கூச்சலிட இது ஒன்றும் உங்கள் கட்சி அலுவலகம் அல்ல: சட்டசபையில் பா.ஜ.க.வை சாடிய மம்தா

மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது பேசிய மம்தா பானர்ஜி, அரசியல் செய்ய இது இடமில்லை பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என்றார்.
கூச்சலிட இது ஒன்றும் உங்கள் கட்சி அலுவலகம் அல்ல: சட்டசபையில் பா.ஜ.க.வை சாடிய மம்தா
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

எதிர்க்கட்சிக்கு ஏதேனும் கருத்து இருந்தால் பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம். கருத்து தெரிவிக்க இங்கு சுதந்திரம் உள்ளது.

எதிர்க்கட்சிக்கு அரசியல் செய்ய இது இடமில்லை. நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. பா.ஜ.க.வின் இந்த கேவலமான அரசியலை கண்டிக்கிறோம். அவர்கள் மாநிலத்திற்கு எதிரானவர்கள், நல்லதை விரும்பவில்லை.

பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் இருப்பதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் கருத்தை பேச்சில் சொல்லலாம். இது ஒன்றும் உங்கள் பா.ஜ.க. கட்சி அலுவலகம் அல்ல. இது சட்டசபை.

பா.ஜ.க. 147 எம்.பி.,க்களை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தாலும், நாங்கள் அந்த வழியில் செல்ல விரும்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதை எதிர்த்துப் போராடுவோம். தைரியம் இருந்தால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேசுங்கள், அதற்கு முன் பேசவேண்டாம் என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com