என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர், ஆனையூரில் தி.மு.க. சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார். அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும். ஆனால் அந்த கட்சி வேண்டாமென்று சொல்லவில்லை.

    விஜயகாந்த் இருந்தபோது தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. மக்களிடமும் செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்று தே.மு.தி.க. இரு கட்சியினருடமும் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்கேயும் அங்கேயும் பேசுவது சரியாக இருக்காது. விஸ்வாசமாக இருந்து தே.மு.தி.மு.க. ஒரு பக்கம் வரவேண்டும்.

    த.வெ.க. பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதில் இருப்பவர்கள் எல்லாம் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து அரசியல் செய்தார். 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க. இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எடப்பாடி வியாபாரம் செய்து வந்தவர். தற்போது பா.ஜ.க.விடம் சிக்கிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    தென் மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னை பெரிய ஆளாக நினைத்து கொள்கிறார். அவர் பெரிய ஆளாகவே இருக்கட்டும். ஆனால் ஒருவரை அழித்து வரக்கூடாது. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது. மேலூர் தொகுதியில் தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். இம்முறை மேலூரில் தி.மு.க. தான் போட்டியிடும். தலைமை முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வருமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என்றார்.

    அண்மையில் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தி.மு.க. இல்லையென்றால் இண்டியா கூட்டணியே இல்லை. காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை என்று பேசினார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கூட்டணி வைக்க முயற்சிக்கும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. குறித்து சர்ச்சக கருத்து கூறியிருப்பது கூட்டணிக்கு முட்டுக் கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது.
    • இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மை பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கனவை நினைவாக்கினார் எடப்பாடியார். 2011-ல் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஜெயலலிதா மடிக்கணினி வழங்கினார். ஆனால் தற்போது தேர்தலுக்காக தி.மு.க மடிக்கணினி வழங்குவதாக கூறியுள்ளது. 525 வாக்குறுதிகள் கொடுத்தும், தி.மு.க. அரசு எதையும் நிறைவேற்ற வில்லை.

    ஆனால் தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது. சொத்து வரி வீட்டு வரியை கூட அரசாணை வெளியிடாமல் உயர்த்தி விட்டார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில் குழப்பமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை இன்று கைகட்டி நிற்கிறது.

    இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருட்கள் விற்கிறார்கள். அரசு அதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை தலை விரித்து ஆடுகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க. அரசு சொன்னது எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றியும் கவலை இல்லை. ஆனால் அ.தி.மு.க வாக்காளர்களை தெய்வமாக மதிக்கும் இயக்கம், மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைவருக்கும் வீடு அம்மா இல்ல திட்டம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க.செயலாளராக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். வந்தவாசியில் நடந்த விழாவில் ஐந்து கண் பாலம் அருகே இருந்து த.வெ.க. நிர்வாகிகள் திடீரென கிரேன் மூலம் மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்தும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரன் அடித்துக் கொண்டும் அலப்பறையில் ஈடுபட்டனர்.

    மேலும் த.வெ.க. மாவட்ட செயலாளர் உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்தும், விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மாவட்டச் செயலாளருக்கு மாலை அணிவிக்க பயன்படுத்தப்பட்ட கிரேனை பறிமுதல் செய்தனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும்.
    • இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர், அதிகாலையில் பனிப்பொழிவு என்ற சூழலே இருந்து வருகிறது.

    இதன் தாக்கம் வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதுவரை வறண்ட வானிலையே நிலவும். பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும். மூடு பனிப்பொழிவுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 20-ந்தேதிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும்.

    கடல் சார்ந்த அலைவுகள் தற்போது சாதகமாக இருப்பதால், இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

    இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மழையை கொடுக்குமா? என்பது குறித்து தனியார் வானிலை ஆய் வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    பொதுவாக பிப்ரவரி மாதங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழை பெய்து இருக்கிறதா? என்று பார்த்தால், தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு அதிகனமழை வரையிலும், 2021-ல் கடலோர மாவட்டங்களில் கனமழை வரையிலும் பதிவாகியுள்ளது. மேலும் 1947, 1956, 1961, 1999, 2011-ம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்துக்கு மழைக்கான சூழல் இல்லாமல் போனது. இதற்கு முன்பு 1944-ம் ஆண்டில் புயல் ஒன்று உருவாகியது. அது சென்னைக்கு தெற்கே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    அந்த வகையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ் வுப் பகுதி. வலுப்பெறுமா? மழையை கொடுக்குமா? என்பது குறித்து வரும் நாட்களில்தான் தெரிய வரும் என்று கூறினார்.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஐயப்பன்தாங்கல்: மேட்டு தெரு, ஈவிபி பார்க், தனலட்சுமி நகர், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்ரமணி நகர், விஜிஎன் நகர், கருமாரி அம்மன் நகர்.

