என் மலர்
தேர்தல் செய்திகள்

புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் 5-வது கட்டத்துக்கான தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 5-வது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த 51 தொகுதிகளில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 51 தொகுதிகளிலும் கடந்த மாதம் 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 20-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 51 தொகுதிகளிலும் கடந்த இரு வாரங்களாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்பட பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்த 51 தொகுதிகளிலும் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியுடன் இந்த 51 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. நாளை (ஞாயிறு) பூத் சிலிப்கள் வினியோகிக்கும் பணி நடைபெறும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 4 கட்ட தேர்தல்களில் 373 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நாளை மறு நாள் நடக்கும் 5-வது கட்ட ஓட்டுப்பதிவு தொகுதிகளையும் சேர்த்தால் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு பெறுகிறது.
மே 12-ந்தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்ட தேர்தலும், மே 19-ந்தேதி 59 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தலும் நடைபெற வேண்டியுள்ளது. இந்த 118 தொகுதிகளும் பீகார், அரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களிலும் டெல்லி, சண்டிகர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் உள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் முடிந்து விட்டது. #Loksabhaelections2019

சென்னை:
அ.தி.மு.க.வை சேர்ந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய 3 பேரும் டி.டி. வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி இருந்தார்.
இதில் ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று சபாநாய கர் நடவடிக்கைக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு கோர்ட்டில் வழக்கு தொடரவில்லை.
இதுபற்றி பிரபு எம்.எல்.ஏ. விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் யார் கொடுத்த யோசனையில் கோர்ட்டுக்கு சென்றார்கள் என்று தெரிய வில்லை. இருந்தாலும் கோர்ட்டு எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது எனக்கும் பொருந்தும்.
நான் அ.தி.மு.க.வில் இருப்பதால் என் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகிறேன். ஆட்சிக்கு எதிராக நான் செயல்படவில்லை.
திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்க கடிதம் கொடுக்க இருக்கிறேன். அ.தி.மு.க. கட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டேன் என்றும் கூறுவேன்.
இதற்கு பிறகும் சபாநாயகர் என் மீது நடவடிக்கை எடுத்தால் அது அ.தி.மு.க.வுக்குதான் இழப்பாகும். காலம்தான் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #3ADMKMLAs
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வடமாநிலங்களில் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்துக்காக செல்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.
மத்தியில் தாமரை மலரும். மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது பலிக்காது.
பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று சொல்வது தவறு. காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி நிலையை கொண்டு வந்தனர். அப்போது பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக சொல்வதை ஏற்க முடியாது. மாநில உரிமைகாக்கப்படுவது போல தேசிய ஒற்றுமையும் அவசியம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை சந்திக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது தான் இதற்கு காரணம். தமிழில் நீட் தேர்வு எழுதுபவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதும் சிலருக்கு தான் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் உள்ளது. அதுவும் அவர்களுடைய விருப்பப்படியே தேர்வு மையத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.
கஜா புயலின் போது பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் புயல் தாக்கிய போது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார்?
இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டதாக சிலர் தவறான தகவலை கூறுவது தவறு. பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி மூலம் தமிழ் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய வேட்பாளர்களிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி, தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன், அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ரேவதி போட்டியிடுகிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பி.செந்தில் நாதன், தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. வேட்பாளராக சாகுல் அமீது, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக செல்வம் போட்டியிடுகிறார்கள்.
சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பி. கந்தசாமி, தி.மு.க. வேட்பாளராக பொங்களூர் பழனிசாமி, அ.ம.மு.க. வேட்பாளராக சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ஜி.மயில் சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக எம்.வி.விஜயராகவன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக பெ.மோகன், தி.மு.க. வேட்பாளராக சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளராக சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அகல்யா போட்டியிடுகிறார்கள்.
4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்துள்ளார். மீண்டும் அவர் நாளை முதல் பிரசாரம் செய்கிறார்.
