என் மலர்
தேர்தல் செய்திகள்
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் 10-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். 10-ந்தேதி திருப்பரங்குன்றம், 12-ந்தேதி சூலூர், 15-ந்தேதி அரவக்குறிச்சி, 16, 17 ஆகிய தேதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 6-ந்தேதி ஓட்டப்பிடாரம், 9-ந்தேதி திருப்பரங்குன்றம், 13-ந்தேதி சூலூர், 14-ந்தேதி ஓட்டப்பிடாரம், 15-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பிரசாரம் செய்கிறார்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் சூலூரில் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை இன்று (சனிக்கிழமை) நடத்துகிறார். அதனை தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னூரில் 5-ந்தேதி (நாளை) பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது தொடர்பாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த இருப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssemblyByElection #Sarathkumar
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவரது பேச்சை கேட்க பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
என்னை வழி நெடுகிலுமாக சிறப்பான முறையில் வரவேற்ற உங்களுக்கு மனதார நன்றி கூறுகிறேன். தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி அல்ல தி.மு.க. எப்போதும் மக்களுக்காக பணியாற்றக்கூடியவர்கள் நாங்கள்.
வருகிற 23-ந் தேதி, திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பது போல் மக்களிடமும் அந்த நம்பிக்கை இருப்பது நன்றாகவே தெரிகிறது.
மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதேபோல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலியாக வேண்டும். ஓட்டப்பிடாரம் தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு பெண் என் கையை குலுக்கி பாரம்பரியமாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தேன். இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களிக்கப்போகிறேன் என்றார். அதேபோல இன்னொரு சகோதரி கடந்த 4 முறை இரட்டை இலைக்குத் தான் வாக்களித்தேன். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களிக்கப்போகிறேன் என்றார்.
அதே போல் திருப்பரங்குன்றத்தில், இரட்டை இலைக்கு வாக்களித்த ஒரு பெண் உதயசூரியனுக்கு வாக்களிக்கப்போவதாக என்னிடம் கூறினார். (அப்போது அதோ நிற்கிறாரே என்று கூறி கூட்டத்தில் அந்த பெண்ணை காட்டினார். உடனே அந்த பெண் தனது கையை உயர்த்தி காட்டினார்). மக்களின் இந்த எழுச்சியால் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறப்போவது உறுதி.
திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் வைக்கப்பட்ட ரேகை ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்று கோர்ட்டை நாடி வெற்றி பெற்றார். உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் பொய், புரட்டுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான நிலை உள்ளது. ஜெயலலிதாவும் ஒரு பெண்தான். அவருக்கே பாதுகாப்பு இல்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. இதை நான் கூறவில்லை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பதவி இல்லை என்ற நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தியபோது சொன்னார். ஜெயலலிதாவின் கோடநாடு வீட்டில் 4 பேர் கொலையுண்ட விஷயத்திலும் நடவடிக்கை இல்லை. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை.
கலைஞருக்கு அண்ணாவின் சமாதிக்கு அருகில் 6 அடி இடம் கேட்டோம். தர மறுத்து விட்டனர். மக்களுக்காக சேவையாற்றிய கலைஞருக்கு 6 அடி இடம் கூட தராத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். விலைவாசி உயர்வு, குடிநீர் தட்டுப்பாடு, அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலை மாற தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரை மாநகர் பொறுப்புக் குழு தலைவர் கோ.தளபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலையில் திருப்பரங்குன்றம் வந்த ஸ்டாலின், திருப்பரங்குன்றம் நுழைவு வாசலில் இருந்து பஸ் நிலையம் வரை சுமார் 45 நிமிடங்கள் நடந்தே சென்று, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கடை வீதியில் ஒவ்வொரு கடையாக வியாபாரிகளை பார்த்து வாக்கு சேகரித்தார்.
அப்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் ஆர்வமாக வந்து அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெண்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம், சன்னதி தெரு, பெரிய ரத வீதிகளுக்கும் சென்று, அங்கு திரண்டு இருந்த மக்களை சந்தித்தும் ஆதரவு கோரினார். #TNBypoll #DMK #MKstalin
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபாநாயகர் மீது தி.மு.க. தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் அவருக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.#Kanimozhi #DMK



சென்னை:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதையடுத்து இவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தார்கள்.
அதன்பேரில் கடந்த வாரம் சபாநாயகர் தனபாலை அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்தார். அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதற்கான ஆதாரங்களையும் அவர் அளித்தார்.
இதை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படி அவர் 3 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி 3 அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த நோட்டீஸ் ஒவ்வொன்றும் தலா 180 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. அதில் கட்சி நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டு இருப்பதால் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? உங்கள் பதவியை ஏன் பறிக்க கூடாது? என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
ஒரு வாரத்துக்குள் இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நோட்டீஸ்களை 3 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்து போட்டு பெற்று கொண்டனர்.
அந்த நோட்டீஸ்களை படித்து பார்த்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள், “நாங்கள் இப்போதும் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறோம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக நீடிக்கிறோம். அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட மாட்டோம்” என்று கூறி வருகிறார்கள்.
