என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
- ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கை சிறையில் இருக்கும் 116 தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை, தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது.
இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தரப் போராடுவோம்.
- நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்; நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம்.
- இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர்.
நத்தம்:
கேரளா மாநிலம் வயநாடு-சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ரெனீஸ் (வயது 36). இவர் தனது மனைவி ரஷினி (31), மகன் ரியோ ஆகியோருடன் இணைந்து தயாரித்த சைக்கிள் கேரவனில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இந்த கேரவன் ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ வரை இயங்குகிறது. மேலும் இந்த வாகனத்தில் சமையல் எரிவாயு அடுப்பு, படுக்கை அறைகள் அமைக்கபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்றார். மேலும் வித்தியாசமாக உள்ள இந்த சைக்கிள் கேரவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இவரது பயணத்தை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருக்கும். இவ்வாறு வாழும் மக்களின் நிலைகளை அறிந்து கொள்வதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களால் இயன்றதை உதவும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்தியமேற்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101). வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நேற்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நல்லகண்ணுவுக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை, மருந்துகள், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
- அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
- தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னையில் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
- வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்துவிட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார்.
நீண்ட நாட்களாக காத்திருந்த காங்கிரஸுக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் நேற்று முன்தினம் (பிப்.22) தொடங்கியது தி.மு.க.
தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இந்தக் குழு முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முஸ்லீக் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. 2 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கோருகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரியுள்ளது. தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்து ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் 45 இடங்களை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய அன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் 45 இடங்களை கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் தி.மு.க. இத்தனை இடங்களை கொடுக்க முன்வர தயங்குகிறது. காரணம் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் அதே வேளையில், தி.மு.க. தனித்துப் பெரும்பான்மை பெறும் வகையில் சுமார் 165-170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை காங்கிரஸின் உள் மதிப்பீட்டின்படி, தி.மு.க. 2021 இல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்று 40 தொகுதிகளில் தோல்வியடைந்தது. பெரும்பாலும் இந்த 40 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியடைந்த தொகுதிகளில் குறைந்தது 20 இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கடந்த 2021 தேர்தலைப் போலவே 25 இடங்கள் அல்லது அதற்குச் சற்று கூடுதலாக (27-28) வழங்கவே திமுக விரும்புவதால் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
- திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கூடலூர்:
இந்து மத திருமண சடங்குகளால் ஈர்க்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தமிழக எல்லையான குமுளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆஸ்கார் (வயது47). இவர் கடந்த 2010 முதல் ஆண்டுக்கு 2 முறை கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். அவ்வாறு வந்த போது கேரளாவில் வர்க்கலா மற்றும் தேக்கடி ஆகிய இடங்கள் மிகவும் பிடித்துப்போனது.
மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். இந்து மத சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். இதனையடுத்து ஆஸ்கார் மூலமாக இந்து மதச் சடங்குகளைப் பற்றி அறிந்து கொண்ட செலியாவும் (37), கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை இந்தியாவில் இந்து முறைப்படி நடத்தவும் திட்டமிட்டனர். இதை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், ஆஸ்கார் மணமகள் செலியாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணச் சடங்குகளை பூசாரி கண்ணன் முன்னின்று நடத்தினார்.
கோவில் தலைவர் ரவீந்திரன் நாயர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். தங்களின் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த வெளிநாட்டு தம்பதியினருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
- கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவருக்கு கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடு ஷோ'வாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
தொடர்ந்து பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1கோடியே 45 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.
- மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.
போரூர்:
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இப்போதே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து உள்ளது. மேலும் இப்போது வெயிலின் தாக்கம் கோடைகாலத்துக்கு முன்னதாகவே அதிகரித்து வருகிறது.
காலையிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலையோரம் உள்ள கடைகளில் இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை, கிர்ணி உள்ளிட்ட பழ ஜூஸ் ஆகியவற்றை வாங்கி குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.
இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் பழ ஜூஸ் கடைகள் அதிகளவில் முளைத்து இருப்பதையும் காணமுடிகிறது. மேலும் நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, கிர்ணி பழ சீசன் தொடங்கி உள்ளதால் பல இடங்களில் தர்பூசணி பழங்களை அதிகளவில் வியாபாரிகள் குவித்து வைத்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது தினசரி 250 டன் தர்பூசணி பழங்களும், 200டன் கரும் பச்சை நிறம் கொண்ட (கிரண் வகை) தர்பூசணி பழங்களும், 120டன் கிர்ணி பழங்களும் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிரண் வகை தர்பூசணி கிலோ ரூ.30 வரையிலும், கிர்ணி பழம் கிலோ ரூ.30 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தர்பூசணி வியாபாரி வடிவழகன் கூறும்போது, "கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் கோயம்பேடு சந்தைக்கு வரும் தர்பூசணி பழங்களின் வரத்து 2 மடங்காக அதிகரிக்கும். சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கிர்ணி பழங்கள் பூச்சிக் கொல்லிகளால் வீணாகி போனது. இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு கிர்ணி பழங்களின் விலை அதிகரித்து உள்ளது" என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
- அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி:- ஏற்கனவே தமிழக அரசின் நிதி சுமை அதிகமாகி உள்ள நிலையில் ரூ.10 ஆயிரம் கருணை தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்களே? நிதி சுமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் அமைந்ததும் வருவாயை பெருக்கி நாங்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்வோம். கொரோனா காலத்திலேயே பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திட்டங்களை செயல்படுத்தி வரி, வருவாயை பெருக்கினோம்.
எனவே நாங்கள் அளித்த வாக்குறுதிபடி நிச்சயம் தி.மு.க. ஆட்சி போன்று இல்லாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
கேள்வி:- இலவச அறிவிப்புகளை கண்டிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளதே?
பதில்:- தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை கை தூக்கி விடும் நிலையில்தான் இந்த கருணை தொகையை அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் ஒருமுறை ரூ.10 ஆயிரம் கருணை தொகையை வழங்குவோம்.
மக்கள் மீதான கருணையின் அடிப்படையில்தான் இதனை அறிவித்து இருக்கிறோம்.
கேள்வி:- வருவாயை பெருக்குவதற்காக வரிகள் உயர்த்தப்படுமா?
பதில்:- அதையெல்லாம் இப்போதே எப்படி சொல்ல முடியும். வருமானத்தை பெருக்கி மக்களுக்கு தேவையானதை செய்வோம்.
கேள்வி:- வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவி தொகையை கொடுப்பதை விட வேலைவாய்ப்பை அதிகரிக்கலாமே?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சியின்போது தொழில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்.
அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்குவோம். அப்போது மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு தான் கருணை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வேகமாக நடந்து வருகிறது. நீங்கள் எப்போது அதனை தொடங்கப் போகிறீர்கள்?
பதில்:- அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது யார்-யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றிய விவரங்களையும் வெளியிடுவோம்.
கேள்வி:- தமிழகத்தில் கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை தாங்கும் நிலையில் டி.டி.வி.தினகரன் பா.ஜ.க. கட்சியுடன்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறி இருக்கிறாரே?
பதில்:- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






