என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    திண்டுக்கல்லில் அனுமதி பெறாமல் நடத்த முயன்ற மக்கள் நீதி மய்ய கூட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். #LSPolls #MakkalNeedhiMaiam
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டாக்டர் சுதாகர் போட்டியிடுகிறார். இதனையொட்டி அக்கட்சி சார்பில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு நிர்வாகிகள் ஒன்று கூடினர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெற வேண்டும் எனவும், கொடி கம்பங்கள் ஊன்றுதல், மைக் செட் போடுதல் என அனைத்துக்கும் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து அந்த கூட்டத்துக்கு எவ்விதமான அனுமதியும் வாங்கவில்லை என தெரிய வரவே அதனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #LSPolls #MakkalNeedhiMaiam
    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். #TTVDhinakaran #AMMK
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

    இதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

    கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும்.

    விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

    டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

    ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

    அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

    இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

    விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.

    மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.



    நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறை கொண்டு வரப்படும்.

    ஏழை பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய  வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்படும்.

    இளைஞர்கள் சுய உதவி குழு அமைக்கப்படும்.

    வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு தனி நல வாரியம்.

    பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கோவை, திருச்சி, மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TTVDhinakaran #AMMK
    அரியலூர் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    செந்துறை, மார்ச். 22-

    அரியலூர் அருகே உள்ள நாச்சியார்பேட்டையில் இன்று பகலில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி இலரா தலை மையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீ சார் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழி யாக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அப் போது காருக்குள் ஏராளமான பொட்டலங்களில் வெள்ளி நகைகள் இருந்தது.

    இதுபற்றி காரை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளிநகைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்து கருவூலத் தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அந்த நகை களை முருகன் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு ஆர் டரின் பேரில் திருச்சியில் இருந்து வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்ப டைத்தால் வெள்ளி நகை களை பெற்றுச் செல்லலாம் என்று முருகனிடம் அதிகாரி கள் தெரிவித்தனர்.

    உரிய ஆவணங்களுடன் தங்கம் உள்ளிட்ட பொருட் களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் வியாபா ரிகள் பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று அதிகாரிகளிடம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது. * * * அரியலூர் அருகே நடந்த வாகன சோதனையில் சிக்கிய ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார். #LSPolls #TTVDhinakaran #AMMK
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். முன்னாள் அமைச்சர்கள், பழனியப்பன், ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன் ஆகியோர் எம்.பி. தேர்தலில் நிற்க விருப்பப்பட்டனர். அதனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    எம்.எல்.ஏ. தேர்தலில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி உடல்நிலை காரணமாக போட்டியிட விரும்பவில்லை என்றார். அதனால் அவருக்கு பதில் கட்சி நிர்வாகி நிறுத்தப்பட்டுள்ளார். எங்கள் கட்சியின் சின்னம் 25-ந்தேதி தெரியவரும்.

    இந்த தேர்தலில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியினர் தோல்வி அடைவார்கள். எங்கள் கட்சி சார்பில் ஜெயிக்கும் எம்.பி.க்கள்தான் பிரதமரை தேர்வு செய்யும் நிலை உருவாகும்.

    நான் 23 வயதில் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவன். எனவே கருத்து கணிப்பு படி நீங்கள் நினைப்பது நடக்காது. அரசியலில் 3 பிளஸ்-1 என்றால் 4 கிடையாது. பூஜ்ஜியம் கூட ஆகலாம். டேபிளில் உட்கார்ந்து கணக்கு போடுவது உங்கள் ஆசைக்கு சரியாக இருக்கும். நடைமுறையில் சாத்தியமில்லை.

    எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்திலும் எங்களால் ஆட்சி மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TTVDhinakaran #AMMK

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். #LSPolls #DMK #Kanimozhi

    சாயல்குடி:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. சாயல்குடி, கமுதி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் பினாமியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நலன் கருதாமல் ஆட்சி தொடர வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.

    இந்த பாரளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவ-மாணவிகள் படிக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


    வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி ஆட்சி செய்த மோடி எந்தவிதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்று கூறிய பா.ஜ.க. ஆட்சியில் தான் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

    விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் ஆண்டுக்கு சராசரியாக 21,000 பேர் தற்கொலை செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி வேதாந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கியாஸ் மானியம் வழங்குவேன் என்று கூறிய மோடி, ஆட்சிக்கு வரும் போது சிலிண்டர் விலை 300 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.1,000.

    பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் நம் நாட்டை காப்பாற்ற முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் முகம் தான் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாக்களியுங்கள்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.  #LSPolls #DMK #Kanimozhi

    பாராளுமன்ற தேர்தலையொட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 3 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் அதிகாலை 3 மணியில் இருந்து வெளியூரில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ்களில் காந்திபுரம், நவ இந்தியா, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பஸ்சில் காய்கறி பொருட்களுக்கு நடுவே 3 மூட்டைகளில் 150 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 3 மூட்டை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என தெரிய வந்தது.மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை எடுக்க வந்த மர்மநபர்கள் அதிகாரிகள் சோதனையிடுவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #LSPolls

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், மத்திய மந்திரிகள் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக காம்பீர் அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.


    இந்த நிலையில் கவுதம் காம்பீர் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினர். கட்சியில் இணைந்த காம்பீருக்கு உறுப்பினர் அட்டையை நிதி மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.

    பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் காம்பீர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
    பெசன்ட் நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சோழிங்கநல்லூர்:

    பெசன்ட் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவில் வழியாக வந்த வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் 75 பட்டுப்புடவைகள், 95 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால் புடவைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஆவணங்கள் கொண்டு வந்து மீண்டும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர். #LSPolls

    பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவர் இன்று தூத்துக்குடி வந்தார். அவருக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பகுதி முன்னேற்றம் அடையவேண்டும். இங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்த்துவது எப்படி என்பது குறித்து வி‌ஷன் டாக்குமென்ட் தயார் செய்துள்ளேன்.

