என் மலர்
தேர்தல் செய்திகள்
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஓசூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
நேற்று இரவு மதுரை வந்த அவர் ஓட்டலில் தங்கினார். இன்று காலை மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் இருந்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சன்னதி தெரு, கோவில் வாசல், பெரியரதவீதி வழியாக கிரிவலப்பாதையில் நடந்தே சென்றார். அந்தப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விளாச்சேரியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத்தொடர்ந்து திருநகர், ஹார்விட்டி, அவனியாபுரம், பெருங்குடியில் பேசுகிறார்.
நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கைத்தறி நகரில் நெசவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மாலை 5 மணிக்கு கூத்தியார் குண்டுவில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தனக்கன் குளம், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, நாகமலை புதுக்கோட்டை, புதூர் ஆகிய பகுதிகளில் பேசுகிறார். #TNBypoll #DMK #MKstalin
ஜெயங்கொண்டம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் மகிமைபுரம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தவேல் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சரக்கு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
சந்தேகமடைந்த அதிகாரி கள் அந்த லாரியை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 90 பெட்டிகளில் இருந்தது. ரூ. 50 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் லாரியை பறிமுதல் செய்ததோடு, அதனை ஓட்டிவந்த திருப்பூர் மாவட்டம் சூரியப்பன் பள்ளத்தை சேர்ந்த நேரு (வயது 38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போதை பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #LoksabhaEelctions2019
இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் கோரம்பள்ளம் பஜாரில் திரண்டு இருந்த மக்களிடையே பேசியதாவது:-
வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து சிறப்பான வெற்றியை பெற்றுத்தர வேண்டும். கடந்த 18-ந் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர் இந்த நாட்டின் பிரதமராக இருக்க கூடாது என்று கருதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவு தந்து உள்ளார்கள்.
அதே போன்று மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற உணர்வோடு, வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலில் தி.மு.க.வுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வந்து உள்ளேன்.
தூத்துக்குடியில் கடுமையாக மழை பெய்து வெள்ளம் வந்த போது, நிவாரண பணிகளில் எப்படி ஈடுபட்டோம் என்பது உங்களுக்கு தெரியும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையின் போது, இந்த ஆட்சி 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடுமையை கண்டித்து தி.மு.க. சார்பில் ஓடோடி வந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தோம். நிவாரண பணிகளில் ஈடுபட்டோம். இது போன்று பல பணிகளில் உங்களோடு இருந்து பாடுபடுவது தி.மு.க..
18-ந் தேதி நடந்த தேர்தலில் மோடி வீட்டுக்கு செல்கிறார். அதே போன்று இங்கு நடந்து கொண்டு இருக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சியும் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. இங்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறப்போகிறது.
ஜெயலலிதா மரணத்திலேயே மர்மம் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எந்த ஒரு முதல்அமைச்சர் இறந்த போதும் நீதி விசாரணை நடந்தது கிடையாது. ஜெயலலிதாவுக்குத்தான் முதல் முறை. ஆகையால் இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலே அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய முடியும்.
கோரம்பள்ளம் குளத்தில் எல்லா பருவகாலத்திலும் தண்ணீர் தேக்கும் வகையில் தூர்வாரப்படும். குடிநீர் தேக்க தொட்டி, கழிவுநீர் வடிகால், பஸ் வசதி, ரேஷன் கடை உள்ளிட்ட உங்கள் தேவைகளை நீங்கள் வெற்றி பெறச்செய்யும் சண்முகையா நிறைவேற்றித் தருவார். தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் இருந்தால் ஓரளவுக்கு சரி செய்து இருக்க முடியும்.
தாமிரபரணி ஆறு சீவலப்பேரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி தண்ணீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். தூத்துக்குடி- சென்னை கூடுதல் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும். கேபிள் டி.வி. கட்டணத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவோம். ஆகையால் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம் தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
மு.க.ஸ்டாலின் கோரம்பள்ளத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கு மெயின் பஜாரில் நடந்து சென்று கடைகளில் இருந்த வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அதே போன்று கூட்டாம்புளி பகுதியில் காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சில் ஏறி, அதில் இருந்த பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார்.
சேர்வைக்காரன் மடத்தில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரவு 7.40 மணி அளவில் முடிவைத்தானேந்தலில் பிரசாரத்தை நிறைவு செய்தார். பின்னர் அவர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். #DMK #MKStalin #TNByPoll
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து 2-வது நாளாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மேல அனுப்பானடி, அவனியாபுரம், சிந்தாமணி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப்போதோ நடந்திருக்க வேண்டும். 8 மாதத்துக்கு முன்பு நடைபெற வேண்டிய தேர்தலை புயலை காரணம் காட்டி நிறுத்தி விட்டனர். ஆனால் அது காரணம் அல்ல. டெபாசிட் போய்விடும் என்ற பயம்தான் தேர்தலை நிறுத்தியதற்கு காரணம்.
