search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
    X

    கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

    கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் பருவமழை வெளுத்து வாங்குவதால், காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 124.80 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 90.20 அடியாக உயர்ந்தது. இன்று இது 94.50 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரத்து 383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 416 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாளை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் எனவும், இன்னும் 10 நாட்களுக்குள் அணை முழுமையாக நிரம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 487 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று அல்லது நாளை கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணை நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு பகல் 1 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மாலை 6 மணி முதல் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டன.

    கபினி அணைக்கு இன்று 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு முதல் கபினி அணையில் இருந்து நீர்திறப்பு 35ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேராக தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை நோக்கி சீறிபாய்ந்து வருகிறது.

    கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைய 48 மணிநேரமும், மேட்டூர் அணைக்கு வந்து சேர 60 முதல் 62 மணிநேரம் வரை ஆகும்.

    இதனால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு இந்த தண்ணீர் வந்து சேரும்.

    காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணிநேரமும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று இது 1,100 கனஅடியாக குறைந்தது. நாளை இரவு 35ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் வரும்போது அங்குள்ள அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்ட இருப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும். தொடர்ந்து 24 மணிநேரம் மேட்டூர் அணைக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ச்சியாக வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒருஅடி உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிபாய்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும்.

    கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில், அந்த அணையில் இருந்தும் காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் ஒருசேர காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் குறுவை சாகுபடியை எதிர்நோக்கி காத்திருக்கும், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கர்நாடகா கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் வருகிற 19-ந்தேதி வரை மிக பலத்தமழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை கொட்ட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்புவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    Next Story
    ×