என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 49-வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி உரையாற்றினார். அவர் பேசுகையில்,
தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.
மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.
- படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் 'காக்கா முட்டை' எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு 'லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்துகாணப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.94 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
இருப்பினும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760
24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-11-2025- ஒரு கிராம் ரூ.176
25-11-2025- ஒரு கிராம் ரூ.174
24-11-2025- ஒரு கிராம் ரூ.171
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- த.வெ.க.வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைகிறார். செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர்களும் இணைகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை த.வெ.கவினர் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சென்னை நீலாங்கரை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார். இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்தில் இருந்து பனையூர் அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
த.வெ.க.வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.
- வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும் ஏமன் நாடு பரிந்துரைத்த 'டிட்வா' என்ற பெயர் புயலுக்கு சூட்டப்பட உள்ளது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கையை ஒட்டி உள்ள கடற்கரை வழியாக நகரும். புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- மகாலிங்கம் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
- காவலர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் தனது தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
- முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!
தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!
பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்!
தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!
#EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்! என்று கூறியுள்ளார்.
- வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.
- சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் வழங்கிக் கெளரவித்தார்.
- வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq இயக்கத்தின் மிக உயரிய அங்கீகாரமான வெள்ளி யானை விருதினைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
மிக உயரிய வெள்ளி யானை விருதினை மாணவர்களின் நலன் காக்கும் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களான என் அன்பு மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
அன்பும் நன்றியும்!
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
- செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
- த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினர். இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் இன்று சந்தித்து பேசினார். இதனால் த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதே சமயம், ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரனும் த.வெ.க. கூட்டணியில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், மேலும் சில அ.தி.மு.க. முக்கிய புள்ளிகளும் த.வெ.க.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தால்?
தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. அதே சமயம் த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமையவேண்டும் என்ற தனது ஆசையை எடப்பாடி அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார். ஆனால் கொள்கை எதிரி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார்.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க.வும் இருப்பதால் அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணிக்கான சாத்தியக்கூறு இப்போதைக்கு இல்லை என்று கூறப்பட்டது.
தற்போது த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தால் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு கிட்டத்தட்ட இல்லை என நிலை உருவாகியுள்ளது.
பாஜகவின் மாஸ்டர் பிளான்:
த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை கழட்டிவிடலாம் என்று அ.தி.மு.க. திட்டமிட்டிருந்ததாக தகவல் கசிந்தன. இந்நிலையில், செங்கோட்டையனை வைத்து அ.தி.மு.க. வின் இந்த 'ரகசிய' திட்டத்திற்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை பா.ஜ.க. இறுக்கி பிடித்துள்ளது. மேலும், ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் என முக்கிய புள்ளிகளை அ.தி.மு.க.வில் இணைக்க விடாமல் விஜயின் பக்கம் பாஜக தள்ளியுள்ளது.
இதன்மூலம் ஏற்கனவே 'பலவீனப்பட்டு' இருக்கும் அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்தும் வேலையை பா.ஜ.க. செய்துள்ளது.
செங்கோட்டையன் மூலம் கொங்கு மாவட்ட வாக்குக்களையும் ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் மூலம் தென் மாவட்ட வாக்குகளையும் அறுவடை செய்ய த.வெ.க.விற்கு இது நல்ல வாய்ப்பாக மாறியுள்ளது.
இதன்மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. - த.வெ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருவேளை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை பலவீனப்படுத்துவதன் வழி 2031 இல் தி.மு.க.வுக்கு போட்டியாக உருவெடுக்க பா.ஜ.க.வுக்கு இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ பா.ஜ.க.வின் இந்த மாஸ்டர் பிளான் 50 ஆண்டுகால வரலாறு கொண்ட அ.தி.மு.க.விற்கு முடிவுரையும் புதிய குழந்தையான த.வெ.க.விற்கு புதிய வழியையும் ஏற்படுத்தும். இதன்மூலம் தமிழ்நாட்டிலும் 'கூட்டணி ஆட்சி' என்ற தனது அஸ்திரம் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது.
- நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
- மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டின் உலக மீன்வள தினம் "கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்" ('Strengthening the value addition in Seafood exports)' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று சென்னை நந்தனத்தில் அனமந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துனற இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துனற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்று, மாநிலத்தின் சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்போர், கடலில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்போர், சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துனறமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, சிறந்த விற்பனையாளர் (TNFDC) ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர் நலவாரிய பயனாளர்களுக்கும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம் மற்றும் உள்ளீடுகள் / இடு பொருட்களுக்கான மானியம், சிறிய உயிர்கூழ்ம (பயோபிளாக்) குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பிற்கான மானியம், குளிர்காப்பிடபட்ட நான்குசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.






