என்பது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் கிரிமினல் குற்றமாக (criminal offence) கருதப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது. அவதூறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும், சிறைத் தண்டனை இருக்காது.
இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
- பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய ரன்பீர் கபூர் சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.
தொடரின் ஒரு காட்சியில், ரன்பீர் கபூர் திரையில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இ-சிகரெட் புகைப்பது இடம்பெற்றுள்ளது.

இது குறித்து வினய் ஜோஷி என்ற நபர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாட்டில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை இந்தக் காட்சி கவர்ச்சிகரமானதாகக் காட்டுகிறது என்றும், இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ரன்பீர் கபூர், தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இளைஞர்களை மோசமாக பாதிக்கும் இதுபோன்ற உள்ளடக்கங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்களை விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த முழு விஷயத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
- 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.
- ஒரு ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவர் கூறியதை கேட்டு அதிகாரிகளே மலைத்துப்போயினர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒளிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்.
நேற்று காலை 11 மணிக்கு ஆப்கானிஸ்தான் விமான நிறுவனமான KAM ஏர் விமானத்தில் சிறுவன் இந்த விபரீத சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை அந்த விமானம் அடைந்த நிலையில் சிறுவனை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
ஆப்கானிய குர்தாவுடன் அந்த சிறுவன் காணப்பட்டான். அவன் பத்திரமாக இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்பின் சிறுவன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
விசாரணையில், காபுல் விமான நிலயத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்து விமானத்தின் கியர் பெட்டியில் ஏறி ஒளிந்துகொண்டதாக சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளான். ஒரு ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவர் கூறியதை கேட்டு அதிகாரிகளே மலைத்துப்போயினர்.
இதன்பின் மதியம் 12.30 மணிக்கு அதே விமானத்தில் சிறுவன் ஆப்கானிஸ்தானுக்கே பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டான்.
- ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது.
- அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தியிடம் அரங்கேறிய சைபர் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த மாதம் 5 ஆம் தேதி காலை 9:40 மணிக்கு, சுதா மூர்த்திக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுபுறம் பேசிய நபர் தன்னை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அந்த எண்ணிலிருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனிப்பட்ட தகவல்களை கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது. இருப்பினும் அந்த நபரின் பேச்சு குறித்து சந்தேகம் அடைந்த சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார்.
இந்த மோசடி முயற்சி தொடர்பாக சுதாமூர்த்தி சார்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது.
- மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.
இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சுயாதீன விசாரணை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என் கோட்டேஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார். முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் சுவிட்ச் பிழைகள் மற்றும் மின் சிக்கல்கள் போன்ற முறையான பிழைகளை குறைத்து மதிப்பிட்டு விமானிகள் மீது பழியை மாற்ற முயற்சி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விபத்து குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் விமானப் போக்குவரத்து இயக்குநரககத்தை (DGCA) சேர்ந்தவர்கள் என்பது ஒருதலைப்பட்சமாக உள்ளது. யார் மீது குற்றச்சாட்டு உள்ளதோ அவர்களே விசாரணை நடத்துவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விமானிகள் மீது குற்றம் சாட்டி 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் கட்டுரை வெளிவந்ததை பிரசாந்த் பூஷண்குறிப்பிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி சூர்யா காந்த், "இது போன்ற ஊகங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற கருத்துக்கள் ஆகும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் ரகசியத்தன்மை மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த மனு மீது பதிலளிக்க கோரி மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே "ரகசா" என்ற புதிய புயல் உருவாகி உள்ளது.
இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் காரணமாக, மணிலா மற்றும் 29 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கைகள் காரணமாக, உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு 4,00,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் செல்லும் வழியில் உள்ள தைவான் நாட்டிலும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.
- மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் வசித்து வந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ஜார்கண்ட்டில் செல்போன் தர கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள மிஹிஜாம் பகுதியில் மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் (40) வசித்து வந்தார். பல ஆண்டுக்கான திருமண வாழ்வில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காஜல் தேவி தனது கணவரிடம் செல்போனும், செலவு செய்ய பணமும் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதற்கு மகாவீர் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காஜல் தேவி, கத்தியால் தனது கணவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மகாவீர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளியான காஜல் தேவி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
- இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
- பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.