    அம்பத்தூர்: கல்லிக்குப்பம், ஓம் சக்தி நகர், கங்கை நகர், கணேஷ் நகர், அம்பத்தூர் சர்வீஸ் சாலை.

    • கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
    • எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.

    இதுவரை ஆசிரியர்கள் மாணவர்கள் பேப்பரில் எழுதிய விடைத்தாள்களைப் பேனா கொண்டு திருத்தி வந்தனர். ஆனால் இனி அப்படி கிடையாது. மாணவர்கள் வழக்கம் போல விடைத்தாள்களில் தேர்வு தேர்வை எழுதினாலும், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள், அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த நடைமுறை, தற்போது நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.

    ஆனால் எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    இந்த புதிய முறையில் விடை திருத் தும் பணிக்காக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் நாளைக்குள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு 14 முதல் 16-ந் தேதி வரை ஆசிரியர்களுக்கு இதற்கான ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    • கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றார்.

    சென்னை:

    கோவையில் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இபிஎஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 நாளுக்கு முன் பொதுவெளியில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை, இங்கு மது அருந்தக் கூடாது என அறிவுறுத்திய அதிமுக வட்டச் செயலாளர் சுரேஷ்குமார், நேற்று முன்தினம் (09.02.2026) இரவு 8.30 மணியளவில், கட்சி அலுவலகத்தில் கட்சிப் பணிகளை கவனித்து கொண்டிருந்தபோது, 5 நபர் கொண்ட கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    இச்சம்பவத்தில் கட்சியின் வட்ட செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் ஈசா டி.செந்தில் ஆகியோர் மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கட்சியினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் - ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற முதல்வரின் கையாலாகாத தி.மு.க. அரசுதான்.

    குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கட்சியினர் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் வைரஸ் பரவுகிறது.
    • பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

    மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும். தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், பறவைக்காய்ச்சல் பரவுவதால், திருவள்ளூர் மற்றும் சென்னைப் புறநகரப்பகுதிகளில் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

    சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு ரூ.280க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ.220ஆக குறைந்துள்ளது

    • தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
    • India Today கருத்தரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார்.

    தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. சட்டமன்ற தேர்தலை வென்றால் NDA கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் நடக்கும் India Today கருத்தரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்னையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
    • இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிகழ்வில் பேசிய அவர், 

    "சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் 49 தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

    தேர்தல் பணி என வந்தால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே ஆற்றல், அதே கவனத்தோடு இந்தமுறையும் உழைக்கவேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்துகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் 350 வாக்குகளை டார்கெட் செய்திருக்கிறோம். இதை அடைந்தாலே 2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் பெறலாம். 2021-ஐவிட தற்போது நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலேயே அது தெரிந்தது.

    நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக வெல்லும். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் . 

    அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க எல்லோரையும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையை விளக்கவேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நிதி வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்விக்கேட்காத அதிமுகவையும் மக்கள்முன் தோல் உரிக்கவேண்டும்.

    பாஜகவின் டப்பா என்ஜின் முன்னால், தமிழ்நாடு திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது. இதனை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்லவேண்டும். களப்பணி மட்டும்தான் முழுப்பணி. வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றிப் பெறலாம் என துடிக்கும் விஷவிதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவேக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

    எங்கு யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றவேண்டும். ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடையமுடியாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி உழைக்காது. அதனால்தான் திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது." என தெரிவித்தார். 

    • இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்று மாற்றம் இல்லை.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளது. இன்று மாலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குரூ.1,520 உயர்ந்து ரூ. 1,18,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190உயர்ந்து ரூ.14,790-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளி விலையில் 2-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    ×