

புதுடெல்லி:
டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். டெல்லி காங்கிரஸ் உள் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா தலையிடுவதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.
இதற்கிடையே, அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க. பக்கம் தாவலாம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.