என் மலர்
தலைப்புச்செய்திகள்
- EPFO 3.0-க்கு பிறகு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும்.
- வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணம் மிகப்பெரிய அளவில் பயன்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.
வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் EPFO அலுவலக வளாகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
அதன்பின்பு பேசிய அவர், "விரைவில் , EPFO 3.0 வரவுள்ளது. அதன்பின்பு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும். இப்போதும் நீங்கள் உங்கள் பி.எஃப் பணத்தை எடுக்க EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. EPFO 3.0 அப்டேட்டிற்கு பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த வங்கியின் ATM-களில் இருந்து உங்கள் பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
- சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மகளிருக்காக தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள்.
- சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இன்று சர்வதேச மகளிர் தினம்...
ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும்.
பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்ற கேள்விக்கு தேசப்பிதாவின் வரிகளை நினைவு கூற வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை பெண்ணின் சுதந்திரத்துடன் ஒப்பிட்டு அவர் கூறிய வார்த்தைகள்...'நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்தில் நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்து விட்டதாக பொருள்' என்பதாகும். ஆனால் இன்று அந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோமா?
எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் தான் அதனை பெண்கள் அடைந்து விட்டார்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் பள்ளிக்கூடங்களை நோக்கிய பயணம் தொடங்கியது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. விரும்பிய ஆடைகளை அணிவது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. பெண்கள் வேலைக்கு போவது, அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது, சுய தொழில் செய்வது போன்றவை தான் சுதந்திரம் என்றால் அதுவும் பெண்களுக்கு கிடைத்து விட்டது.
வீட்டை விட்டு வெளியே வந்து சாதிப்பது தான் சுதந்திரமா..!! அப்படி எடுத்துக்கொண்டால் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் சமூகத்தில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள். அவ்வையார் முதல் காக்கைப்பாடினியார் வரை சங்க காலப் புலவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏராளமான பெண்பாற்புலவர்கள் உள்ளனர்.
சுதந்திரப்போராட்டத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் தொடங்கி தில்லையாடி வள்ளியம்மை வரை ஏராளமான பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்றைய நிலையில் மருத்துவம், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இவர்களெல்லாம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றவர்கள் என்று சொல்வதை விட, சுதந்திரத்தை எடுத்துக் கொண்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள். இது நல்ல மாற்றத்தின் தொடக்கம் தான். ஆனால் இன்று வரை தொடக்கப் புள்ளியிலேயே நின்று கொண்டிருக்கிறோமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எத்தனை ஆண்களால் 'என் வீட்டில் பெண்களுக்கு சம உரிமையையும், முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். தாயாய், தாரமாய், தோழியாய், மகளாய்.. என பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை பாலியல் பதுமையாய் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை.
தற்போது வரை நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் எதுவும் அணியாமல் கூட தனியாக செல்ல முடியாது என்ற நிலையே நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்களை வக்கிரமாக விமர்சிக்கும் நபர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் பெண்களை திமிர் பிடித்தவள் என்று வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அக்கறை என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தும் நிகழ்வுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. இப்போதைய நிலையில் ஆண்களிடமிருந்து மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது. தாய்மார்களும், மாமியார்களும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். வீட்டுக்குள் முழு சுதந்திரம் கிடைத்தால் தான் சமூகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியும்.
எனவே மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்...எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களில் சோதனை தொடர்கிறது.
- தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், ஒப்பந்ததாரர்கள் இடங்கள் என 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜே மதுபான ஒப்பந்ததாரர்கள் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான ஒப்பந்ததாரர் வீட்டிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள சிவாஸ் மதுபான ஆலையிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
- குழந்தைக்கு நிஜமாகவே ரோலர் கோஸ்டரில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.
- வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் ஒரே நாளில் ஒரு கோடியே 60 லட்சம் பேரின் பார்வைகளை பெற்றுள்ளது.
குழந்தைகளின் இதயம் மென்மையானது. அவர்களின் மகிழ்ச்சியை எந்த பெற்றோரும் தன் வறுமையைக் காட்டி முடக்குவது இல்லை. அப்படியொரு ஏழைத்தாய் சிக்கலான சூழலில் எப்படி தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார் என்பது பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
அந்த தாய், வீட்டில் உள்ள சாதாரண நாற்காலி மற்றும் இணைய வீடியோவைக் கொண்டு குழந்தைக்கு ரோலர் கோஸ்டர் பயண அனுபவத்தை வழங்கி நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவரது சிறுவயது குழந்தையை நாற்காலியை திருப்பிப் போட்டு, அதன்மீது தலையணையில் அமர வைத்து நாற்காலியின் கால்களை பிடித்துக் கொள்ளச் செய்கிறார்.
