search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது அணை"

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
    • இதில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.

    இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூட உள்ளது. இது 29-வது கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை, அதை நிறைவேற்றியே தீருவோம் என்று கோஷங்களை முழக்கினர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

    மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம், அதனை தடுத்தே தீருவோம் என்று என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். மழைக்காலங்களில் உபரிநீர், கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.


    அந்த அணைவிலிருந்து மேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கும் நீர் பாய்ந்து சென்று, தமிழக மக்களுக்கும் பயன்படும். எனவே, இதில் அரசியல் செய்ய வேண்டாம். பெங்களூரு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் குடிநீர் இல்லாத காரணத்தால் அங்கு வாழும் தமிழ் மக்களை, தமிழ்நாட்டுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள தயாரா? எனவே, மேகதாது விவகாரத்தில் , விளையாட வேண்டாம். ஓசூர், தாளவாடி, மற்றும் நீலகிரியை கர்நாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேகதாது போராட்டத்திற்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், அங்கு, அணை கட்டுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திற்கு வரக்கூடாது.

    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். எல்லைப் பகுதிகளை அடைப்போம் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    • தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது.
    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. நேற்று முன்தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதை தடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கர்நாடக பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசையும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வையும் இலக்காக கொண்டு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தி.மு.க.வுக்கும், கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் தளத்தில் "பலவீனமான முதல்-மந்திரி நமது முதல்-மந்திரி, நமது காவிரி நமது உரிமை" என்ற பெயரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது. அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளது. இது, சித்தராமையா அரசு மு.க.ஸ்டாலினுடன் ரகசிய உறவு வைத்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பேரம் பேசி நமது காவிரி நீரை கூடுதலாக பெறும். மேகதாது திட்டத்தையும் தடுத்து நிறுத்தும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன். அவர்கள் (தமிழ்நாடு) தங்களின் மாநிலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நீதி கிடைக்கும். மேகதாது திட்டத்தால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடும் பயன் அடையும். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களை சேர்ந்த மக்கள் கர்நாடகத்தில் வசிக்கிறார்கள். அதனால் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு பேசும் நல்ல காலம் வரும். மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

    அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். "காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே" என சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.

    * உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    * காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.
    • பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் கூறியதாவது:

    * காவிரி விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறது.

    * காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது.

    * மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும் என்று கூறினார்.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:

    * மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது.

    * நீர் பங்கீட்டு பிரச்சனைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    * ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை.

    * தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1-ந்தேதி கூட்டம் நடைபெற்றது.

    * கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

    * தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

    * மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    * மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.

    * மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    * மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    * கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு.

    * மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

    * தமிழ்நாட்டில் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது.

    * பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    * மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை.

    * மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது.

    * மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
    • கர்நாடகாவால் மேகதாதவில் அணை கட்டமுடியாது என்றார் அமைச்சர் துரைமுருகன்.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல் மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம்.

    கர்நாடக அரசு நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால் தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது.

    மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம், அதுதான் நியதி என தெரிவித்தார்.

    • விரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும்.
    • டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையாக இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சனையாக இருந்தாலும் கர்நாடகத்தை ஆண்ட பாரதிய ஜனதா அரசும், காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிராக செய்த துரோகங்களை அம்மாவின் அரசு அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்தது; தடுத்து நிறுத்தியது.

    தி.மு.க. அரசு பதவியேற்ற நாள்முதல், தங்கள் கூட்டாளியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தமிழக நலனை காவு கொடுத்து வருவதை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும் நான் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தேன்.

    குறிப்பாக, கடந்த 14-ந்தேதி அன்று சட்டமன்றத்தில் நான், எங்களது ஆட்சிக் காலத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும், 2018-ம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சனை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்றபோது எனது அரசு, 5.12.2018 அன்று மத்திய நீர்வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இன்னும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதுகுறித்து பலமுறை நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் விரிவாகப் பேசியும், அதற்கு பதில் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துவரும் மிகப்பெரிய துரோகமாகும் என்பதை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்கிறேன்.

    ஆணையம் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு மேகதாது அணை குறித்த பொருளை (அஜண்டாவை) 28-வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு. இந்த ஆணையக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கவனமாக அனுப்பி வைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க தி.மு.க. அரசு அனுமதித்தது மிகப்பெரிய துரோகமாகும்.

    காவிரி நதிநீர் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பாலை வனமாகும்.

    மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, அ.தி.மு.க. விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
    • முதல் மந்திரி சித்தராமையா நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் மந்திரி சித்தராமையா 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

    அப்போது, தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்.

    பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    இந்த பட்ஜெட் உரையை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார்.

    • போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை கண்டித்து இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், சாமி கரிகாலன், துரை ரமேசு, தமிழ் தேசிய பேரியக்கம் வைகறை, பழ. ராசேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன், விவசாயிகள் சங்கம் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    அப்போது மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தன்னிச்சை தொடரும்.

    அதற்கான ஆரம்ப போராட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு.
    • கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம். அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில அரசு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தமிழக அரசு சம்மதம் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என திட்டவட்டமாக தழிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தின் 2024-2025-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் மேகதாது அணை குறித்து முக்கிய குறிப்பு இடம் பிடித்துள்ளனர்.

    சித்தராமையா தாக்கல் செய்த கர்நாடக மாநில பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:-

    * கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம். அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும்.

    * சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல்.

    * தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்.

    * அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு.

    போன்றவை பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    சேலம்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    * தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது.

    * இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

    * அண்ணா நினைவு நாளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கிறோம்.

    * தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.
    • இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது. இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (1-ந் தேதி) கூட உள்ளது. இது 28-வது கூட்டம் ஆகும். இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    ×