இந்த பகுதியில் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. காரணம் நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்கவில்லை. கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீரை கூட சேமித்து வைக்க முடியவில்லை. குடிநீரை பாட்டிலில் தான் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் இங்கு நடைபெறும் மோசமான ஆட்சிதான் காரணம். சுதந்திரத்துக்குப் பின்னர் இதுபோன்ற மோசமான ஆட்சி தமிழகத்தில் நடை பெறவில்லை என்று கூறும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் இரட்டை இலை சின்னத்தை படுதோல்வி அடையச் செய்தார்கள். அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று பண பேரம் பேசினார்கள். ஆனால் வாக்காளர்கள் இது ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை என்று கூறி அவர்களை புறக்கணித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்தார்கள். அங்கு தி.மு.க.வும், காங்கிரசும் டெபாசிட் இழந்தது. அதேபோன்ற நிலைதான் திருப்பரங்குன்றத்திலும் ஏற்படும். பரிசு பெட்டகம் தான் வெற்றிச்சின்னம்.
முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இங்கு வரும்போது அவர்களிடம் குடிநீர் கிடைக்கவில்லை என்று சொல்லுங்கள். அதேபோல அமைச்சர்கள், எம்.எல்.ஏ. வந்தாலும் கேளுங்கள். மக்களை விலை பொருளாக நினைக்கும் அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
வருகிற 23-ந்தேதியுடன் ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்ற பயத்தில்தான் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே 18 பேரை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்றியது போல இப்போதும் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி பலிக்காது. அவர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி தான் கிடைக்கப் போகிறது.
கஜா புயல் பாதிப்புகளை பார்க்க வராத மோடி தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் வருகிறார். அதனால் தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக கோபமடைந்து மோடிக்கு எதிராக திரும்பியுள்ளனர். மோடி அனைத்து மாநிலத்தையும் அடிமை ஆட்சி செய்ய நினைக்கிறார். அவருக்கு எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஒத்து ஊதுகின்றனர். இதனை மக்கள் விரும்பவில்லை.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #TTVDinakaran
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான மனுத்தாக்கல் கடந்த மாதம் (ஏப்ரல் 22)-ந் தேதி தொடங்கியது. நேற்று மனுக்கள் வாபஸ் பெறுவது முடிவடைந்ததையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன், தி.மு.க. வேட்பாளர் சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் காந்தி உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர்.
வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்தார். கனிமொழி எம்.பி. தொகுதியில் தொடர்ந்து முகாமிட்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யத்தின் வேட்பாளர் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (3-ந் தேதி) தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வருகிறார்.
பின்னர் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.30 மணியளவில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட குமரெட்டியாபுரம் பகுதியில் தனது பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார். அதனை தொடர்ந்து அய்யப்பன்நகர், கே.டி.சி.நகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து விட்டு இரவு 7 மணியளவில் தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் நெல்லைக்கு வந்து ஓய்வெடுக்கிறார். கமல்ஹாசன் நாளை 2-ம் நாளாக ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்கிறார். இறுதிகட்டமாக வருகிற 14-ந் தேதியும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். #KamalHaasan #OttapidaramConstituency
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் மனுக்கள் வாபஸ் முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சூலூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சுயேட்சைகள் என 22 பேர் போட்டியிடுகிறார்கள்.
சுயேட்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து சூலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டார்
துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு இருகூரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
பின்னர் சூலூர், சோமனூர், வாகராயம் பாளையம், தென்னம் பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 5, 6-ந் தேதிகளில் சூலூரில் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்தை தொடர்ந்து சூலூர் தொகுதி இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. #OPannerselvan #SulurConstituency



லக்னோ:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.
இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில் மசூத் அசார் பெயரை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பயன்படுத்துவதா, என்று மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
முந்தைய பா.ஜனதா அரசுதான் மசூத்அசாரை விருந்தாளி போல் நடத்தியது. பின்னர் அவரை விடுவித்தது தற்போது தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காக மசூத் அசார் பெயரை பா.ஜனதா பயன்படுத்துகிறது. இது கண்டனத்துக்குரியது.

இதே போல மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் தியாகத்தையும் பா.ஜனதா தேர்தலுக்கு பயன் படுத்துகிறது. நாட்டின் எல்லை பகுதிகள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை. அதனால்தான் எல்லையில் தொடர்ந்து அத்து மீறல்களும், ஊடுருவல்களும் நிகழ்கின்றன.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெரிய அளவிலான வாக்குறுதிகளையும், கவர்ச்சிகரமான திட்டங்களையும் அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன. அதை கண்டு மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே மனநிலையில் உள்ள கட்சிகள் ஆகும்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார். #Mayawati #bjp #masoodazhar
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் வருகிற மே 6, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் ரம்ஜான் நோன்பு மற்றும் கடும் வெயில் காரணமாக எஞ்சிய வாக்குப் பதிவை முன்னதாக, தொடங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரம்ஜான் நோன்பு மற்றும் வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு மக்கள் ஓட்டு போட ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால் காலை 5.30 மணிக்கே தொடங்க ஏற்பாடு செய்வது குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. #LoksabhaEelctions2019 #ElectionCommission #SC