நாற்காலியை தன் மடியின் மீது வைத்தபடி அதன் மற்ற இரு கால்களை தாயார் பிடித்துக் கொண்டு, ரோலர்கோஸ்டர் இணைய வீடியோவை டி.வி.யில் இயக்கிவிடுகிறார். பின்னர் அதன் போக்கிற்கு ஏற்ப தான் பிடித்துள்ள நாற்காலியை அசைத்து குழந்தைக்கு நிஜமாகவே ரோலர் கோஸ்டரில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.
குழந்தையும் மகிழ்ச்சியாக அதை அனுபவிக்கிறது. இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த இந்த வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் ஒரே நாளில் ஒரு கோடியே 60 லட்சம் பேரின் பார்வைகளை பெற்றுள்ளது. வேறு சமூக ஊடகங்களிலும் இந்த காட்சி வலம் வருகிறது.
- 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது.
- இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நில ஊழல் வழக்கில் ஆதாரமில்லை என லோக் ஆயுக்தா கூறிவிட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் இருந்து இந்தோனேஷியாவை சேர்ந்த 2 பேர் உட்பட 9 பேர் கடத்தலுக்கு உதவிய 2 பேர் என 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
- குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!- தி.மு.க. சார்பில் வருகிற 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
- கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையுடன் சர்ச்சைக்குரிய வாசகம் அடங்கிய பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வழக்கில் கனல் கண்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்ட்டது.
இதனையடுத்து, "மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்வதால்தான், இதுபோன்ற நபர்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது" என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம்.
- காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-24 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி நண்பகல் 12.32 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.01 மணி வரை
பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு. மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருவெண்காடு, திருவொற்றியூர், திருத்தணி கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-கடமை
மிதுனம்-கண்ணியம்
கடகம்-நலம்
சிம்மம்-ஓய்வு
கன்னி-புகழ்
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-திடம்
தனுசு- ஈகை
மகரம்-நன்மை
கும்பம்-உதவி
மீனம்-வெற்றி
- மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
- அரசுப்பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
இதனிடையே சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பும் மகேஷ் தெரிவித்திருந்தார்.
சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளியின் மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
- இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள்.
- வருண் பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள்.
துபாய்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் நாளை நியூசிலாந்து அணி மோத உள்ள நிலையில் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியிலும் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே அவரது பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள். அவர் போன்ற மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலருக்கு எதிராக பகலில் பேட் செய்வது சற்று எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மொத்தத்தில் இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள். அனைவரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். இது எப்போதும் சவாலான விஷயம். அவர்களை சமாளிக்க தெளிவான திட்டமிடலுடன் தயாராக வேண்டும். எங்களது பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் பெரிய போட்டிகளில் எழுச்சி பெறக்கூடியவர். பல முறை நியூசிலாந்து அணிக்காக இதை செய்திருக்கிறார். அது மட்டுமின்றி உலகில் உள்ள வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு ரன் எடுப்பதில் தனித்துவமான ஆட்டக்காரர்களில் ஒருவர். இது அவருக்குரிய நாளாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்திய அணி துபாயில் மட்டும் ஆடுவது அவர்களுக்கு சாதகமான அம்சமா? என கேட்கிறீர்கள். போட்டி அட்டவணையை உருவாக்குவது எங்களது கையில் இல்லை. இது ஐ.சி.சி.யின் முடிவு. அதனால் அது பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இந்திய அணி தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. நாங்களும் இங்கு ஒரு ஆட்டத்தில் ஆடியுள்ளோம். அதில் கிடைத்த அனுபவத்தில் இருந்து சீக்கிரமாக கற்றுக்கொள்கிறோம்.
இந்த தொடரின் தற்போதைய நிலையை பார்த்தால், 8 அணிகளில் இருந்து 2 அணியாக இறுதி சுற்றுக்கு வந்துள்ளோம். எங்களது இடத்தில் இருந்து பார்த்தால், இது பரவசமூட்டும் ஒரு சூழல். இன்னும் ஒரு ஆட்டம் தான் எஞ்சியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாறி மாறி அலைந்தது கொஞ்சம் சோர்வாகத் தான் இருந்தது. லாகூரில் இருந்து துபாய்க்கு வருவதற்கே ஒரு நாள் சரியாகி விட்டது. ஆனாலும் பயணக்களைப்பில் இருந்து மீண்டு இறுதிப்போட்டிக்கு திட்டமிடுவதற்கும், பயிற்சி செய்வதற்கும் இரு நாட்கள் உள்ளது. நிறைய பயிற்சி செய்வதை விட உடலுக்கும், மனதுக்கும் சரியான இணைப்பு இருக்க வேண்டியது முக்கியம். அடுத்த இரு நாட்களில் இதில் தான் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.






