என் மலர்
நீங்கள் தேடியது "Parcel Service"
- கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
- இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது.
புதுடெல்லி:
இந்திய தபால் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தபால் துறை இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும்.
கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது. இதனால் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த ஆகஸ்டு 25-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது.
- சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
சென்னை:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இந்திய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ.70 ஆயிரம் (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சுமார் 9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க விமானங்களில் இந்திய பார்சல்களை அனுமதிக்க கூடாது என்று சுங்கத்துறை அறிவித்தது. அமெரிக்காவின் சுங்கத்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய தபால் துறை இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது. ஆனால் அமெரிக்காவில் உள்ள எந்த நகரங்களுக்கும் தமிழகத்தில் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள 2000 தபால் அலுவலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் பதிவு செய்வது வழக்கம். சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கடற்கரை தபால் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலங்களிலும் அமெரிக்காவுக்கு பார்சல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 200 தபால் அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்களில் எல்லாம் இன்று முதல் அமெரிக்காவுக்கு மட்டும் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இந்திய அரசு தெளிவான தகவல்களைப் பெற்று கூடுதலாக வரி விதிப்பு பற்றிய முழு விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மத்திய அரசிடம் இருந்து இது பற்றிய தகவல் வந்த பிறகுதான் பார்சல் சேவை தொடங்கும். அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இருந்து மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்களை உறவினர்கள் அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ பார்சல் வரை அனுப்புவதற்கு அனுமதி உண்டு.
அமெரிக்காவிற்கு 20 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பார்சல் ஆகவும், ஸ்பீட் போஸ்ட் பார்சல் ஆகவும் ரெண்டு பிரிவாக பதிவு செய்யப்படுகிறது.
இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்த கட்ட தகவல் வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
- முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது.
- தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம்.
வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது.
தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். திருச்சி- சென்னை, ஓசூர்- சென்னைக்கு 80 கிலோ பார்சல் வரை 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.210 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பார்சலுக்கு மதுரை- சென்னைக்கு ரூ.300, கோவை- சென்னைக்கு ரூ.330 எனவும், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் கட்டணம் ரூ.390 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது.
- லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும்.
சென்னை:
அரசு விரைவு பஸ்களில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் பார்சல் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது. நீண்ட தூர பஸ் சேவையை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1100 விரைவு பஸ்கள் இயக்கப் படுகின்றன.
போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பார்சல் சேவையை தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் ஏற்கனவே இந்த சேவை கிடைக்கிறது.
அதுபோல அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையக்கூடிய விவசாய பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விவசாயிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அரசு விரைவு பஸ்களை பயன்படுத்தலாம்.
இதற்கான கட்டணம் கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக கிளை மேலாளர்களிடம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் பார்சல் சேவைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கூரியர் சேவையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இச்சேவை தொடங்கும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாரி, தனியார் பஸ்களை விட அரசு விரைவு பஸ்களில் பொருட்களை கொண்டு செல்ல வாடகை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும். அரசு விரைவு பஸ்களில் ஒரே நாளில் கூட பெறும் வசதி உள்ளது. இரவில் ஏற்றி மறுநாள் காலையில் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இதேபோல கூரியர் சேவையும் தொடங்கப்பட உள்ளது. முதலில் சென்னை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் கூரியர் சேவை அளிக்கப்படும். அதன் பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். இன்று பெறப்படும் தபால் கவர்கள் மறுநாள் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால் சுவிக்கி, சுமோட்டா மூலம் வீடுகளுக்கே கடிதங்கள், உறைகளை (கவர்) வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம்.
சென்னை :
தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில், குறுகிய நேரத்தில் அரசு விரைவு பஸ்களை விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
குறைந்த அளவிலான பொருள்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை 2 ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த சேவை வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.
சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.
பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில் திருச்சி (331 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரை (459 கிலோ மீட்டர்) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கிலோ மீட்டர்) தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலம் (341 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நெல்லை (622 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடி (601 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, செங்கோட்டை (645 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கிலோ மீட்டர்) தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600.
கன்னியாகுமரி (740 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கிலோ மீட்டர்) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கிலோ மீட்டர்) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.






