என் மலர்
இந்தியா
- அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
- உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள்.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் கொண்டு வருகிறார்.
அவர் ஆட்சி அமைத்து 16 மாத காலத்திற்குள் ரூ. 1.50 லட்சம் கோடிக்கு மேலான முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு கிடைத்துள்ளன. அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது.
அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள். மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் முக்கிய துறைகளில் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் நிபுணர்கள். கிளவுட் ஆர்கிடெக்ட்கள், சைபர் பாதுகாப்பு. தரவு தனியுரிமை நிபுணர்கள் மற்றும் தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தேவை அதிகரிக்கும்.
நெட்வொர்க் உபகரணங்கள் சேமிப்பக அமைப்பு நிறுவல் பராமரிப்பு மற்றும் சரிசெய்தல்.. நிபுணர்கள் பல்வேறு துறைகளில் 24 நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் வேலை வாய்ப்பு பெருகும்.
ஆந்திராவில் ஏஐ கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்படும். இதன் மூலம் ஆந்திரா மட்டுமின்றி தென்னிந்திய வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அடித்தளம் அமைத்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத் பெருநகரத்தை ஹைடெக் சிட்டியாக சந்திரபாபு நாயுடு மாற்றினார். அதேபோல விசாகப்பட்டினத்தையும் மாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
- ராஷ்டிரிய ஜனத தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு செய்யப்பட்ட பிறகும் கூட அந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் அதன் மற்ற தோழமை கட்சிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கணிசமாக 29 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதால் மற்ற தோழமை கட்சிகளுக்குள் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நிதிஷ்குமாரின் கோட்டை என்று சொல்லப்படும் ராஜகீர், சோன்பர்ஸா இடங்களை சிராகின் கட்சி உரிமை கோரி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.
- கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
- காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு ஹிஜாப் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் உத்தரவு நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின்பு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநில கொச்சியில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முஸ்லிம் மாணவியை ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வர அனுமதிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத உரிமைகள் மற்றும் RTE சட்டத்தை சுட்டிக்காட்டி, கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஹிஜாப் தடையை நீக்க உத்தரவிட்டார்.
- மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
- இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தான் இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று அறிய மோகன் லாலுக்கு ஆசை ஏற்பட்டது.
இதையடுத்து தான் இறந்தது போல மொகல் லால் தனக்கு இறுதிச்சடங்கு நடத்தினார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
- வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை.
- பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
பெண் மருத்துவர் ஒருவர் தனது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை எனவும் அதற்கு பதிலாக நமது உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்தும்படியும் பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வாட்ஸ்-அப் பயனாளர்களும் சற்று யோசிக்க தொடங்கியுள்ளனர்.
- கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன்.
- அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து அரசியல்கட்சி தலைவராக உருவெடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. தனது சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ராஷ்டீரிய ஜனதா தளம் கோட்டையான ரகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்பு பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ரித்தேஷ் ரஞ்சன் கர்கஹார் தொகுதி வேட்பாளராகவும், சஞ்சய் சிங் ரகோபூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதனால் பிரசாந்த் கிஷோர் போட்டியிடமாட்டார் என்பது உறுதியானது. தேர்தலில் போட்டியிட்டால் மற்ற தொகுதியில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அக்கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெல்வதற்கு கூட கடுமையாக போராட வேண்டி இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக வர மாட்டார்.
இந்தியா கூட்டணியின் நிலைமையும் சரியாக இல்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.
- டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி.
- பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.
பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் மாலை 6 - இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மங்கலபுரி பகுதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென்று வாலிபர் ஒருவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பரப்பரப்பான இந்த சூழலில் அந்த வாலிபரிடம் கீழே இறங்குமாறு வேண்டுகோள் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தகுந்த நேரத்திற்குள் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரால் அந்த வாலிபர் பத்திரமாக காப்பாற்றப்பட்டார். மேலும், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? அல்லது எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபரின் இந்த தீடீர் தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
- குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூ. 4,920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார்.
- கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாளை கர்னூலில் உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவை பார்வையிடுகிறார். பின்னர் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஓர்வக்கல் மற்றும் கொப்பர்த்தி தொழில்துறை வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். பாபக்கினி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார். குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூ. 4,920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார். சப்பாவரம்-ஷீலாநகர் இடையே ரூ. 960 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பசுமை சாலை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பீலேறு- கலூரு இடையே 4 வழி சாலை விரிவாக்க பணிக்கு ரூ.1,140 கோடியில் பணியை தொடங்கி வைக்கிறார். கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் மோடி நந்தியால் மாவட்டத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீசைலம் கோவில்களில் பூஜை செய்து வழிபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்.
- வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நினைவூட்டுகிறது.
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார். அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடி வந்தார்.
இன்று ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை... வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
- இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது.
புதுடெல்லி:
இந்திய தபால் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தபால் துறை இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும்.
கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது. இதனால் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த ஆகஸ்டு 25-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அந்தக் கும்பலில் இருந்த மூவர் எங்களைத் துரத்தி வந்து, என்னைப் பிடித்துக் காட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.
- பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த மாணவி, அந்த இரவில் நடந்த பயங்கரமான சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவி கூறுகையில், "அவர்கள் தங்கள் வாகனத்தை விட்டுவிட்டு எங்கள் நோக்கி வருவதை நாங்கள் கவனித்தோம். உடனே நாங்கள் காட்டுப் பகுதி நோக்கி ஓட ஆரம்பித்தோம். அந்தக் கும்பலில் இருந்த மூவர் எங்களைத் துரத்தி வந்து, என்னைப் பிடித்துக் காட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.
அவர்கள் எனது தொலைபேசியைப் பறித்துக்கொண்டு, எனது நண்பரைத் திரும்ப வருமாறு அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அவர் வராதபோது, என்னைத் தரையில் படுக்கச் சொல்லி வற்புறுத்தினர். நான் கத்தி கூச்சலிட்டபோது, நான் சத்தம் போட்டால் மேலும் பலரை அழைத்து வந்து இதையே செய்ய வைப்போம் என்று மிரட்டினர்" என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாகத் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர் ஒருவர், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவர் மற்றும் ஒரு இளைஞர் அடங்குவர்.
மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவங்களின் வரிசையைச் சரிபார்க்க, சந்தேகப்படும் அனைத்துக் குற்றவாளிகளையும் கல்லூரிக்கு அருகிலுள்ள சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கிப் பார்க்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இரவு நேரத்தில் மாணவிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதற்கு பதிலளித்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, "அவர் (மம்தா பானர்ஜி) ஒரு பெண்மணி. அப்படியிருக்கையில், எப்படி இவ்வளவு பொறுப்பற்ற கருத்தைத் தெரிவிக்க முடியும்? பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது.
என் மகளை ஒடிசாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எங்களுக்கு அவளது உயிர்தான் முக்கியம். தொழில் அதற்குப் பிறகுதான்" என்று கூறியுள்ளார்.






