திருச்சியில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள். இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.
திருச்சியில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்
Published on

எப்போதும் நாங்கள் தனிக்காட்டு ராஜா என்பது போல 2026 சட்டமன்ற தேர்தல் களத்தையும் தனித்து சந்திப்போம் என அறைகூவல் விடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலுக்கான வெற்றிக்கு தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற மாநில அளவிலான மாநாட்டினை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 21-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்படுகிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றுகிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்கிறார். 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.

மாநாடு பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. தற்போது விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழக தாக்கத்தால் அவரது வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படும் என பலரும் ஆருடம் தெரிவித்து வரும் சூழலில் தமக்கான வாக்கு வங்கியில் எந்த சேதாரமும் ஏற்படுத்த விடமாட்டோம். இது மாற்றத்திற்கான இயக்கம் என மார்தட்டிக் கொண்டு என் வழி, தனி வழி என சீமான் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் மதுரையில் மாடுகளின் மாநாடு, சென்னையில் மரங்களின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு, கல்லணை திருக்காட்டுப் பள்ளியில் நீர் மாநாடு போன்றவற்றை நடத்தி அரசியல் அரங்கை அதிரடித்தார். இது போன்ற மாநாடுகளை சிலர் கேலி செய்தாலும் இது அவருடைய வாக்கு வங்கியை பல தளத்திலும் விரிவாக்கும் முயற்சி என்பதை விவரம் அறிந்தவர்கள் உணர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் திருச்சி ஆலம்பட்டி புதூர் மாநாட்டுக்கான கால் கோள்விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com