    இது போன்று யாரும் சிந்தித்திருக்க முடியாது என்ற அளவில் அந்த டாக்குமென்ட் இருக்கும். இதை வருகிற 26-ந்தேதி தூத்துக்குடி வரும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் வெளியிடுவார். பிரதமர் மோடியை ஸ்டாலின் சுயநலவாதி என்கிறார். குடும்பத்திற்கு, வாரிசுக்கு என எதையும் செய்யாதவர் மோடி. ஆனால் வாரிசுக்காக பல சலுகைகளை அளிப்பவர் ஸ்டாலின். ராகுல்காந்தியை பிரதமராக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



    இதை அவரது கூட்டணி கட்சிகளே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருகிற 25-ந்தேதி எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். அதைத்தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன். விளாத்திகுளம் வேட்பாளர் சின்னப்பன் பிரசாரத்தின் போது வாய் தவறி கனிமொழி பெயரை உச்சரித்தார். இதை நான் பெரிதாக எடுக்கவில்லை.

    மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தூத்துக்குடி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

    ஸ்டெர்லைட் பிரச்சனை வழக்கில் உள்ளது. நான் நேர்மாறான அரசியல் செய்யவே விரும்புகிறேன். எதிர்மறையான அரசியல் செய்ய மாட்டேன். மக்கள் எளிதில் அணுக கூடிய சாதாரண பெண்ணாகவே இருப்பேன்.

    கருத்து சுதந்திரம் குறித்து கனிமொழி பேசுவது சரியல்ல. பா.ஜனதா ஆட்சியில் கருத்து சுதந்திரம் இருப்பதால் தான் பலர் பேச முடிகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரசுடன் கை கோர்த்து கொண்டு இதுபற்றி பேசக்கூடாது. சாதிக் பாட்சா மனைவி கூடா நட்பு கேடாய் விளையும் என கலைஞர் கூறிய வார்த்தையை வைத்து விளம்பரம் செய்ததற்காக அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    மத்தியில் பா.ஜனதாவும், மாநிலத்தில் அ.தி.மு.க.வும் ஆட்சி புரிவதால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முடிகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரை இது பாசிச கட்சி அல்ல. பாசமுள்ள பா.ஜ.க.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan
    மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.50 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #ElectionFlyingSquad #LSPolls
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.4.50 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, அந்த பணம் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், திருச்சியில் இருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.  இதையடுத்து பணத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.  பணத்திற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



    இதேபோல் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #ElectionFlyingSquad #LSPolls

    சேலத்தில் மூன்றாவது நாளாக இன்று பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் திமுகவின் கோட்டை என குறிப்பிட்டுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் திருவாரூர் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளான இன்று சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபனை ஆதரித்து பேசியதாவது:



    திமுகவின் சார்பில் என் பயணத்தை இன்று 3வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு பகுதிக்கும் நான் செல்லும் போதும் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய அளவுக்கு மக்கள்  திரண்டு ஆதரவு அளித்து வருகின்றீர்கள்.  இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.

    இதற்கான காரணம் திமுகவின் மீது நீங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். மேலும் மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக மீது உள்ள வெறுப்பையும் இந்த கூட்டம் நிரூபித்துள்ளது. இந்த கோட்டை மைதானம் நிறைந்து இருப்பதை பார்த்தால், கோட்டையை நாம் பிடிப்பது உறுதி.



    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை. இந்த கோட்டையிலே இவ்வளவு மக்கள் ஆதரவு தர மிக முக்கியமான காரணம்  மறைந்த வீரபாண்டியார் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு இதே சேலத்தில் கலைஞர் கருணாநிதியின்  முத்து விழா மாநாட்டினை வீரபாண்டியார் முன்னின்று நடத்தினார். தோல்வியே அறியாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற சின்னம் தான் உதய சூரியன். திமுக சார்பில் யார் வேட்பாளர் என்றாலும் அவர் கலைஞர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் நமது திமுக ஆட்சியிலே வேலை பெற முடிந்தது. தன்னம்பிக்கை உருவானது. கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. கோட்டை மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் அபீத் தெருவில் தான் தொடக்க காலத்தில் கழக தலைவர் ஒன்றரை ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.

    இந்த திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் சேலம் தான். சுயமரியாதை இயக்கம், நீதி கழகம் இணைத்து 1944 ம் ஆண்டு திராவிட கழகம் என மாற்றப்பட்டது இந்த சேலத்தில் தான்.

    விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து, மாற்று திறனாளிகளை மேம்படுத்தியது, ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறப்பு, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாறியது என பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

    இந்த சேவைகள் தொடர,  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இங்கு நிற்கும், எஸ். ஆர். பார்த்திபனை வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019


    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பீகாரில் பிரசாரம் மேற்கொள்கிறார். #LSPolls #Congress #RahulGandhi
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    இந்த கூட்டணியில் கடும் இழுபறிக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 9 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    நாளை அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பீகாரில் வங்காளதேச எல்லையையொட்டி சீமாஞ்சல் என்ற பகுதி உள்ளது. அங்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஏப்ரல் 18-ந்தேதியும், 23-ந்தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இங்குள்ள புளுனியாவில் ராகுல்காந்தி நாளை பிரசாரம் செய்கிறார். இந்த பகுதியில் சிறுபான்மை மக்கள் 70 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கூட்டணியில் ஆதரவாளர்கள். அவர்கள் ஓட்டுகளை அள்ளும் வகையில் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ராகுல்காந்தி பீகாரில் மேலும் பல கட்ட தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். #LSPolls #Congress #RahulGandhi
    ×