search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை - கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு
    X

    கத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை - கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு

    கத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை செய்ததை அடுத்து கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத் தனர்.

    பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் உள்ள கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி தொடங்கும் முன்னரே போலீசார் கண்காணிக்க தொடங்கினர். மாணவர்கள் மாநகர பஸ்களில் கல்லூரிக்கு செல்லும் வழித் தடங்கள் 200-க்கும் மேல் உள்ளன.

    இந்த வழித்தடங்களில் ‘ரூட் தல’யாக (தலைவன் போல) செயல்படும் மாணவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அது போன்ற மாணவர்கள் 75 பேரை பிடித்து போலீசார் எச்சரித்தனர். அவர்களது பெற்றோர்களை கடந்த வாரம் நேரில் அழைத்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரது மேற்பார்வையில் இப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் நேற்று கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளில் போலீசார் மாணவர்கள் பயணித்த பஸ்களில் கடுமையாக சோதனை செய்தனர்.

    அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் எல்லை மீறும் வகையில் நடந்து கொண்டனர். போலீசார் எதிர்பார்த்ததை விட மாணவர்களின் அத்துமீறல்கள் அதிகமாக இருந்தன.

    சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பூக்கடை போலீசார் நடத்திய சோதனையில் பட்டாக்கத்திகளுடன் 4 பேர் பிடிபட்டனர். மணலியை சேர்ந்த மணிகண்டன், காஞ்சீபுரம் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த ஜெகன், திருவள்ளூர் வெங்கல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சிக்கினர்.

    இவர்கள் வைத்திருந்த பைகளில் 10 பட்டாக்கத்திகள் இருந்தன. ஒரே அளவில் பளபளவென மின்னிய அந்த 10 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களில் மணிகண்டன், ஜெகன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள். பிரபாகரன் ஐ.டி.ஐ. முடித்துள்ளார்.


    சிறுவன் 10-ம் வகுப்பு முடித்துள்ளான். இவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதே போல மெரினா அண்ணாசதுக்கம் பகுதியில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி எழிலகம் அருகே நடத்திய சோதனையின் போது அஜித்குமார், சுமன்ராஜ் ஆகிய 2 மாணவர்கள் பிடிபட்டனர்.

    இவர்களும் ஜெயிலில் தள்ளப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவல்லிக்கேணி பகுதியில் பிடிபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று காலை கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி. நகர் நோக்கி சென்ற 46ஜி மாநகர பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறி டிக்கெட் எடுக்காமல் ரகளையில் ஈடுபட்டனர். அமிஞ்சிகரை என்.எஸ்.கே. நகர் பகுதியில் பஸ் வந்த போது மாணவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார்.

    ஆனால் இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரும் டிக்கெட் எடுக்க முன்வரவில்லை. டிக்கெட் எடுக்க மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கண்டக்டர் அந்த மாணவர்களை கீழே இறக்கி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான கார்த்திகேயன், பொன்னேரி என்.எம்.அரசு கல்லூரி மாணவரான சக்திவேல் இருவரும் சேர்ந்து பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமிஞ்சிகரை இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கார்த்திகேயன், சக்திவேல் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 149 மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 2-வது நாளாக கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெரினாவில் உள்ள மாநிலக் கல்லூரி முன்பு உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாநில கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இருப்பினும் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பின்னரே கல்லூரிக்குள் அனுமதித்தனர். #tamilnews

    Next Story
    ×