என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பொதுத்தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
- பொதுத்தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தோ்வு இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த 3-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தோ்வு இன்று (புதன்கிழமை) முதல் மாா்ச் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 மையங்களில் 8 லட்சத்து 23 ஆயிரம் போ் எழுதினா். இதில் 7,557 பள்ளிகளில் இருந்து 8,18,369 மாணவ-மாணவிகள், 4,755 தனித்தோ்வா்கள் மற்றும் 137 கைதிகளும் அடங்குவா்.
பொதுத்தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
பொதுத்தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிா்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இதுதவிர பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தோ்வு நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், பள்ளிக்கல்வித்துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
- ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர்.
கடந்த மாதம் டெல்லி ரெயில் நிலையத்தின் நடைமேடை 13, 14, 15-ல் நின்றிருந்த உத்தர பிரதேச மாநிலம் செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் கூடியது. இதனால் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் பலியான விவகாரத்தில் ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கோட்ட ரெயில்வே மேலாளர் சுக்விந்தர் சிங், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் விக்ரம் சிங் ராணா மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையர் மகேஷ் சந்த் சைனி, ரெயில் நிலைய இயக்குநர் மகேஷ் யாதவ், முதுநிலை பிரிவு வணிக மேலாளர் ஆனந்த் மோகன் ஆகியோரை இடமாற்றம் செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
- அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது ஆகும்.
- அரசியல் தலையீடு இன்றிச் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு த.வெ.க. தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு!
நம் அரசியல் சாசனத்தின் 64ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
நம் அரசியல் சாசன 81ஆவது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் "சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது (equal population representation for each MP) இதற்கு அடிப்படையான One vote-one value' என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 8C நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.
ஞானேஷ்குமார், இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி, தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
மாநாட்டில் ஞானேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-
நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், வட்டாரநிலையிலான அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். அவ்வப்போது இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், பதில் அளிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண, அனைத்து சட்டப்பூர்வ நிலைகளிலும் அனைத்துக்கட்சி கூட்டங்கள், சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டும்.
ஒவ்வொரு தலைமை தேர்தல் அதிகாரியும் மார்ச் 31-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துணை தேர்தல் கமிஷனருக்கு பிரச்சினை வாரியான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியல் சட்டப்பிரிவு 325 மற்றும் பிரிவு 326-ன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தவொரு தேர்தல் ஊழியரோ அல்லது அதிகாரியோ மிரட்டப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும். வாக்காளரின் வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் வாக்குச்சாவடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்களிப்பதை எளிமைப்படுத்தவும், அதிகரிக்கவும் கிராமப்புற வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் கூட வாக்குச்சாவடிகள் நிறுவப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை முதல் முறையாக செயல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- டிரம்ப் அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம்.
பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை கட்டியெழுப்பி, அங்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவரது இந்த அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாலஸ்தீன அதிகாரசபை (PA) காசாவை ஆளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எனினும், இஸ்ரேல் அந்த அமைப்பின் எதிர்காலத்தை நிராகரித்தது. மேலும் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் போது வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடிவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய டொனால்டு டிரம்ப், சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா காசா பகுதியை "கையகப்படுத்தி" அதை "மத்திய கிழக்கின் ரிவியரா"வாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும், பாலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டானுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தினார். இவரது கருத்து உலகளவில் பெரும் எதிர்ப்பை தூண்டியது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் அதிபர் டிரம்ப்-இன் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிந்தது. முன்னதாக அதிபர் டிரம்ப்-இன் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்பதாக தெரிவித்து இருந்தார்.
உச்சிமாநாட்டின் நிறைவில், "விரிவான அரபுத் திட்டம்" ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
- மகா கும்பமேளாவிற்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.
- பிரயாக்ராஜில் ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ந்தேதி நிறைவுபெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும், விழா சிறப்பாக நடைபெற்றதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது கும்பமேளாவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சித்தன.
அப்போது பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற பிரயாக்ராஜில் ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை. மகா கும்பமேளாவிற்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 3 லட்சம் கோடி வணிகத்தில் சாதனை படைத்துள்ளது. மகா கும்பமேளாவின் பொருளாதார தாக்கம் இந்த ஆண்டு இந்தியாவின் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று கூறினார்.
இதனிடையே, கும்பமேளாவில் படகு ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், நான் ஒரு படகு ஓட்டுநர் குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அவர்களிடம் 130 படகுகள் உள்ளன. கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் அவர்கள் ரூ. 30 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். ஒவ்வொரு படகும் ரூ. 23 லட்சம் சம்பாதித்துள்ளது. தினசரி அடிப்படையில், அவர்கள் ஒவ்வொரு படகிலிருந்தும் ரூ. 50,000-52,000 சம்பாதித்தனர் என்றார்.
- மெரினாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
- அப்போது காரில் எடுத்து வரப்பட்ட தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெரினாவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் எடுத்து வரப்பட்ட தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கத்தை காரில் கொண்டு வந்த பிரகாஷ், கிரண், அணில், பால் ஆகிய 4 பேரை பிடித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கும் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா மீதான வரி விதிப்பு நடவடிக்கையை "வர்த்தக போர்" என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கனேடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ட்ரூடோ சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
அதிபர் டிரம்ப்-இன் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரூடோ இந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் கனடா மீது கடுமையாக வரி விதித்துவிட்டு, கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.
"இன்று கனடாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது. அதன் நெருங்கிய கூட்டாளி மற்றும் நண்பர்" என்று ட்ரூடோ கூறினார்.
அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா 155 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு உடனடியாக 25% வரிவிதிக்கும் நடைமுறையை அமல்படுத்தும். இதில் 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு 21 நாட்களில் வரிகளை விதிக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, அமெரிக்காவின் "சட்டவிரோத நடவடிக்கைகள்" அல்லது வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவதற்கான திட்டங்களையும் ட்ரூடோ அறிவித்தார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ட்ரூடோ, வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்ட கனேடியர்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளையும் கனேடிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வேலை இழப்பவர்களுக்கு ஆதரவை விரிவுபடுத்துதல் மற்றும் வணிகங்கள் நிலையாக இருக்க உதவிகள் வழங்கப்படும். பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் "இடைவிடாமல் போராடும்" என்று ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்தார்.
- அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.
- அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வர உள்ளார்.
- ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.
- மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.
சென்னை:
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மொழி சமத்துவமே தி.மு.க.வின் லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல, அது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம்.
* இந்தி மொழி மட்டுமே இந்திய நாட்டின் தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு.
* சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி.
* மத்தியில் ஆள்பவர்கள் தமிழ் பகைவர்களாக உள்ளனர்.
* தமிழ் மீது மிகுந்த பற்று வைத்துள்ளதாக கூறும் பிரதமர் மோடி சமஸ்கிருதத்திற்கு ரூ.2,435 கோடி ஒதுக்கியுள்ளார்.
* 2014-2023 வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.167 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர்.
* நிதி ஒதுக்கீட்டில் உள்ள வேறுபாடே அவர்கள் தமிழ் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டும்.
* இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.
* இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி, அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக உள்ளது.
* மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.
* தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் நிதி தராமல் ஆதிக்க மொழிகளை கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு அழிக்க துடிக்கிறது.
* தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசுவோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்றார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
- அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.






