என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்க உள்ளார்.
    • சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் தன்னார்வலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசியதாவது, "ஈஷாவில் 32வது மகா சிவராத்திரி விழா 15ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    15ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம் மற்றும் சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மேலும் இந்தாண்டு முதன் முறையாக சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் எனும் ஆன்மிக செயல்களை அர்ப்பணிக்க உள்ளார்" என தெரிவித்தனர்.

    மேலும், மக்களின் வசதிக்காக தேவையான பார்க்கிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

    ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன.
    • 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது

    எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துக்கள் பொறி பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுப்பு. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன.

    'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.

    ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.

    இதையொட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.

    எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.

    ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதோடு "உலகம் தழுவிய தமிழ்" என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    கோவை:

    மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பொதுபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை காந்திபுரத்தில் இருந்து கொச்சி, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று, உக்கடத்தில் இருந்து குருவாயூர், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர், கோவையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்வோர் தினமும் இந்த பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு கேரள போக்குவரத்து ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அங்கு பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இன்று ஓடவில்லை. உக்கடம் பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் நிறுத்தி வைக்க கூடிய இடம் இன்று பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சிலர் ரெயில்கள் மூலமாக கேரளாவுக்கு சென்றனர். இதனால் கேரளாவில் இருந்து கோவை வந்த ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை கோவையில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    • பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள்.
    • தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். ஒரு கூட்டம் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டோம். அவர்களிடம் ஒரு கூட்டம் சேர்ந்து செயல்படுகிறது.

    என்னை பற்றி அவதூறாக மனம் புண்படும்படியும், ஏளனமாகவும், பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள். என்னை மட்டுமின்றி அரசியல் அனுபவம் கொண்ட பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் வசைப்பாடுகிறார்கள்.

    டெல்லி உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக 2 முறை தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சிலரை அக்கும்பல் தன் வசப்படுத்தியதால் அவர்களுக்காக தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்யவேண்டிய வழக்கை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை. கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
    • மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளது

    மத்திய, மாவட்ட சிறைகளில் புகையிலை பயன்பாடு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை கடுமையாக அமல்படுத்தக்கோரியும், சிறையில் புகை பிடிக்காத கைதிகளை தனியாக பிரித்து வைப்பதை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று சையத் அலி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    சிறைகளில் புகையிலை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் உள்ள விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். மனுதாரர் கோரிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.

    • தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க விருப்பமனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு.
    • பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 15-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற்றுவருகின்றனர். தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க 3 நாட்கள் நீட்டிப்பு செய்து விருப்பமனுக்களை நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 15-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • “மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை
    • தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை

    தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், வரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸின் சில தலைவர்கள் கடந்தசில நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திமுக தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது திமுக அமைச்சர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்து இந்த மோதலை நீட்டித்து வந்தார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை எனத் தெரிவித்து காங்கிரஸ் கோரிக்கையை நேரடியாக நிராகரித்துள்ளார். மேலும், கூட்டணியைப் பிரிக்கச் சிலர் சதி செய்வதாகவும் தெரிவித்தார்.

    இதற்கு நேற்றே எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு" என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளானது. இந்நிலையில் இன்றும் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் இந்த நிலைப்பாட்டில் முரண்பட்டாலும், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அமைதியாகவே இருக்கிறார். அனைத்தையும் தலைமை பார்த்துக்கொள்ளும் என அவ்வப்போது வெடிக்க வரும் பிரச்சனையை அமர்த்திவருகிறார். 

    • 15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15 ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    13-ந்தேதி தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    14-ந்தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    17 மற்றும் 18-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.

    பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:

    ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நீலகிரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் 15-ந்தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் 16-ந் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், நாமக்கல், ஈரோடு, தென்காசி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17-ந்தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    14-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    15-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட 1,179 திட்டங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
    • அரசியல் பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட 1,179 திட்டங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 36.52 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை விட தமிழ கத்தின் வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளது. 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

    தொழில் துறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இப்போது முன்னணியில் உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளோம். அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சியடைய கவனமாக செயல்பட்டு வருகிறோம்.

    தொழில் துறையில் நாங்கள் செய்த சாதனைகளை அடுத்து வரக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாங்கள் தான் முறியடிப்போம். கடந்த 5 ஆண்டுகளில் 7 டைடல் பூங்காக்களை உருவாக்கி உள்ளோம்.

    இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதமாகும். திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல். மக்களுக்கான மாடல். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம். அரசியல் பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    • தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளியில் மோடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி விட்டார்.

    தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். அ.தி.மு.க.விடம் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஆட்சியில் பங்கு மட்டுமில்லை. எதையுமே அ.தி.மு.க.விடம் நாங்கள் கேட்கப்போவதில்லை என்றார்.

    • கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது.

    கோவை:

    தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவியாளர் நிலையில் ரூ.16 ஆயிரத்து 500, சமையலர் மற்றும் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.5 ஆயிரத்து 700 அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை தெற்கு மாவட்ட தாசில்தார் அலுவலகம் அருகில் சாமியானா பந்தல் அமைத்து இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், இரவிலும் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.

    கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், அங்கிருந்து நேராக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களை போராட்ட களத்தில் சந்தித்தார்.

    அப்போது அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போராட்ட பந்தலில் தரையில் அமர்ந்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுடன் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தாங்கள் 35 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் ஓய்வு பெறும்பொழுது வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே தங்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, நிறைவேற்றி தர வேண்டும் என்றும், ஆனால் இதுவரை தங்கள் கோரிக்கைகள் எதுவும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்று தெரிவித்தனர்.

    அதற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி உங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவோம் என அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

    தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், அவர்களிடம் சட்டசபையில் இதுகுறித்து குரல் எழுப்பப்படும் என்றார். அவர்களுக்கு போராட்ட களத்தில் இருந்தவர்கள் நன்றி கூறினர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    • "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துகிறார்.
    • ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதி.

    சென்னை:

    சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    அதைத் தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்துகிறார்.

    அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை தொடங்கி வைத்து, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் பணியாளர்களுக்கு கல்லூரியின் வளாகத்திலேயே 3 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 அடுக்ககத்தில் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ×