search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட லலிதா
    X
    கொலை செய்யப்பட்ட லலிதா

    பூதப்பாண்டி அருகே பெண் கொலை: போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை

    பூதப்பாண்டி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணைக்கு பயந்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் இளையபெருமாள், (வயது 47), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி.

    இளையபெருமாளின் மனைவி லலிதா (35). இவர்களுக்கு அஜய், அஜித் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த மாதம் 5-ந்தேதி அதிகாலையில் இளையபெருமாள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று விட்டார். மகன் அஜித் டியூசனுக்கு புறப்பட்டு சென்றார். டியூசன் முடிந்து அஜித் திரும்பி வந்தபோது வீட்டில் லலிதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் லலிதா தேங்காய் துருவும் கட்டையால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    லலிதாவை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் உள்ள 5 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதற்கு அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தடிக்காரன்கோணம் பகுதியில் மறியல் போராட்டமும் நடத்தினர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இச்சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார். அவர்கள் லலிதா கொலை பற்றி ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

    இதன் அடிப்படையில் லலிதாவின் கணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக அவரை இன்று தக்கலை போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கூறினர். அப்போது இளைய மகனையும் அழைத்து வரும்படி தெரிவித்திருந்தனர்.

    மனைவி இறந்த பிறகு இளையபெருமாள் 2 மகன்களுடன் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். இன்று அதிகாலையில் கண் விழித்ததும் போலீஸ் விசாரணைக்கு செல்ல தயார் ஆனார். இதற்காக குளித்து விட்டு வருவதாக கூறி மாமனார் வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அங்கிருந்து அவர், திரும்பி வரவில்லை.

    இதனால் அவரது மகன், தந்தையை தேடிச் சென்றார். அங்கு இளையபெருமாள் சேலையில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த மகன் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கீரிப்பாறை போலீசார் இளைய பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் பரிசோதனை நடக்கிறது.

    இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு பயந்தே இளையபெருமாள் தற்கொலை செய்தார் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தாயார் கொலை செய்யப்பட்டு 1 மாதம் ஆகும் முன்பு தந்தையும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அவரது மகன்களும், உறவினர்களும் கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.

    இந்த சம்பவம் தடிக்காரன் கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×