என் மலர்tooltip icon

    வேலூர்

    திருமணம் செய்து வைக்காத பெற்றோரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #VelloreCollectorOffice
    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளையமகன் ஜானகிராமன் (வயது 28). இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி வற்புறுத்தி வந்து உள்ளார்.

    மேலும் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஜனகிராமன் தனது பெற்றோர் மீது புகார் அளித்து உள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஜானகிராமன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜானகிராமன் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #VelloreCollectorOffice
    அரக்கோணம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் அருகே உள்ள வேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் சத்யா (வயது20). இவர் நேற்று வி‌ஷம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சத்யாவை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சத்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிப்போடுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #DMK
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். கிராமங்கள்தான் கோவில். நான் பக்தனாக இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் உங்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு அதனை விரைவில் தீர்த்து வைக்க உறுதியோடு வந்திருக்கிறோம்.

    நான் எனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களை சந்தித்து வருகிறேன். சீவூர் ஊராட்சியில் உள்ள இந்த குடியாத்தம் தொகுதி, எம்.எல்.ஏ. இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது. அ.தி.மு.க.வின் பங்காளி சண்டையால் எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியை பற்றி பேச 1 வருடமாக எம்.எல்.ஏ. இல்லை.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. வருகிற ஏப்ரல், மே மாதம் நிச்சயம் வந்துவிடும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருமோ என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிபோட்டு வருகிறார்கள்.

    சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 117 இடம் வேண்டும். தற்போது அ.தி.மு.க.வின் பலம் 113 ஆக மைனாரிட்டியாக உள்ளது. 10 நாளில் 11 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வர உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் பேரை சொல்லி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.



    ஜெயலலிதாவின் இறப்பு மர்மமாக உள்ளது. இதனை விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என அ.தி.மு.க.வின் சட்டத்துறை அமைச்சரே கேட்கிறார். கோடநாடு கொலை சம்பவத்தில் முதல்-அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சி லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என எங்களை விட பொதுமக்களான உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை வந்துள்ளது. தமிழக அரசுக்கு முட்டு கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது. தேர்தலுக்காக தமிழகத்திற்கு மோடி வந்து செல்கிறார். தேர்தல் வாக்குறுதியில் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறியவர்கள் 15 ரூபாய் கூட வழங்கவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலை நல்ல வாய்ப்பாக பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK
    5-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கண்டித்து வேலூரில் 3 இடங்களில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் 5-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க பள்ளிகள் இதனால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன.

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வாலாஜா தாசில்தார் பூமா மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்றனர். வகுப்பறைகள் பூட்டு உடைக்கப்பட்டது. பின்பு தமிழ்த்தாய் வாழ்த்துபாடி மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பினர்.

    பேர்ணாம்பட்டு மேல்பட்டி அருகே உள்ள சங்கராபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு இன்று காலை மாணவர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு சென்றுவிட்டார்.

    இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் உமராபாத் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே இன்று பணிக்கு வந்தனர். ஆசிரியர்கள் வராததை கண்டித்து பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த ஆம்பூர் சிறுமிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். #AmburGirl #KapilDev
    ஆம்பூர்:

    ஆம்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சமூக நலத்திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.

    விழாவில் பேசிய கபில்தேவ் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். நல்ல பண்புகளை கொண்ட இளைஞர்களால் நம்நாடு பலம் மிக்க நாடாக உயரும்.

    இந்திய நாடு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். உலகில் இந்தியா போன்று எந்த நாடும் இல்லை. பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.


    ஆம்பூரை சேர்ந்த சிறுமி ஹனீபாஷாரா தன்வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது பெருமைக்குரியதாகும். இதேபோல் நான் எனது மகளை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சாலை விதியை மீறியதால் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பிறகு நான் கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்து போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். ஆனால் எனது மகள் விதியை மீறியதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினாள். நானும் அபராதம் செலுத்தினேன். அந்த அளவுக்கு குழந்தைகள் சிறு வயதிலேயே சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பில் கழிவறை கட்டக்கோரி தந்தை மீது போலீசில் புகார் அளித்த ஆம்பூர் பள்ளி மாணவி ஹனீபாஷாராவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, கலாம் செயற்கை கோள் குழுவினர் மற்றும் அதன் இயக்குனர் ஸ்ரீமதி கீசன் குழுவினரை பாராட்டி ரூ.5 லட்சம் பரிசு தொகை, 50 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்டிய சாவி வழங்கி மற்றும் கிரிக்கெட் அகாடமியை கபில் தேவ் தொடங்கி வைத்தார். #AmburGirl #KapilDev
    வேலூர்- திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 5-வது நாளாக இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. #JactoGeo
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கோர்ட்டு உத்தரவை மீறி கடந்த 25-ந்தேதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 1,300 பேரை போலீசார் கைது செய்து சத்துவாச்சாரி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    இதற்கிடையே மாலை 4 மணியளவில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணராஜ், மணி, அமர்நாத், பிரின்ஸ் தேவஆசீர்வாதம், சுரேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5-வது நாளாக இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மறியலில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே 5-வது நாளாக இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #TeachersProtest
    அம்மூர்-மேல்மொணவூரில் ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo

    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் 5-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க பள்ளிகள் இதனால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன.

