என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்
- கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் தமது அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
- போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம் என்றும் தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பேன் என்று வாய சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள்
கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். ஆனால், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
`நடு இரவில் ஒரு பெண் தனியாக, பாதுகாப்பாக நடந்துசெல்கிறாரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்
பெற்ற நாள்' என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால்,
கடந்த 56 மாத தி.மு.க. ஆட்சியில் காவல் துறையை தனது ஏவல் துறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில்,
தீய சக்தி தி.மு.க-வின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், `ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில்
வாசித்தது போல்' மகளிர் மாநாடு நடத்துகிறார்.
56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும்; இந்த கொடுஞ்செயலைப் பார்த்து அழுத இரண்டு வயது
குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.
கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான்,
தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள்
புலம்புகிறார்கள்.
பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது.
பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், விடியா தி.மு.க-
வினர் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தைப் பறை சாற்றுகிறது.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க.
ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்!
போராடுபவர்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் `கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.
விடியா திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அதை பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் என்பதை,
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை...
என்று, இரு வரிகளில் திருவள்ளுவர் கூறியிருப்பதை, தன்னிலை மறந்து செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு
நினைவூட்டுகிறேன். நம்மை கேள்வி கேட்க யாருமில்லை; நம்மை வெல்லும் சக்தி எங்குமில்லை என்ற மமதையோடு சுற்றித் திரியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே,
`ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே,
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே..
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு,
அந்த மாறுதலை செய்வதற்கு தேறுதல் (தேர்தல்) உண்டு'
என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளையும் நினைவூட்டுகிறேன்.
விரைவில் தேர்தலை தமிழகம் சந்திக்கும்; மக்கள் மாறுதலை தருவார்கள். ஏய்த்து பிழைக்கும் தொழிலை இதுநாள்வரை செய்து வந்த தீயசக்தி தி.மு.க. கூட்டம்
மூலைக்கு மூலை அடக்கி ஒடுக்கி வைக்கப்படும். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்று ஒரே நாளில் 2வது முறையாக வெள்ளியின் விலை சரிந்துள்ளது.
- ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை 'கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் 'மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
இதேபோல், வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இப்படியாக நேற்று முன்தினம் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை, எந்த வேகத்தில் ஏறியதோ, நேற்று அதே வேகத்தில் இறக்கம் கண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2வது முறையாக வெள்ளியின் விலை சரிந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று காலை கிலோவுக்கு ரூ.55,000 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.30,000 குறைந்தது.
அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.3.20 லட்சத்திற்கும் விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- உதயநிதியை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் சந்தித்து பேசினர்.
- இது தொடர்பான புகைப்படங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னாள் கிரிக்கெட் விரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இது தொடர்பான புகைப்படங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், விளையாட்டு மேம்பாடு, தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தினோம்" என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
- முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி முத்துநகர், மீனம்பாறை ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த ஷேரீப், ஷோகாக், லீட்டன், ரகீர் ஆகியோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் போலி ஆதார் கார்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.
- இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுங்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட உள்ளது.
மூவர் குழுவின் அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5,781 ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை, கருங்குழி, வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு காட்ட வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு 155-வது தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக ஜனவரி 24-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலும், தருமச்சாலையில் ஜனவரி 27முதல் 30-ந்தேதி வரை, அருட்பா முற்றோதலும் நடைபெற்றது.
இன்று(சனிக்கிழமை) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது.
மதியம் 1 மணி அளவில் திருவருட்பா இன்னிசை நடைபெற்றது. இரவு, 6 மணி முதல் 9 மணி வரை தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறுகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி, மறுநாள் திங்கள் காலை 5.30 ஆகிய 6 காலம், 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம், நடைபெறுகிறது. இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின்பல பகுதியில் சிறப்பு பஸ்கள், மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தைப்பூசத்தன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையிலும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அரசு உயர்நிலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறைஉள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன் மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடைகளில் அலுமினிய பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள், பழக்கடைகள், அவல் பொறிகடை, டெல்லி அப்பளம் கடைகள், சர்க்கஸ் கூடாரங்கள், நடன நாட்டிய அரங்குகள், சிறுவருக்கான ராட்டினம் தொடங்கி பிரம்மாண்ட கடைத்தெருக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தம், செயல்அலுவலர் ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
- 2011 சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் சந்தித்தோம்.
- 2021 தேர்தலில் 6 தொகுதிகள் என்ற நிலையில் நாங்கள் தொகுதியை குறைத்து கொள்ளும் சூழல் உருவானது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
ஒவ்வொரு தேர்தலிலும் இரட்டை இலக்கு தொகுதிகளை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 2001-ல் இரட்டை இலக்கு தொகுதி தருவதாக கூறி தமிழகத்தில் 8 தொகுதிகளும் புதுச்சேரியில் 2 தொகுதிகளும் என மொத்தம் 10 தொகுதிகளை கலைஞர் கருணாநிதி ஒதுக்கினார். இதுவும் இரட்டை இலக்கு என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டோம்.
2011 சட்டசபை தேர்தலை தி.மு.க.வுடன் சந்தித்தோம். அந்த தேர்தலில் முதலில் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற தேவையை கருதி எங்களிடம் இருந்து 2 தொகுதிகள் திரும்ப கேட்டு பெற்றுக் கொண்டனர். ஆக 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
2021 தேர்தலில் 6 தொகுதிகள் என்ற நிலையில் நாங்கள் தொகுதியை குறைத்து கொள்ளும் சூழல் உருவானது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அந்த நேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எண்ணிக்கையை பொறுத்து தேவையை பொறுத்து அவரவர் முன் வைக்கக் கூடிய கோரிக்கைகளை பரிசீலித்து தி.மு.க. முடிவு செய்கிறது.
