என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சார்பதிவாளர் உள்ளிட்டபல்வேறு காலி இடங்களை நிரப்ப குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
    • பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ) அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    இந்நிலையில், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் 625 அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    2025-26ம் ஆண்டில் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான 1,270 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அரசுத்துறை/நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் மேலும் உயர்த்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது
    • குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது.

    இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடை விதிப்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, தி.நகர், மெரினா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்.
    • காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    விழுப்புரத்தில் நூலக கட்டிடத்தை வி.சி.க. பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார் திறந்து வைத்தார். அப்போது 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ரவிக்குமார் பதில் அளித்ததாவது:-

    * கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்

    * காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    * 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதற்கான வாய்ப்பு இல்லை.

    * தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்

    * கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.

    * 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் விசிக-வுக்கு திமுக இடங்கள் வழங்கும்.

    இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

    • தமிழக அரசின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
    • மாநகர் பகுதியில் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக தகவல்.

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • சபரிமலையில் பதினெட்டாம்படி அருகே லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு.
    • வரிசையை பின்பற்றாமல் சில பக்தர்கள் செல்வதால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

    வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பதினெட்டாம் படி அருகே தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரிசையில் நிற்கும் பக்தர்களை தாண்டி சில பக்கதர்கள் செல்வதால் அசாதரண சூழ்நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பதினெட்டாம் படிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பக்தர்களை பாதுகாப்பாக படிகளில் ஏற்றி விடுகிறார்கள். கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான பக்தர்கள் சிறுவர்களுடன் வந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள கே. ஜெயக்குமார் கூறும்போது "பக்தர்கள் வரிசயைாக செல்வதற்கும், தண்ணீர் வழங்குவதற்குள் கூடுதலாக 200 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. 18 படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நிலையான ஏறுவதை உறுதி செய்ய வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய மற்றும் அபாயகரமான வகையில் கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.

    சில பக்தர்கள் வரிசையை பின்பற்றாமல் முன்னால் குதித்து செல்கின்றனர். இங்கே இருக்கிற பெரிய கூட்டத்தைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு. பக்தர்கள் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், யாரும் வரிசையையோ அல்லது வரிசையையோ துண்டிக்காமல் இருக்கவும் நான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடியிருக்கக்கூடாது" என்றார்.

    • விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது.
    • மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

    கடந்த நான்கு ஆண்டு தி.மு.க. ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக தி.மு.க. அரசு கூறியிருக்கிறது.

    ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி?

    நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே முழு பொறுப்பு.

    கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், தி.மு.க. அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

    தி.மு.க. அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, தி.மு.க.வின் கடித நாடகம் அல்ல.

    தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு? என பதிவிட்டுள்ளார்.

    • தேவையை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் அணைக்கு நீர்வரத்து நேற்று 5714 கனஅடியாக இருந்த நிலையில் அது இன்று 6 ஆயிரத்து 72 அடியாக அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.09 அடியாக உள்ளது. அணையில் தற்போது 81.43 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகவதி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 1½ வயது மகன் துர்சாந்த்.

    2 பெண் பிள்ளைகளும் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் காலை அவர்களை ஏற்றி செல்வதற்காக பள்ளி பஸ் வீட்டின் அருகே வந்து நிற்கும். அதேபோல் இன்று காலை மாணவிகளை ஏற்றிச் செல்ல பஸ் வந்தது.

    அப்போது, திலகவதி துர்சாந்த்தை அழைத்துக் கொண்டு 2 மகள்களையும் பஸ்சில் ஏற்ற சென்றார். துர்சாந்த் பஸ்சின் முன்பக்கமாக விளையாடி கொண்டிருந்தான்.

    இதை கவனிக்காத பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டியபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    SIR பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், "ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    சீமான் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "SIR பணிகளால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் குறையும். SIR நடைமுறையை எதிர்க்கக் கூடாது. இது வழக்கமாக நடைபெறுவதுதான். பீகார் வெற்றிக்கு காரணமே SIR தான். பீகார் தேர்தல் வெற்றி அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். நிதிஷ்குமாரைப் போல 2026 தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார்" என்று தெரிவித்தார்.

    • வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.
    • கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.

    தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க ஆட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம்.

    அங்கு அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை தலமான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டகத்தில், வரலாற்றுக்கு சாட்சியாக பழங்கால கல் நாதஸ்வரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வடிவமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    இந்த கோவிலில் இருந்து கல் நாதஸ்வரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இன்னொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3.600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் 2 அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் உருவாக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த பாறை போன்ற மரத்தையே இதற்காக பயன்படுத்துவார்கள். கல்நாதஸ்வரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கிவாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

    கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது 3 உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டு வெண்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் 7 ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்களே உண்டு. அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். இதனை 3 முதல் 3½ கட்டை சுதியில் வாசிக்க இயலும்.

    சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.

    மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.

    இவர், சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சீடர். நாதஸ்வரம் மங்கள வாத்தியமாகும். இதனை நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வசித்து, நாகபாம்புகளை தெய்வமாக பூஜித்த நாகர் என்ற இனத்தவரால் முற்காலத்தில் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது.

    நாகத்தினை போன்று நீண்டிருந்ததன் காரணமாக "நாகசுரம்" என்னும் பெயர் ஏற்பட்டது. இதில் இருந்து இனிமையான நாதம் கிடைப்பதால் பிற்காலத்தில் நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பாத சங்கிரகம்" என்ற இசை நூல், துளைக்கருவிகளின் வரிசையில் இதனை "நாகசுரம்" என்றே குறிப்பிடுகிறது.

    நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகி இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. 4 வகை வேதங்களில், சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.

    ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய 7 ஸ்வரங்களும் ஆகாயத்தில் இருந்து ஒலிக்க கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு ராகத்திற்குள்ளும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன. ஒலியை கூர்ந்து நுட்பமாக கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். அவர்கள் கேட்ட ஒலியே கட்டமைக்கப்பட்டு இசையானது. முறைப்படுத்தப்பட்ட இசையை, நாதஸ்வரம் போன்ற பல்வேறு கருவிகள் நமக்கு வழங்குகின்றன.

    மேலும் இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறுகையில், இது 6 துளைகளை கொண்ட திமிரி வகை நாதஸ்வரம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி இந்த கல் நாதஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த கல் நாதஸ்வரத்தை நான் சுமார் 1 மணி நேரம் வாசித்தேன். அதைத்தொடர்ந்து தற்போது வருகிற 28-ந் தேதி எனது மகன் தமிழரசனுடன் சேர்ந்து, கோவிலின் தற்போதைய நாதஸ்வர வித்வானுடன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசிக்க உள்ளேன் என்றார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

    அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள்- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×