search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "megathathu dam"

    மேகதாதுவில் அணைக்கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அணை கட்டுவதற்கான ரூ.5 ஆயிரம் கோடிக்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தமிழார்வன், முருகானந்தம், மாவட்ட பொருளாளர் ராவணன், துணைத் தலைவர் வடுகநாதன், நகர செயலாளர்கள் மாரியப்பன், பாலதண்டாயுதம், நிர்வாகிகள் தியாகராஜன், நாகராஜன், பாண்டியன், தர்மதாஸ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அதன் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. தமிழக விவசாயிகள் ஒரு போதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டார்கள். அணை கட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கர்நாடகம் தராது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #MegathathuDam #Kumaraswamy #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.

    காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின் கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார்.



    இதைத் தொடர்ந்து மேக தாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

    மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதிக்கு தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 9.6.2015 அன்று உமா பாரதி எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கி யிருந்தார்.

    ‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும்.

    இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு, ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #MegathathuDam #Kumaraswamy #TN #Ramadoss
    மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #MegathathuDam #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் இப்போது கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) முதல் இன்னும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய நீரை இப்போது திறந்துவிடுகிறோம்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. இது யாருக்கும் பயன் இல்லை. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    நீர்ப்பாசனத்துறை மந்திரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் டெல்லியில் மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது இதுபற்றி ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். அதனால் கர்நாடகம் தனது சொந்த செலவில் அணை கட்ட தயாராக உள்ளது. நமது விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக்கூற நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #MegathathuDam  #Kumaraswamy
    ×