என்றாலும் அவர்கள் மூவரும் டி.டி.வி.தின கரனுக்கு ஆதரவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புகைப்பட ஆதாரங்களும் இருக்கின்றன. எனவே அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த தகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்க ரத்தினசபாபதி, பிரபு, கலைச் செல்வன் 3 எம்.எல்.ஏ.க்களும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூவரும் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் மூவரும் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நீடிப்பதாகவும் கட்சி விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளிப்பார்கள். சபாநாயகர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூவரும் டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது. தினகரன் அவர்களுக்கு எத்தகைய திட்டத்தை கூறியுள்ளார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு. க.வுடன் சமரசமாக செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் மூவரும் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தொடர்பு கொண்டு சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.
3 எம்.எல்.ஏ.க்களில் பிரபு, கலைச்செல்வன் இருவரும் தங்கள் தொகுதியில் அ.தி.மு.க. தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே டி.டி.வி.தினகரன் பக்கம் சாய்ந்தனர். அந்த உள்ளூர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சி.வி.சண்முகம் பேச்சு நடத்திஇருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே பிரபு, கலைச்செல்வன் இருவரும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட தயார் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் பிரபு, கலைச் செல்வனை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. டி.டி.வி.தினகரனின் சிலிப்பர்செல்களாக அவர்கள் அ.தி.மு.க.வுக்குள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்களது பதவியை பறிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருசாரார் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால் தங்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச் சாட்டை மறுக்கும் பிரபுவும், கலைச்செல்வனும் நாங்கள் தினகரன் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அ.தி.மு.க. கொறடா உத்தரவுபடி செயல்படுவோம். சட்ட சபையில் அ.தி.மு.க. அரசு கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஆதரித்து வாக்களிப்போம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ரத்தினசபாபதி மட்டும் தொடர்ந்து டி.டி.வி. தினகரனின் ஆலோசனையை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரபு, கலைச்செல்வன் இருவரும் தற்போது அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைபாடுகளில் இருந்து மாறி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் விவகா ரத்தில் யார்-யார் பதவி பறிக்கப்படும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், “3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் தமிழ்நாடு சட்டசபை சட்ட விதி 7(3)ன்கீழ் நடவடிக்கை எடுக்க கொறடா மனு கொடுத்துள்ளார். இந்த மனு நகல் சட்டசபை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
அவர் முடிவு எடுப்பதற்கு எந்த கால கெடுவும் கிடையாது. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் அவர் முடிவு எடுக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்” என்றார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர். எனவே இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தே 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா? என்பது தெரியவரும். #ADMK #3ADMKMLAs
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேதாஜி நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்தப்பகுதி மக்கள் பாராளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்கு அளித்து உள்ளீர்கள். இப்போது சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிறது.
ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. ஏ.கே.போஸ் போட்டியிட்ட போது ஜெயலலிதா சுய நினைவில்லாமல் இருந்தபோது கைரேகை வாங்கியது செல்லாது என்று சரவணன் வழக்கு போட்டு வெற்றி பெற்றதால் இந்த தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர். இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்காகத்தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்.

மத்தியில் மோடி தோற்பது உறுதி. மோடி தான் எடப்பாடி ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்படி என்றால் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும் உறுதி.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று கூறி ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்தார். அதன் பின்னர் துணை முதல்- அமைச்சராகி விட்டார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளதால் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் தற்போது எங்களுக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்.
கொடநாட்டில் ஜெயலலிதா வைத்திருந்த ஆவணங்கள் திருட்டு போய் உள்ளது. 4 கொலைகளும் நடந்துள்ளன. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கருணாநிதி மறைந்த பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய 6 அடி இடம் கேட்டோம். அதைக்கூட தர இந்த அரசுக்கு விருப்பம் இல்லை. கோர்ட்டுக்குச் சென்று தான் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உத்தரவு பெற்றோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். கேபிள் கட்டணம் குறைக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin
மதுரை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நாகராஜன் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை ஆயத்த பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அங்குள்ள பாதுகாப்பு குளறுபடிகள் நீக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என இனம் கண்டறியப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல் பணிக்காக 1,500 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி தரப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் 1,500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. திருப்பரங்குன்றத்தில் பறக்கும்படை சோதனை மூலம் இதுவரை ரூ. 9 லட்சத்து 74 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும். தேர்தலையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், இடைத்தேர்தலையொட்டி திருப்பரங்குன்றத்தில் கூடுதலாக 12 சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளில் டெல்டா குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார். #TNBypoll
வாரணாசி:
பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அப்போது மோடிக்கு ஆதரவாக அவரை போன்று தோற்றம் உடைய அபிநந்தன் பதக் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் இத்தேர்தலில் வாரணாசியில் அபிநந்தன் பதக் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து ஓட்டுகேட்டு வருகிறார். பிரசாரத்தின் போது அவர் மோடி போல் பேசினார். நான் அரசாங்கத்தை வழி நடத்துவதில் தோல்வி அடைந்துவிட்டேன். உண்மையை தான் சொல்கிறேன்.
எனவே இத்தொகுதியை அஜய்ராயிடம் ஒப்படைக்கிறேன் என்று அபிநந்தன் பதக் பேசி கிண்டல் அடித்தார். பா.ஜனதாவில் இருந்த அபிநந்தன் பதக் அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகினார். #Congress #Varanasiconstituency
ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் ஒடுக்கப்பட வேண்டும். தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளார்கள். கோவில் சிலைகள் நிச்சயமாக பாதுகாக்க படவேண்டும். சிலைகள்கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் குழு சிறப்பான பணியை செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #TNBypolls #BJP #TamilisaiSoundararajan






