search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iyyappan temple"

    கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்வதை கண்டித்து பாஜகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டி போட்டு போராட்டம் நடத்துவதால் வன்முறை தொடர்கிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்தை மீறி அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் வழி மறித்து திருப்பி அனுப்பினர்.

    பக்தர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்களை போலீசார் சபரிமலை சன்னிதானம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனமும் செய்தனர்.

    50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இருவர் சபரிமலையில் தரிசனம் செய்த தகவல் வெளியானதும், கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தது. மேலும் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், சபரிமலை கர்மசமிதியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

    இதையொட்டி நடந்த முழு அடைப்பில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள், அலுவலகங்கள், அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கொடிக் கம்பங்களும் உடைக்கப்பட்டன.

    கேரளத்தின் தென்பகுதியான நெய்யாற்றின்கரை முதல் வடபகுதியான கண்ணூர் வரை கலவரம் பரவியது. சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

    வன்முறையில் ஈடுபட்டதாக நேற்றிரவு வரை 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவனந்தபுரம், மலையின்கீழ், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, ஆலப்புழா நகரங்களில் பதட்டம் நிலவியது.

    இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு அணியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்னொரு அணியாகவும் பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மாறி மாறி தாக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு கண்ணூர் மாவட்டம் தலச்சேரி தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ‌ஷம்சீர் வீடு மீது ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளே காரணம் என்று ‌ஷம்சீர் எம்.எல்.ஏ தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

    ‌ஷம்சீர் எம்.எல்.ஏ. வீடு மீது இரவு 10.30 மணிக்கு குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தலச்சேரியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி. முரளீதரனின் மூதாதையர் வீடு முன்பு வெடிகுண்டு வீசப்பட்டது.

    ‌ஷம்சீர் எம்.எல்.ஏ. வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்று பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. அங்கு மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மலையின்கீழ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள்.

    இதற்கிடையே மலையின் கீழ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏராளமான வெடி குண்டுகள், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிரடிப்படை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது பள்ளியின் மைதானத்தில் ஒரு சாக்கு மூட்டையில் 4 வெடிகுண்டுகள் இருந்தது. இதுபோல கூரிய கற்கள், ஜல்லி கற்கள் மற்றும் ஆயுதங்களும் சாக்கு மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.

    பள்ளிக்குள் வெடி குண்டை வைத்துச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் தொடரும் வன்முறை சம்பவங்களால் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. #sabarimala
    சபரிமலை கோவில் நடை திறந்த 13 நாளில் ரூ.19 கோடியே 37 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.31 கோடி குறைவு. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது.

    இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை போன்றவை மிகவும் சிறப்பு பெற்றது. இதுபோல ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.

    இதனால் சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தலையில் இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் அய்யப்பா என்ற கோ‌ஷத்துடன் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வரலாறு காணாத வகையில் சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் கெடுபிடி மற்றும் போராட்டங்கள் காரணமாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துவிட்டது.

    பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கிய 13 நாளில் ரூ.50 கோடியே 58 லட்சம் மொத்த வருமானம் கிடைத்திருந்தது.

    இந்த ஆண்டு 13 நாளில் ரூ.19 கோடியே 37 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. ரூ.31 கோடி வருமானம் குறைந்துள்ளது.

    சபரிமலை கோவிலில் உண்டியல் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.17 கோடி கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.9 கோடியாக குறைந்துவிட்டது. அதே போல சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை, அப்பம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பிரசாதங்கள் ரூ.7 கோடிக்குதான் விற்பனையாகி உள்ளது. #Sabarimala
    போலீசாரின் கெடுபிடி காரணமாக இந்த முறை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பலவிதமான கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.

    வழக்கமாக மண்டல பூஜையின்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து இருமுடி கட்டுடன் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

    போலீஸ் கெடுபிடி காரணமாக இந்த முறை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது.

    கடந்த 6 நாட்களில் கிடைத்த வருமானத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 63 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மண்டல பூஜையின்போது சபரிமலை மொத்த வருமானம் 6 நாட்களில் ரூ.22 கோடியே 82 லட்சமாக இருந்தது.

    இந்த ஆண்டு ரூ.8 கோடியே 48 லட்சமாக வருமானம் குறைந்துள்ளது. சபரிமலை பிரசாதமான அரவணை மூலம் கடந்த ஆண்டு ரூ.9 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரத்து 90 கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ரூ.3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 750 மட்டும்தான் கிடைத்துள்ளது. காணிக்கை வருமானமும் ரூ.7 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 285-ல் இருந்து ரூ.3 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 550 ஆக குறைந்து விட்டது.

    சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டதால் விடுதி அறைகள் மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த முறை தேவசம் போர்டுக்கு கிடைக்கவில்லை. #Sabarimala
    சபரிமலைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sabarimala #PonRadhakrishnan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலையில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் சபரிமலை செல்லும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களின் கார்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இருந்து ஆதரவாளர்களுடன் இருமுடி கட்டி சபரிமலை சென்றார். இன்று காலை அவர் பத்தினம் திட்டை சென்றடைந்தார். அங்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின்பு அவர் ஆதரவாளர்களுடன் காரில் சபரிமலை புறப்பட்டார். நிலக்கல் பகுதியில் அவரது காரை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பொன். ராதாகிருஷ்ணனின் காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும், அவருடன் வந்தவர்கள் காரில் செல்ல அனுமதியில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு பொன். ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    பத்தினம் திட்டையில் கேரள மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்.

    பொன். ராதாகிருஷ்ணனுடன் வந்தவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் எஸ்.பி. யதீஷ் சந்திரா, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுடன் சமரச பேச்சு நடத்தினார்.

    பின்னர் பொன். ராதாகிருஷ்ணன், காரில் இருந்து இறங்கினார். ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரும் அரசு பஸ்சிலேயே பம்பை செல்வதாக தெரிவித்தார். அதன்படி அவர்கள் அனைவரும் பஸ்சில் பம்பை சென்றனர்.

    இது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, அய்யப்ப பக்தர்களிடம் அரசு இந்த அளவுக்கு கெடுபிடி காட்டக்கூடாது, அரசு பஸ்சில் தான் பக்தர்கள் செல்ல வேண்டும் என்று அவர்களை வற்புறுத்த கூடாது என்றார். #Sabarimala #PonRadhakrishnan
    சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மற்றும் ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


    இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சீராய்வு மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள், ஜனவரி 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த மனுக்கள் மீது திறந்த நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    சபரிமலை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டாலும், தற்போதைய தீர்ப்புக்கு தடை எதுவும் கிடையாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை முடிவு செய்கிறது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர்.

    இதற்கிடையே சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கவில்லை.

    இதற்கிடையே சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.


    அப்போது, சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தன.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. #ShivSena #Keralastrike
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மகளிர் அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் 12 மணிநேர முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. #ShivSena #Keralastrike #SabarimalaTempleverdict
    நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய பெண்கள், ஆண்கள் செல்லும் போது ஏன் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது? என்று இளங்கோவன் கேள்வியெழுப்பியுள்ளார். #Congress #EVKSElangovan #Sabarimala
    கோபி:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் தமிழக அரசை விமர்சித்து யார் பேசினாலும் அவர்களது நாக்கை அறுப்பேன் என பேசி இருக்கிறார். அவரது குடும்பத்தில் இருப்பவர்களே அவரது நாக்கை கடித்து துப்பிவிடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் ஓடை, குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாருவதாக கூறி இந்த அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம். முறையாக தூர்வாரி இருந்தால் இந்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கும்.

    இலங்கை தமிழர்களுக்கு மத்தியில் ஆட்சி செய்த மன்மோகன் சிங் அரசு தான் நிறைய நன்மைகள் செய்தது. இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்தது காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் தான். தமிழக அரசு அமைச்சர்களை வைத்து ஆங்காங்கே பொதுக்கூட்டம் போட்டு இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க. தான் இடைஞ்சல்கள் செய்ததாக பொய் பிரசாரத்தை செய்து வருகிறது. இது வரும் தேர்தலில் எடுபடாது.


    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என தம்பிதுரை கூறி உள்ளார். அவர் சொன்னதை போலவே அ.தி.மு.க. தனித்து நிற்க வேண்டும். அப்போது தான் மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கும்? என தெரிய வரும்.

    சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பை வரவேற்கிறேன். நாடு வளர்ச்சி அடைந்த நிலையில் விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய பெண்கள், ஆண்கள் செல்லும் போது ஏன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கூடாது? ரபேல் விமானம் வாங்க காங்கிரஸ் அரசு இருந்த போது ரூ.526 கோடிக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் அதை தற்போதைய மோடி அரசு ரூ.1200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. எத்தனை கோடிக்கு ஊழல்? என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும். கருணாஸ் மீதான நடவடிக்கை நியாயம் தான். அதே போல் எச்.ராஜாவையும் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமரன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் நல்லசாமி, மகிளா காங்கிரஸ் சித்ரா விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். #Congress #EVKSElangovan #Sabarimala 
    ×