search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
    X

    மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு

    17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றார்.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

    சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியின் பாஜக எம்பி ஓம் பிர்லா (வயது 57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை வரை எதிர்க்கட்சி சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. ஓம் பிர்லாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.



    எனவே, ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் சபாநாயகராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் புதிய சபாநாயகரை வாழ்த்தி பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், “சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். பிர்லா சிறப்பாக செயல்படுவார் என்பது இங்கிருக்கும் பெரும்பாலான எம்பிக்களுக்கு தெரியும். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்” என்றார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓம் பிர்லா மூன்று முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×