என் மலர்tooltip icon

    வேலூர்

    திருவலம் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நமல் பார்த்தி (வயது 20). இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி பி.டெக். 3-ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் காரில் திருவலத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    சேவூர் என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் நமல்பார்த்தி படுகாயமடைந்தார்.

    அவரை மீட்ட நண்பர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நமல்பார்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க., பாரதிய ஜனதாவுக்கிடையே மவுன யுத்தம் நடப்பதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan
    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார். தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக அம்மாநில முதல்வர் குமாரசாமி டெல்லி பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்க உள்ளார். ஆனால், இவ்வி‌ஷயத்தில் தமிழக அரசு அமைதியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகும் என்ற விவரம் தெரியாமல் தமிழக அரசு உள்ளது.

    ஆனால் தமிழக அரசை ஆளுபவர்கள் டெண்டர் வைப்பதிலும், வசூலிப்பதிலுமே குறியாக உள்ளனர். அரசு ஊழியர்களை பொறுத்தவரை தமிழக அரசு நீக்குபோக்குடன் செயல்பட வேண்டும். அதிகாரம் உள்ளது என்ற நிலையில் அரசு ஊழியர்களை சஸ்பெண்டு செய்தால் அரசு நிர்வாகம் நின்றுவிடும். அமைச்சர்கள் இல்லையென்றாலும் அரசு ஊழியர்கள் இருந்தால் ஆட்சி நடக்கும். தற்போது இவர்கள் செய்துள்ள செயலுக்கான பலன் நேரில் தெரியும்.

    அ.தி.மு.க. சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுவை வாங்குகிறார்கள். மத்திய அரசை பயமுறுத்தவே இதனை செய்கின்றனர். மத்திய அரசும் தமிழக அரசை பயமுறுத்துகிறது. இது இருவருக்கும் இடையே நடக்கும் மவுன யுத்தமாகும்.

    கஜா புயல் பாதிப்பில் இருந்து தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு விளைந்த நெல்லையும் கொள்முதல் செய்யாமல் அரசு அலைக்கழிக்கிறது.

    இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இதற்கெல்லாம் மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். தேர்தல் கருத்துக்கணிப்புகளை தி.மு.க. பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் நாங்களும் மக்களுடன் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan
    ஆம்பூர் அருகே பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தீ மிதி விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். இளைஞர்களின் ஆரவாரத்தால் காளைகள் மிரண்டு போய் குறுக்கு நெடுக்குமாக ஓடின.

    அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    விழாவில் முகாமிட்டிருந்த டாக்டர்கள் குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவையொட்டி தாலுகா போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் பயிற்சி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 21).நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25). டெய்லர். என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் குறித்து அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    அரக்கோணம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    ஓச்சேரி அருகே உள்ள எரும்புலி பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் பின்புறம் வேஷ்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் அவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவருக்கு 45 வயது இருக்கும் எனவும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா ? என்பது குறித்தும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பணிக்கு திரும்பாத 39 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #jactogeo
    வேலூர்:

    வேலூர் மாவட்ட அரசு, தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் உள்ள 18,200 ஆசிரியர்களில் 8,100 பேர் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 6000 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை நீடித்தது. இதனால் பல இடங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இதையடுத்து காலை முதலே ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

    அதேசமயம், வேலூர் மாவட்டத்தில் 39 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பாதது தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று காலை 10 மணி வரை பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் விவரம் பெறப்பட்டது. இதில் 39 ஆசிரியர்கள், சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    இதையடுத்து அந்த 39 ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர். மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் பணியில் சேர இயலாது என்றார். #jactogeo

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார். #FinalVoterslist

    வேலூர், ஜன. 31-

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார்.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.19-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், 2019-யின் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அன்று முதல் கடந்த 31,10,2018 வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டது.

    சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டு வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடபட்டது.

    15 லட்சத்து 7187 ஆண்கள் 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 145 பேர் உள்பட 30லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இறுதிவாக் காளர் பட்டியல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1648 வாக்குச்சாவடி அமைவிடங் களிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம் என வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். * * * சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை தலையணையால் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி அகரத்தான்வட்டத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது 21). திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரும் தகரகுப்பத்தை அடுத்த தொட்டிகிணறை சேர்ந்த சரவணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ரோ‌ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

    ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு சந்தியா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சரவணன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில், கட்டிலில் ரோ‌ஷன் வாயில் நுரை தள்ளியவாறு முகத்தின் மீது தலையணை வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டனர்.

    இதையறிந்த சந்தியா குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். மேலும் அவன் தூங்கி கொண்டிருக்கும்போது முகத்தில் தலையணை விழுந்து மூச்சு திணறி இறந்திருப்பதாக கூறினார்.

    ஆனால் அங்குள்ள பொதுமக்கள், மர்மமான முறையில் குழந்தை இறந்திருப்பதாகவும், குழந்தை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் பரபரப்பாக பேசினர்.

    இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமால், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

    குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தியாவிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரது மகனை தலையணையால் அமுக்கி கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் சந்தியாக அவரது மகனுக்கு வி‌ஷ ஊசி போட்டு கொன்றாரா? இந்த கொலையில் சந்தியாவின் கள்ளக்காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் 5 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் இருந்து மொரப்பூர் இடையேயான தண்டவாளம் பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காக்கங்கரை என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதிகாரிகள் உடனடியாக அந்த மார்க்கமாக வந்த டாடா நகர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ், சாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்பட 5 ரெயில்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியிலேயே நிறத்தப்பட்டது.

    ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்தனர்.

    பின்னர் 5 ரெயில்களும் 1 மணி நேர காலதாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை கண்டு பிடித்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    கே.வி.குப்பம் மேல்மாயிலில் காளை விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் கே.வி.குப்பம், குடியாத்தம், பரதராமி, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

    போட்டியில் கலந்துகொண்ட காளை ஒன்று அருகே உள்ள நிலத்தின் வழியாக ஓடி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளை நிலத்தில் இருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனைக்கண்ட இளைஞர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். '

    குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து காளையை உயிருடன் மீட்டனர்.

    கிணற்றுக்குள் விழுந்ததில் காளையின் கால் முறிந்தது. உடனடியாக மீட்கப்பட்ட காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குடியாத்தத்தை அடுத்த தாழையாத்தம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் தினேஷ்குமார் (வயது 20) என்பவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தினேஷ்குமார் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    காளைவிடும் திருவிழாவில் உதவி கலெக்டர் மெகராஜ், காட்பாடி தாசில்தார் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் கவிதா, இருதயராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆம்பூர் அருகே பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சிவநேசன் (வயது 52). ஓட்டி வந்தார். இவர் உள்பட 110 பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

    போச்சம்பட்டு கூட்ரோடு அருகே சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது மோதி சாலை அருகே உள்ள புளிமரத்தில் மோதி நின்றது. இதில் டிரைவர் சிவனேசனின் கால்கல் துண்டானது. மேலும் 25 பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 45 பேரும், நரியாம்பட்டு அரசு சுகாதார ஆஸ்பத்திரியில் 15 பேரும் அனுமதித்தனர்.

    மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு பேரணாம்பட்டு மசிகம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மனைவி கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள மதனஞ்சேரி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திம்மாம்பேட்டை வாணியம்பாடி செல்லும் சாலையில் இன்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

    ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் கலெக்டரிடமும் மனு கொடுத்து உள்ளனர்.

    ஆனால் மனுவின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்காடு கல்புத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×