எனவே போன முறை 6 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் அதற்கு உடன்பட்டு கூட்டணியில் இடம் பெற்றோம். இப்போதும் நாங்கள் இரட்டை இலக்கு தொகுதிகளை கேட்போம். அது வழக்கமான ஒன்றுதான் புதிய முயற்சி அல்ல.
எல்லா சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எல்லா கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எங்களுக்குள் பேசி சுமூகமாக தொகுதிகள் பங்கீடு செய்து கொள்வோம். அதை ஒரு நிபந்தனையாக எப்போதும் நாங்கள் முன் வைத்தது இல்லை. இந்த முறையும் நாங்கள் முயற்சிப்போம் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லட்சத்தீவு - கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
3-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
5-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
6-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே 2-ந்தேதி முதல் முதல் 4-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது.
- திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம்.
பொங்கலுக்கு ரூ.6800 கோடி இனாம் கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட காசுதான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.
போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. திராவிடம் என்பது எந்த மொழிச் சொல் என்று யாருக்கும் தெரியாது. மாநில உரிமையில் இருந்து கல்வி பறிக்கப்பட்டது தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான்.
இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. குரு மூர்த்திக்கு பிறந்தவன் என்று ஒருவன் என்னைப் பற்றி குறிப்பிடுகிறான். இதுதான் பெரியார் சொல்லி கொடுத்த பண்பாடா? பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறார். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.
எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.
பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார்.
ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.
இவ்வாறு சீமான் கூறினார்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு நியமனம்.
- இந்தக் குழுவிற்கு கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழக தோழர்களுக்கு வணக்கம். வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு "சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு" பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது.
இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், பொருளாளர்-வெங்கட ரமணன், மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், எஸ்.குமரேசன் சட்ட ஆலோசனை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனைப் பிரிவு பி.பாண்டி (எ) கே.பி.பாண்டியன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு ஆர்.எஸ்.இந்திரா தன்ராஜ், ஆர்.சக்கரவர்த்தி, ஆர்.செல்வபாரதி, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு எஸ்.ஏ.வெலிங்டன், எம்.தன்ராஜ், ஜெ.விஜயகுமார், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ரேவந்த் சரண், தேசிய செய்தி தொடர்பாளர் எம்.சத்ய குமார், சென்னை ஜெ.லெனின், மதுரை வி.சி.சங்கரநாராயணன், சென்னை டி.ராஜரத்தினம், சென்னை கே.உதயகுமார், திருப்பத்தூர் ஆர்.சுரேஷ் பாபு, திருவாரூர் பி.அன்பர சன், சென்னை டி.அஜித் குமார், செங்கல்பட்டு கே. மகேந்திரன், நாகப்பட்டினம் வி.இளமாறன், தஞ்சாவூர் வி.முத்துகுமரன், திருவள்ளூர் ஆர்.வெற்றிச்செல்வன், திருச்சி பி.கோகிலா ராணி, திருப்பத்தூர் ஆர்.லூயிசாள் ரமேஷ், திருவண்ணாமலை தலித் டைகர் சி.பொன்னுசாமி, கடலூர் தங்ககொளஞ்சிநாதன், சோழவந்தான் எம்.தியாகராஜன், விழுப்புரம் கே.முனியப்பன், மதுரை பி.தனசேகரன், காஞ்சிபுரம் டி.நரேந்திர குமார், திருவண்ணாமலை எஸ்.சுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்கு கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.
- தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை காமனூரில் மத்திய தொல்லியல்துறையின் மைசூர் கண்காணிப்பாளர் குமரன் தலைமையில் முதல் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
இதில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் 2500 முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்பதுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கண்காணிப்பாளர் கூறுகையில்,
தாண்டிக்குடியில் கடந்த 2004 முதல் 2006ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மூலம் அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் கற்திட்டை, கற்பதுகை, அறைகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் ராவத் உத்தரவின் பேரில் கற்காலம், இரும்பு காலத்திற்கு முன்பிருந்த பகுதிகள் குறித்து அகழாய்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் காமனூர் தனியார் பகுதியில் நடந்த அகழாய்வை தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன.
காமனூரில் கற்பதுகை மூலம் நினைவுச் சின்னங்கள், ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாலி, பயன்படுத்தப்பட்ட பொருள், வாழ்க்கை முறை, கலாச்சாரம் குறித்த தடயங்கள் பற்றி அகழாய்வு நடக்கின்றது. தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்பதுகை சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாகும்.
இங்கு கண்டறியப்பட்டுள்ள கற்பதுகையை சுற்றி கற்களான சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே காண முடிந்தது. தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குகை ஓவியம், பாறை ஓவியம், குகை ஆதிகால மனிதர்களின் கலாச்சாரம், பெருங்கற்கால மனிதர்களின் சின்னம், வரலாற்று எச்சம் உள்ளிட்டவை குறித்து அகழாய்வு செய்து மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றார்.
மேலும் தாண்டிக்குடியில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ளோம். இரும்பு காலத்திற்கு முந்தைய கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, வாழ்ந்த அடையாளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஏராளமாக உள்ளன. இவை குறித்து 3 ஆண்டுகள் அகழாய்வு நடக்கும். தற்போது அகழாய்வுகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.






