search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் நகை மாயம் - முன்னாள் தலைமை அர்ச்சகர், எம்.பி.க்கு நோட்டீசு
    X

    திருப்பதி கோவிலில் நகை மாயம் - முன்னாள் தலைமை அர்ச்சகர், எம்.பி.க்கு நோட்டீசு

    திருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். இவர் திருப்பதி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நியமனம் நடக்கவில்லை, பூஜைகள் சரியாக செய்யவில்லை என்றும் ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணவில்லை என்றும் பல்வேறு புகார்கள் கூறினார்.

    இதற்கிடையே திருப்பதி கோவிலில் அர்ச்சகருக்கு ஓய்வு வயதை 65 ஆக தேவஸ்தானம் நிர்ணயித்தது. அதன்படி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரருக்கு கட்டாய ஓய்வு அளித்தது திருப்பதி தேவஸ்தானம் மீது புகார்கள் கூறியதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறினார்.

    இவ்விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டியும் புகார் ஒன்றை கூறினார்.

    அவர் கூறும் போது, திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

    இந்த நிலையில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாக புண்படும் படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    Next Story
    ×