search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட ராகுல்காந்தி
    X

    கேரளாவில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட ராகுல்காந்தி

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். #KeralaFloods #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

    கேரள மழை வெள்ள சேதங்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.

    இந்நிலையில் கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா வந்தார்.

    இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். காலை 8.30 மணிக்கு அவர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்திறங்கினார்.

    அவரை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார்.

    கேரளாவில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செங்கனூரும் ஒன்று. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


    மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து அவர்கள் கூறிய தகவல்களையும் கவனமுடன் கேட்டுக்கொண்டார்.

    செங்கனூர் பயணம் முடிந்த பின்பு அவர் ஆலப்புழா செல்கிறார். அங்கும் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்பு நிவாரண முகாம்களுக்கும் செல்கிறார். தொடர்ந்து இன்று பிற்பகல் ஆலப்புழா பகுதியில் கேரள மீனவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.

    கேரளாவின் உட்புற கிராமங்கள், அங்கு ஏற்பட்ட மழை சேதங்களையும் ராகுல் காந்தி பார்வையிட உள்ளார். இதற்காக அவர் நாளையும் கேரளாவில் தங்குகிறார்.

    நாளை காலையில் அவர் கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இங்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியபின்பு அவர் நாளை மாலை டெல்லி புறப்படுகிறார். #KeralaFloods #Congress #RahulGandhi
    Next Story
    ×