என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
13-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
இதனிடையே 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள்.
- ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்துவராது என முதலமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
முதல்வரின் கருத்தால் திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது, கட்சியின் தலைவர் என்ற முறையில் கருத்து கூறியுள்ளார் முதல்வர்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறியுள்ளார், இதனால், கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள். ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.
காங்கிரசாரிடம் எந்த கலக்கமும் இல்லை, நாங்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள், விரைவில் முதல்வரை சந்திப்போம்.
தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகு விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு எங்களுக்குள் உள்ள பிரச்சனையை நாங்கள் பேசி தீர்வு காண்போம் என பதில் அளித்தார்.
- ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும்.
- ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.
ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.
ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.
எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.
- தேசிய செயற்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் குழு அமைப்பு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தோழர்கள் டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொது மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு "பாலன் இல்லம்" எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தியாகராயா நகர், சென்னை - 600 017, அலைபேசி எண்: 98408 54707, மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmail..com. " எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருகின்ற சட்டசபை தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.
மேலாண்மைக் குழு அமைப்பாளர் - பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)
இணை அமைப்பாளர் - எஸ்.ஆர்.சேகர் (மாநில பொருளாளர்)
இணை அமைப்பாளர் - ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)
இணை அமைப்பாளர் - மா. வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)
இணை அமைப்பாளர் - மாலா செல்வகுமார் (மாநில பொதுச் செயலாளர், ஓபிசி அணி)
இணை அமைப்பாளர் - எஸ்.ஆர். ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.
- கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.
சென்னை சோழிங்கநல்லூரில் த.வெ.க. தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என தி.மு.க. அறிவிக்குமா?
* கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது.
* முதலமைச்சர் நாற்காலியில் ஒரு கால் மட்டுமே தி.மு.க.வுடையது.
* கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
- அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சகோதரர்களாக பழகுகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் தலைமை பலமுறை சந்தித்து பேசியுள்ளது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகு பேசலாம் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை உடனே அமைக்குமாறு காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் தி.மு.க.வில் இன்னும் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைமை வற்புறுத்தி 70 நாட்கள் ஆகியும் குழு அமைக்கப்படவில்லை. இது காங்கிரஸ் தலைவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "நாங்கள் தி.மு.க.வில் பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர்கள் என்று 70 நாட்களாக காத்திருக்கிறோம். அவர்கள் குழு அமைக்காதது வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லப்பெருந்தகை கூறுகையில், "ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொகுதி பங்கீட்டு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது காங்கிரசுக்கு தர்மசங்கடமாக உள்ளது. ஏற்கனவே பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் இந்த தர்ம சங்கடத்தை அனுபவித்து உள்ளோம்.
எனவேதான் தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று தி.மு.க.விடம் வலியுறுத்தினோம். குழு அமைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் குழு அமைக்காதது வேதனை அளிக்கிறது.
காங்கிரஸ் கட்சி தலைமை என்னிடம் சில கருத்துக்களை சொல்லி உள்ளது. அந்த கருத்துக்களை முதலமைச்சரை பார்த்து தெரிவிக்க இருக்கிறேன்" என்று கூறினார்.
அது என்ன கருத்துக்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, "அதுபற்றி வெளியே சொல்ல முடியாது" என்றார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்துள்ள பேட்டியில், "தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்துதான் சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. அது எங்களுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். சட்டசபையில் முறிவை ஏற்படுத்த முடியுமா? என்பதற்காக சிலர் சதி செய்கிறார்கள். அரசியலை தாண்டி ராகுல் காந்தி எனது சகோதரர் போன்றவர்" என்று கூறி உள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆட்சியில் பங்கு என்கிற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று கேள்விக்குறி எழுந்து உள்ளது.
இதற்கிடையே ஆட்சியில் பங்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சரின் கருத்தால் தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எதிர்பார்ப்பு இருக்கும். அதை கூறுவது ஜனநாயகம். கட்சியின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து கூறி உள்ளார்.
அவர் சொன்னது அவரது கருத்து. தி.மு.க.வின் கருத்து. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறி உள்ளார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.
ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். தமிழ்நாட்டு நலனுக்கும், 2 கட்சிகளுக்கும் எது நலனோ அதை கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் கலந்து பேசி முடிவை எடுப்பார்கள்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சகோதரர்களாக பழகுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன.
- தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கட்சியை பலப்படுத்துவது, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக வருகின்றன.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
- போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
சென்னை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள் என்றவாறு சீமானும் வேனில் ஏறினார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். சீமான் கைது செய்யப்பட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன்.
- இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆட்டம் போட்ட சூரனை முருகன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ? அதேபோல் ஆட்டம் போட்டவர்களை தலைவர் விஜயின் தம்பிகள் சம்ஹாரம் செய்யப் போகிறார்கள். இனி வரும் காலம் நம் காலம். அடுத்த முதலமைச்சர் விஜய் தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள். 2 பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.
கடந்த காலங்களில் தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். ஆனால் இன்றைய தினம் விருப்பமனு வாங்குவதற்கு கூட கட்சியில் ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் உலகநாயகன் கமலஹாசன் வந்தார். தி.மு.க. மீது கூர்மையை தீட்டினார். ஆனால் தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன். இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் 1 கோடி இளைஞர்களை வைத்திருக்கிற தலைவனை இன்று தான் அரசியல் பார்க்கிறது.
தி.மு.க.விற்கு உழைத்தது உனது மகனா?, தி.மு.க.விற்கு வேர்வை பாய்ச்சியது உனது குடும்பம் மட்டும் தானா? தி.மு.க.விற்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியது உங்கள் குடும்பம் மட்டும் தானா? உதயநிதிக்கு ஒரு திருக்குறளை ஒழுங்கா சொல்ல தெரியுமா? மாநில சுய ஆட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் நிறுத்திவிடுகிறேன்.
ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும் போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும்.
நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதலமைச்சர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. ரேம்வாக்கிற்கு எங்கள் தளபதி போடும் பேண்ட் கலரில் முதலமைச்சர் பேண்ட் போடுகிறார். வேறு கலர் கிடைக்கவில்லையா. கலரும் களவு தானா? எங்கள் தளபதி போல் அவரும் ரேம்வாக் போகிறார். இந்த ரேம்வாக்கை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே எங்கள் தளபதி விக்கிரவாண்டியில். எங்கள் தளபதி ராம் வாக் செல்ல அவருக்கு தகுதி இருக்கிறது. உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கிறது?.
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். யாராவது தி.மு.க.வினரை பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள். விசில் ஊதும் போது அவரது செவில் கிழியும் அளவிற்கு ஊத வேண்டும். யானை பிளிரும் ஓசையை விட விசிலின் ஓசை அதிகமானது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் விஜய ராஜ், பத்ரி பிரசாத், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் மதன், யாசர் அரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
- சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆரணி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது37). இவரது மனைவி கலையரசி. இவர்கள் 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யனார் பாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரெயில் சென்றபோது சிவகண்டன் கதவை திறந்து கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஓடும் ரெயிலில் இருந்து சிவகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது 2 பேரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதைபார்த்த சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து வந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
- தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களான அத்திக்கோம்பை, கள்ளி மந்தயம், அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, புதுச்சத்திரம், விருப்பாச்சி, லக்கையன்கோட்டை பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் 65 சதவீத காய்கறி தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் நாளை மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஸ்டிரைக் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வாகனங்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் தங்களுக்கு காய்கறிகளை அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கேரளாவில் நாளை வேலை நிறுத்த போராட்டத்தால் காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என அம்மாநில வியாபாரிகள் கூறி உள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மார்க்கெட்டில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.






