என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடலூர் வள்ளலார் சத்யஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம்- நாளை ஜோதி தரிசனம்
    X

    வடலூர் வள்ளலார் சத்யஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம்- நாளை ஜோதி தரிசனம்

    • தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை, கருங்குழி, வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு காட்ட வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு 155-வது தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக ஜனவரி 24-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலும், தருமச்சாலையில் ஜனவரி 27முதல் 30-ந்தேதி வரை, அருட்பா முற்றோதலும் நடைபெற்றது.

    இன்று(சனிக்கிழமை) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது.

    மதியம் 1 மணி அளவில் திருவருட்பா இன்னிசை நடைபெற்றது. இரவு, 6 மணி முதல் 9 மணி வரை தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி, மறுநாள் திங்கள் காலை 5.30 ஆகிய 6 காலம், 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம், நடைபெறுகிறது. இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின்பல பகுதியில் சிறப்பு பஸ்கள், மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தைப்பூசத்தன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையிலும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது.

    இதில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அரசு உயர்நிலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறைஉள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன் மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கடைகளில் அலுமினிய பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள், பழக்கடைகள், அவல் பொறிகடை, டெல்லி அப்பளம் கடைகள், சர்க்கஸ் கூடாரங்கள், நடன நாட்டிய அரங்குகள், சிறுவருக்கான ராட்டினம் தொடங்கி பிரம்மாண்ட கடைத்தெருக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தம், செயல்அலுவலர் ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×