என் மலர்
தலைப்புச்செய்திகள்
- யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
- பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-
யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
- பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (753 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி மற்றும் தஹிலா இடம்பிடித்துள்ளனர்.
முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 11வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.
அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.
- ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை- கேரளமாநில எம்.பி.
- 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால் வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்- கனிமொழி எம்.பி.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற எழை மக்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மக்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால், ஊதியத்தை விடுவிக்காமல் பல மாதங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
இன்று கேரள மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அவர் பேசும்போது "இத்திட்டம் தேவையை அடிப்படையாக கொண்டது. 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
காங்கிரஸ் எம்.பி. ஆதூர் பிரகாஷ் பேசுகையில் "ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 811 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற நிலைக்குழு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசாங்கம் தாமதமின்றி விடுவிக்குமா?" என்றார்.
இதற்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அஅச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த வருடம் கேரளா இத்திட்டத்தில் 3500 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பணத்தை விடுவிப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலுவையில் இருக்கும் நிதி இன்னும் சில வாரங்களில் விடுவிக்கப்படும்.
சட்டத்தின் அடிப்படையில், நிதி விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், மாநில அரசு முதலில் ஊதியம் வழங்கும். பின்னர் மத்திய அரசு நிதியை விடுவிக்கும். தமிழ்நாடு ஏற்கனவே 7300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. பாரபட்சம் என்பதற்கு இடமில்லை" என்றார்.
- புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
நாய்க்கடி பிரச்சினைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னும் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் சொத்து வரி குறைவாகவே உள்ளது. 1000 சதுர அடிக்கு மும்பை - ரூ.10271, கொல்கத்தா - ரூ.5850, பெங்களூர் - ரூ.5783, டெல்லி - ரூ.1302, சென்னை - ரூ.570, மதுரை - ரூ.484, கோவை - ரூ.340ஆக சொத்து வரி உள்ளது.
2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்
நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் .
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து செல்லும் சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
ரூ.95 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவரை உயர்த்தவும், குப்பைகள் கொட்ட முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் மேம்படுத்தப்படும்.
பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சல்மான் கான் , அமீர் கான் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இணைந்து கலந்துரையாடல் செய்து வீடியோ உருவாக்கியுள்ளனர். தன் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அமீர் கான் ஏ.ஆர் முருகதாஸை பார்த்து எங்கள் இருவரின் யார் உண்மையான சிக்கந்தர் என கேள்வி கேட்கிறார் அதற்கு பதி சொல்ல முடியாமல் ஏ.ஆர் முருகதாஸ் முழிக்கிறார். இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அமீர் கான் நடிப்பில் இந்தியில் கஜினி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
- எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன்
- வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
ஆளுநரை பார்த்திபன் புகழ்ந்து பேசியது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பார்த்திபனை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு குறித்து விமர்சனங்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.
உ வே சாமிநாதையரின் 'என் சரித்திரம்' புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக "தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்" என்று துவங்கி "தமிழக ஆளுனருக்கு மரியாதை" எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். "பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல" என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை "இது ஒரு வகையான positive politics " என்றார்.
பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் 'கவர்னர் பீடி' என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்! தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா"கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு" கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாக கூறி "கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி" எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய்
1-தமிழ்
2-தமிழ்
3-தமிழ்
என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி 'சங்கீ'தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு:
பத்ம விருதோ, கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்!
ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ'தமாய் பாடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
- மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
- தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை
- மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததை சுட்டிக்காட்டினார்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார். சிவசேனாவின் இருந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவிக்கு தாவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா விமர்சித்திருந்தார்.
ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர்.
போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார்.
காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியில் உள்ள மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.
அதோடு நிற்காமல் தனது ஸ்டூடியோவை சேனா தொண்டர்கள் அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள குணால் கம்ரா அவர்களை கிண்டல் செய்து பாடல் ஒன்றையும் பாடி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
- சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்துள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
- 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது அவர், 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
- மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அங்கித் விரும்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதற்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் குமார் என்பவர் கிரண் (30) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
மார்ச் 8 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை கார் ஏற்றி கொன்றேன் என்று அங்கித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.






