search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்.
    X
    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்.

    சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?- ஆலோசனை நடத்துகிறது அரசு

    சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்களா? என்பது தொடர்பாக மாநில அரசும், உயர் அதிகாரிகளும் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்ற ஐதீகம் பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த ஆண்டு இந்த வழக்கில் உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கியது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஐயப்ப பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கேட்டு 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.

    நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், டி.ஒய். சந்திர சூட் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பான அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

    அமர்வில் இடம் பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய 3 பேரும் சபரிமலை மறு சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்


    சபரிமலை விவகாரத்தில் நேற்று வெளியான தீர்ப்பில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் தீர்ப்பில் கூறப்படவில்லை.

    இதனால் 7 பேர் கொண்ட அமர்வு சீராய்வு மனுக்களை விசாரித்து இறுதி முடிவு எடுக்கும் வரை கோவிலுக்கு இளம்பெண்கள் சென்று வரலாம், அதற்கு தடை இல்லை என்றே கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை விழாவுக்காக நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இதுபோல மண்டல பூஜை விழா தொடங்கும் போதுதான் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இந்த உத்தரவை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டது. இளம்பெண்களை போலீஸ் பாதுகாப்புடன் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்தது. இதனை கண்டித்து கேரளாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தது.

    சபரிமலை சன்னிதானமும் போர்க்களம்போல மாறியது. எங்கும் போலீசார் குவிக்கப்பட்டு பதட்டமான நிலை காணப்பட்டது.

    இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க தடையில்லை என்ற உத்தரவு தொடர்வதால் இம்முறையும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

    சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாமா? என்ற வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இப்போதும் அமலில் இருக்கும் என்று நான் கருதுகிறேன். தீர்ப்பில் இது தொடர்பாக தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை.

    7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று உத்தரவில் கூறப்பட்டாலும், அந்த அமர்வில் இப்போது இந்த வழக்கை விசாரித்தவர்கள் இடம் பெறுவார்களா? என்றும் குறிப்பிடவில்லை. அந்த அமர்வு புதியதாக அமைக்கப்படுமா? என்றும் கூறவில்லை.

    சீராய்வு மனுக்களில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் கேட்டிருந்தனர். அந்த கோரிக்கைகளை கோர்ட்டு அங்கீகரிக்கவில்லை. மேலும் பழைய தீர்ப்பையும் திருத்தவில்லை.

    இப்படி தீர்ப்பில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால், தீர்ப்பு விவரத்தை முழுமையாக பெற்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகே இந்த விவகாரத்தில் அரசு இறுதி முடிவு எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபரிமலையில் இளம்பெண்கள் நுழைய தடை இல்லை என்பதால் மண்டல பூஜை விழாவுக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு ஏராளமான இளம்பெண்கள் ஆன்லைன் தரிசனத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதும், ஐயப்ப பக்தர்கள், இளம்பெண்களை கோவிலுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது. மீறி இளம்பெண்களை அழைத்துச் சென்றால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறி உள்ளனர்.

    பக்தர்களின் எதிர்ப்பு, காரணமாக சபரிமலையில் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு அரசு இம்முறை பாதுகாப்பு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக தேவசம் போர்டு மந்திரியிடம் கேட்ட போது, இது குறித்து அரசும், உயர் அதிகாரிகளும் ஆலோசித்து முடிவு எடுப்போம். அதுவரை ஊடகங்கள் இப்பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×