

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஆட்டம் போட்ட சூரனை முருகன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ? அதேபோல் ஆட்டம் போட்டவர்களை தலைவர் விஜயின் தம்பிகள் சம்ஹாரம் செய்யப் போகிறார்கள். இனி வரும் காலம் நம் காலம். அடுத்த முதலமைச்சர் விஜய் தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள். 2 பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.
கடந்த காலங்களில் தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். ஆனால் இன்றைய தினம் விருப்பமனு வாங்குவதற்கு கூட கட்சியில் ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் உலகநாயகன் கமலஹாசன் வந்தார். தி.மு.க. மீது கூர்மையை தீட்டினார். ஆனால் தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன். இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் 1 கோடி இளைஞர்களை வைத்திருக்கிற தலைவனை இன்று தான் அரசியல் பார்க்கிறது.
தி.மு.க.விற்கு உழைத்தது உனது மகனா?, தி.மு.க.விற்கு வேர்வை பாய்ச்சியது உனது குடும்பம் மட்டும் தானா? தி.மு.க.விற்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியது உங்கள் குடும்பம் மட்டும் தானா? உதயநிதிக்கு ஒரு திருக்குறளை ஒழுங்கா சொல்ல தெரியுமா? மாநில சுய ஆட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் நிறுத்திவிடுகிறேன்.
ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும் போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும்.
நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதலமைச்சர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. ரேம்வாக்கிற்கு எங்கள் தளபதி போடும் பேண்ட் கலரில் முதலமைச்சர் பேண்ட் போடுகிறார். வேறு கலர் கிடைக்கவில்லையா. கலரும் களவு தானா? எங்கள் தளபதி போல் அவரும் ரேம்வாக் போகிறார். இந்த ரேம்வாக்கை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே எங்கள் தளபதி விக்கிரவாண்டியில். எங்கள் தளபதி ராம் வாக் செல்ல அவருக்கு தகுதி இருக்கிறது. உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கிறது?.
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். யாராவது தி.மு.க.வினரை பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள். விசில் ஊதும் போது அவரது செவில் கிழியும் அளவிற்கு ஊத வேண்டும். யானை பிளிரும் ஓசையை விட விசிலின் ஓசை அதிகமானது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் விஜய ராஜ், பத்ரி பிரசாத், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் மதன், யாசர் அரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.