என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குமுளியில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் தம்பதியினர்
- கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
- திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கூடலூர்:
இந்து மத திருமண சடங்குகளால் ஈர்க்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தமிழக எல்லையான குமுளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆஸ்கார் (வயது47). இவர் கடந்த 2010 முதல் ஆண்டுக்கு 2 முறை கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். அவ்வாறு வந்த போது கேரளாவில் வர்க்கலா மற்றும் தேக்கடி ஆகிய இடங்கள் மிகவும் பிடித்துப்போனது.
மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். இந்து மத சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். இதனையடுத்து ஆஸ்கார் மூலமாக இந்து மதச் சடங்குகளைப் பற்றி அறிந்து கொண்ட செலியாவும் (37), கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை இந்தியாவில் இந்து முறைப்படி நடத்தவும் திட்டமிட்டனர். இதை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், ஆஸ்கார் மணமகள் செலியாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணச் சடங்குகளை பூசாரி கண்ணன் முன்னின்று நடத்தினார்.
கோவில் தலைவர் ரவீந்திரன் நாயர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். தங்களின் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த வெளிநாட்டு தம்பதியினருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.