அரவக்குறிச்சி தொகுதியில் நாளை (5-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு தளவாபாளையம், 5.45 மணிக்கு வேலாயுதம் பாளையம், 6.30 மணிக்கு புன்னம் சத்திரம், இரவு 7.15 மணிக்கு க.பரமத்தி, 8 மணிக்கு தென்னிலை, 8.45 மணிக்கு சின்னதாராபுரம், 9.15 மணிக்கு நஞ்சை காளகுறிச்சி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
6-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி வீரகனூர், 5.45 மணிக்கு ஐராவதநல்லூர், 6.30 மணிக்கு சிந்தாமணி, இரவு 7.30 மணிக்கு வளையங்குளம், 8 மணிக்கு பெருங்குடி, 8.45 மணிக்கு அவனியாபுரம் பஸ்நிலையம், 9.20 மணிக்கு எம்.எம்.எஸ். காலனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
7-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம், 5.40 மணிக்கு புதியம்புத்தூர், 6.20 மணிக்கு தருவைக்குளம், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை ஊரணி, 8 மணிக்கு முத்தம்மாள் காலனி, 8.45 மணிக்கு முத்தையாபுரம், 9.20 மணிக்கு புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
11-ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி நாகமலை புதுக்கோட்டை, 5.30 மணிக்கு வடபழஞ்சி, 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி. பட்டி, 8 மணிக்கு நிலையூர் கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
12-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி வசவப்புரம், 5.45 மணிக்கு வல்லநாடு, 6.30 மணிக்கு தெய்வ செயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவாலப்பேரி, 8 மணிக்கு ஒட்டநத்தம், 8.45 மணிக்கு ஒசநூத்து, 9.15 மணிக்கு குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
13-ந்தேதி மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் சீத்தாப்பட்டி காலனி, 5.45 மணிக்கு அரவக்குறிச்சி, 6.30 மணிக்கு பள்ளப்பட்டி, இரவு 7.15 மணிக்கு கினங்கனூர், 8 மணிக்கு குரும்பப்பட்டி, 8.45 மணிக்கு ஆண்டில்பட்டி கோட்டை, 9.15 மணிக்கு ஈசரத்தப் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
14-ந்தேதி மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதி சின்னியம் பாளையம், 5.45 மணிக்கு முத்துக்கவுண்டம்புதூர், 6.45 மணிக்கு லாகராயம்பாளைம், இரவு 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோடு, 8 மணிக்கு கருமத்தம்பட்டி, 8.30 மணிக்கு சாமளாபுரம், 9.20 மணிக்கு சூலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (5-ந் தேதி) முதல் 14-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.
நாளை (5-ந்தேதி) ஓட்டப்பிடாரம் தொகுதி, 8-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதி, 9-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதி, 11-ந்தேதி சூலூர் தொகுதி, 12-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதி, 13 மற்றும் 14-ந்தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 5 மணிக்கு தென்னம்பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும் 6 மணிக்கு கருமத்தம் பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரசாரம் செய்கிறார்.
6-ந்தேதி சூலூர் தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார்.
7-ந்தேதி மற்றும் 8-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து அதன் பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு அவர் அரவக்குறிச்சி தொகுதி தும்பிலாடியில் பிரசாரத்தை தொடங்குகிறார். 4.30 மணிக்கு ஆரியூர், 5 மணிக்கு எல்லமேடு, 5.15 மணிக்கு புஞ்சை காளிக்குறிச்சி, 6 மணிக்கு ராஜபுரம், 6.15 மணிக்கு சின்ன தாராபுரம், 6.45 மணிக்கு ஒத்தமாந்துறை, இரவு 7 மணிக்கு பெரிய திருமங்களம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதுக்கோட்டை, 5.30 மணிக்கு காலங்கரை, 6.15 மணிக்கு ஓட்டப்பிடாரம், 7 மணிக்கு புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.
10-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 12-ந்தேதி சூலூர் தொகுதியிலும், 15-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 16 மற்றும் 17-ந்தேதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார்.
7-ந்தேதி சூலூர் தொகுதியிலும்,10-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 12-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 13-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார். வருகிற 6-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 9-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 13-ந்தேதி சூலூர் தொகுதியிலும், 14-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 15-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகிலும், இரவு 8 மணிக்கு அவனியாபுரம் பஸ் நிலையம் அருகிலும் பிரசாரம் செய்கிறார்.
