என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் குழப்பமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது - ஆர்.பி.உதயகுமார்
- தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது.
- இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மை பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கனவை நினைவாக்கினார் எடப்பாடியார். 2011-ல் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஜெயலலிதா மடிக்கணினி வழங்கினார். ஆனால் தற்போது தேர்தலுக்காக தி.மு.க மடிக்கணினி வழங்குவதாக கூறியுள்ளது. 525 வாக்குறுதிகள் கொடுத்தும், தி.மு.க. அரசு எதையும் நிறைவேற்ற வில்லை.
ஆனால் தற்போது பால், அரிசி, பருப்பு, மின் கட்டணம் என்று அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது. சொத்து வரி வீட்டு வரியை கூட அரசாணை வெளியிடாமல் உயர்த்தி விட்டார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில் குழப்பமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை இன்று கைகட்டி நிற்கிறது.
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருட்கள் விற்கிறார்கள். அரசு அதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை தலை விரித்து ஆடுகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க. அரசு சொன்னது எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றியும் கவலை இல்லை. ஆனால் அ.தி.மு.க வாக்காளர்களை தெய்வமாக மதிக்கும் இயக்கம், மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைவருக்கும் வீடு அம்மா இல்ல திட்டம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