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வாலாஜா தாசில்தார் பூமா மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்றனர். வகுப்பறைகள் பூட்டு உடைக்கப்பட்டது. பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடி மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பினர்.

    பேர்ணாம்பட்டு மேல்பட்டி அருகே உள்ள சங்கராபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு இன்று காலை மாணவர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் வந்தனர்.

    அப்போது அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு சென்றுவிட்டார். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் உமராபாத் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே இன்று பணிக்கு வந்தனர். ஆசிரியர்கள் வராததை கண்டித்து பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.  #JactoGeo

    குடியாத்தத்தில் இன்று நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். #DMK #MKStalin
    வேலூர்:

    மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

    இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவூர் ஊராட்சியில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் இன்று வேலூர் வருகிறார்.

    மாலை 3 மணிக்கு சீவூர் ஊராட்சி சபை கூட்டத்திலும், 4 மணிக்கு கூட்ரோட்டில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

    முன்னதாக வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த மாநகர அவைத்தலைவர் ரா.விஜயசங்கர் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அதேபோன்று குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.தனபால் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார். #DMK #MKStalin
    ஆம்பூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து ஓசூருக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் ஆறுமுகம் (வயது 40). பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டர் கோபால் (45). உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதியது.

    இதில் டிரைவர் ஆறுமுகம், கண்டக்டர் கோபால், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், போச்சம்பள்ளியை சேர்ந்த விக்ரமன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணிம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து கட்சி நடத்துவது பலவீனத்தை காட்டுகிறது என்று வேலூரில் புகழேந்தி பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    வேலூர்:

    வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    ‘‘டி.டி.வி. தினகரன் பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. மக்கள் ஆதரவோடு அவர் அரியணை ஏறப்போகிறார்’’.

    எம்.ஜி.ஆர். ஆட்சியை கட்டிக்காத்து மக்களுக்காக ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்தார். அவருக்கு உதவியாக இருந்து பல தியாகங்களை செய்தவர் சசிகலா.

    ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அவர் வெற்றி பெற செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை நீங்கள்தான் பொதுச்செயலாளராக, முதல்வராக வரவேண்டும் என்று அழைத்தனர்.

    சசிகலா என்ன தவறு செய்தார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அழைத்துவிட்டு தற்போது தரம் தாழ்த்தி பேசுகின்றார்கள்.

    துரோக ஆட்சி நடத்தியவர்கள் கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்க்க வேண்டும். மக்கள் ஆதரவோடு டி.டி.வி. தினகரன் தமிழக முதல்-அமைச்சர் ஆவார். இப்போது தரம் தாழ்ந்து பேசுபவர்களை காலம் மறந்து விடாது.

    அரசியலில் நாங்கள் தவழ்ந்து வரும் குழந்தையாக இருந்துவிட்டு போகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து சென்று கரூர் மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது.

    எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டும்தான்.

    பா.ஜ.க. வட மாநிலங்களில் தோல்வியடைந்து விட்டது. அதுமுடிந்து போன கட்சி. வரும் தேர்தலில் 60 அல்லது 70 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    திருப்பத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பஞ்சு மிட்டாய் கொடுப்பதாக தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்த 10 குழந்தைகளின் தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாரண்டபள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சான்பாஷா (52). பஞ்சுமிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, 10 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சான்பாஷா பஞ்சு மிட்டாய் தருகிறேன் வா எனக்கூறி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார்.

    பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சான்பாஷாவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து சான்பாஷாவை கைது செய்தனர்.

    பின்னர், அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    குடியாத்தத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த பரதராமி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் லோகேசுக்கும், சித்தூரை அடுத்த யாதமூரி மண்டலம் பெருமாள்பல்லி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகள் லாவண்யாவுக்கும் (வயது 19) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் லாவண்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவிற்கு திருமணமாகி 3 மாதமே ஆனதால் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்து லாவண்யாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் லாவண்யாவின் உறவினர்கள் அவரது சாவிற்கு நீதி வேண்டும், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் லாவண்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×