நாளை (5-ந்தேதி) மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் தருவைக்குளம் மாதா கோவில் அருகிலும், இரவு 8 மணிக்கு தாளமுத்துநகர் பஸ் நிலையம் அருகிலும் பிரசாரம் செய்கிறார். #TNAssemblyByElection
சென்னை:
வருகிற 19-ந் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கட்சி தொண்டர்களும், வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த 4 தொகுதிகளிலும், அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கும் தேவையான வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களும் தயாராக உள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்படுகிறார். இந்த தொகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்காளர்கள் அனைவருக்கும் பூத்சிலிப் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பூத்சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. எனவே வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் 4 தொகுதிகளிலும், ஓட்டுப் போடுபவர்களுக்கு இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. #TNElections2019 #TNAssemblyBypoll
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் கடந்த மாதம் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. அமேதி தொகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எளிதான வெற்றி கிடைக்காது என்று நேற்று தகவல்கள் வெளியானது. அமேதி தொகுதி மக்கள் ராகுல் மீது அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் எனவே அவருக்கு இந்த தடவை வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ராகுல் காந்தி கடந்த 5 ஆண்டுகளில் சில தடவை மட்டுமே அமேதிக்கு வந்ததாக அந்த தொகுதி மக்கள் புகார் சொல்கிறார்கள். மேலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு போட்டியிட சென்றதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்றும் அந்த தொகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் அமேதி தொகுதி வாக்காளர்களுக்கு ராகுல் நேற்று திடீரென கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பி வருகிறார்கள். “அமேதி என் குடும்பம்” என்று தலைப்பிட்டு மிக உருக்கமாக எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமேதி தொகுதி என் குடும்பம் ஆகும். இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் நான் எனது குடும்ப உறுப்பினராக கருதுகிறேன்.
அமேதி மக்கள் கொடுத்த அன்பின் அடிப்படையில் தான் நான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். இதன் மூலம் நாட்டின் அனைத்து திசைகளையும் ஒற்றுமைப்படுத்த முயல்கிறேன்.
அமேதி மக்களின் உண்மை, நேர்மை, எளிமையில்தான் அவர்களது பலம் அடங்கி இருப்பதாக நான் கருதுகிறேன். உங்களது துணிச்சலால்தான் நானும் உண்மையை கடைபிடித்து வருகிறேன். எனவே வரும் தேர்தலில் எனக்கு அதிக அளவில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தற்போது நாட்டில் 2 விதமான சித்தாந்தங்கள் உள்ளன.
1. தொழில் அதிபர்களுக்காகவே பாரதிய ஜனதா செயல்படுகிறது.
2. ஏழை-எளியவர்களுக்காக காங்கிரஸ் கட்சி வேலை செய்கிறது. இந்த சித்தாந்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமேதி தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் தொடங்க நான் நடவடிக்கை எடுத்து இருந்தேன். அந்த திட்டங்கள் அனைத்தையும் பா.ஜனதா அரசு முடக்கி வைத்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த தடைகள் அனைத்தும் உடைக்கப்படும். அமேதி தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் எழுதி உள்ளார். #RahulGandhi
சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஒட்டப்பிடாரத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய மு.க. ஸ்டாலின் இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
மு.க. ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அவர் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். மாலை 5 மணிக்கு தென்னம் பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும் வேனில் நின்றவாறு தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் கோவையில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்
நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார். #MKStalin #SulurConstituency
மதுரை:
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடை பெறுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளாச்சேரி, திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த போது தான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அவர் உயிரோடு இருந்தாரா? சுய நினைவோடு இருந்தாரா? என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மர்மமாகவே உள்ளது.
ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று நீதி மன்றத்துக்கு சென்று வெற்றி பெற்ற சரவணன்தான் இப்போது தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வருகிற 23-ந் தேதி வெளியாகிறது. அன்று மோடி வீட்டுக்கு போவது போல எடப்பாடி பழனிசாமியும் வீட்டுக்கு போய் விடுவார். கருணா நிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி மத்தியிலும், மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும். அப்போது ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் போடுவதுதான் முதல் வேலை. இதை நான் சொல்லும் போதெல்லாம் அ.தி.மு.க. தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களே எங்களிடம், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் விலகும் என்று கூறுகிறார்கள். கோடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் முழுமையாக விசாரிக்கப்படும்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ. வேலை வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி பெண்களை வரவழைத்து தனது அலுவலகத்திலேயே அசிங்கப்படுத்தி போட்டோ - வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.
இதுகுறித்து வக்கீல் போலீசிடம் புகார் கொடுத்தார். ஆனால் அவரை பிடித்து உள்ளே வைத்து விட்டார்கள். இதுபோன்ற அக்கிரமித்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #MKStalin #DMK






