search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்
    X
    முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்

    மும்பையில் ஒரு ஆண்டில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.54 கோடி வசூல்

    மும்பையில் முககவசம் அணியாமல் சென்ற 26 லட்சத்து 87 ஆயிரத்து 339 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 23 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேர் மாநகராட்சியிடமும், 3 லட்சத்து 13 ஆயிரத்து 289 பேர் போலீசாரிடமும், 23 ஆயிரத்து 89 பேர் ரெயில்வேயிடம் சிக்கியவர்கள் ஆவர்.
    மும்பை:

    நிதிதலைநகர் மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மக்கள் பொதுஇடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சியுடன், ரெயில்வே, போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் நேற்று முன்தினம் மட்டும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்ற 4 ஆயிரத்து 314 பேர் மாநகராட்சியினரிடமும், 1,478 பேர் போலீசாரிடம் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5.67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு ஆண்டில் மும்பையில் முககவசம் அணியாமல் சென்ற 26 லட்சத்து 87 ஆயிரத்து 339 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 23 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேர் மாநகராட்சியிடமும், 3 லட்சத்து 13 ஆயிரத்து 289 பேர் போலீசாரிடமும், 23 ஆயிரத்து 89 பேர் ரெயில்வேயிடம் சிக்கியவர்கள் ஆவர்.

    இவர்களிடம் இருந்து மாநகராட்சி ரூ.47 கோடியே 36 லட்சத்து 62 ஆயிரத்து 800, போலீசார் ரூ.6 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரத்து 800, ரெயில்வே ரூ.50 லட்சத்து 30 ஆயிரத்து 200 என மொத்தம் ரூ.54 கோடியை அபராதமாக வசூலித்து உள்ளனர்.
    Next Story
    ×