search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore district"

    • பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
    • தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா. தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு பணிகளில் நேச பிரபா சுணக்கமாக செயல்பட்டதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அருள் ஒளி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரிய வந்தால் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதையும் மீறி நேச பிரபா சரிவர தேர்வு பணிகளில் ஈடுபடாததால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.

    கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LokSabhaElections2019 #Vellore
    புதுடெல்லி:

    வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.



    மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
    வேலூர் மாவட்டத்தில் பணிக்கு திரும்பாத 39 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #jactogeo
    வேலூர்:

    வேலூர் மாவட்ட அரசு, தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் உள்ள 18,200 ஆசிரியர்களில் 8,100 பேர் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 6000 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை நீடித்தது. இதனால் பல இடங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இதையடுத்து காலை முதலே ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து அரசுப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

    அதேசமயம், வேலூர் மாவட்டத்தில் 39 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்பாதது தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று காலை 10 மணி வரை பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் விவரம் பெறப்பட்டது. இதில் 39 ஆசிரியர்கள், சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    இதையடுத்து அந்த 39 ஆசிரியர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர். மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் பணியில் சேர இயலாது என்றார். #jactogeo

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார். #FinalVoterslist

    வேலூர், ஜன. 31-

    வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார்.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.19-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், 2019-யின் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அன்று முதல் கடந்த 31,10,2018 வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டது.

    சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டு வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடபட்டது.

    15 லட்சத்து 7187 ஆண்கள் 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 145 பேர் உள்பட 30லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இறுதிவாக் காளர் பட்டியல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1648 வாக்குச்சாவடி அமைவிடங் களிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம் என வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். * * * சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

    வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்க சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. #Thalikkuthangam
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

    பயனாளிகளிடம் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

    முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

    இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.



    நேற்று தாலிக்கு தங்கம் பெற்ற 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சமூக நலத்துறை ஊழியர்கள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பண வசூல் செய்த சமூக நலத்துறை ஊழியர்கள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.  #Thalikkuthangam

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்து அதற்கான மாற்றுப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் வேலூரில் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

    இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மனிதனின் வாழ்க்கையில் ஒன்றினைந்து விட்டது. இதற்கான காரணம் பெரும்பாலும் பொருட்களை கட்டுவதற்கு துணிகளை காட்டிலும் பேப்பரை காட்டிலும் பிளாஸ்டிக் வைத்து கட்டுவதற்கு மிகவும் எளிமையாகவும், சுலபமாகவும் உள்ளது.

    மிக முக்கியமாக சரக்கு போக்குவரத்திலும், துணிக்கடைகள், நொறுக்கு தீனிகள் போன்ற எல்லா கடைகளிலும் பொருட்களை கட்டுவதற்கு பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் அதனுடைய தாக்கம் பூமியின் சூழ்நிலையை கெடுக்கிறது என்று அமெரிக்கா 1960-ம் ஆண்டு கண்டறிந்தது.

    மேலும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் கடலில் தான் கலக்கிறது என்பதையும் கண்டறிந்தன. மற்றொரு ஆச்சரியமான தகவல் என்ன வென்றால் 2002-ம் ஆண்டு பங்களாதேஷ் என்ற சிறிய நாடு தான் முதன் முதலில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.

    இதற்கான காரணம் பங்களாதேஷ் நாட்டில் புயல் மற்றும் மழை வெள்ள காலத்தில் தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு வெளியேறாமல் தங்கிவிட்டதை ஆராய்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் தான் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் மற்றும் இந்தியா பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்து வருகிறது.

    தமிழகத்தில் கிராமங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை உள்ளது. இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சுற்றுசூழல் பொறியாளர் ராஜகோபால், மாவட்ட பொறியாளர் ரதி, பன்னீர் செல்வம், நகராட்சிகளின் மண்டல கமி‌ஷனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் கால் நடைத்துறையின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 208 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், கூட்டுறவுத் துறையின் மூலம் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 3 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

    தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகளிர் தன்னம்தனியாக பொருளாதாரத்தை பெற்றிட கடனுதவிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி பகுதிகள் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக கண்டறிப்பட்டு மாவட்டத்தில் கணியம் பாடியில் செயல்படுத்தப்பட்ட உறைகிணறு நமது பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்று மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் கேட்காமலே செய்து கொடுத்து வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று பயன்படுத்திக் கொண்டு என்றென்றும் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் முகமை பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மண்டல கால்நடை இணை இயக்குநர் சாந்தகுமாரி, துணைபதிவாளர் முனிராஜ், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தாமலேரி முத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் ரமேஷ், உதவி இயக்குநர் கால்நடை ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சிவா, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
    வேலூர்:

    உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வேலூரில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலர் நிஷாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு 191 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 68 ஆயிரத்து 880 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வளம்பெற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார். அந்த திட்டங்கள் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலத்திட்டங்களை பெற அரசு உறுதுணையாக இருக்கும்.

    மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வங்கியில் மானியக்கடன், கல்விக்கடன், 3 சக்கர சைக்கிள்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், பிரெய்லி கைக்கெடிகாரம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று மாற்றுத்திறனாளிகள் பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், ‘உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்தியாவில் 2.1 சதவீதமும், தமிழகத்தில் 1.8 சதவீதமும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சராசரி மனிதர்களை போன்று மாற்றுத்திறனாளிகளையும் நடத்த வேண்டும், அவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை கொடுக்க வேண்டும். கர்ப்பத்தின்போது உரிய ஊட்டச்சத்து சாப்பிடாதது, நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள். 1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அது கடந்த 2016-ம் ஆண்டு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உயர்கல்வியில் 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வெல்மாவில்’ ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்’ என்றார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருட்கள் கண்காட்சியினை அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் வேலூர் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், பெல் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவத்தையடுத்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆம்பூர் பெரியாங்குப்பத்தை சேர்ந்த வரதராஜ் மனைவி ருக்மணியம்மாள் (வயது 55). ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கபட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை சோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமி நகரில் வசிக்கும் சிவக்குமார் என்பவரது மகள் பிரியதர்ஷினி (வயது 4). இவள், கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதனையடுத்து அவள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 30 பேரும், பெண்லெண்ட் ஆஸ்பத்திரியில் 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது. காய்ச்சலை கட்டுபடுத்த 60 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தபட்டுள்ளன.

    இந்த குழுவினர் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளிக்கின்றனர்.

    மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிக்கபட்ட பகுதிகளில் 20 விரைவு மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்னர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 2 பேருக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கபடுகிறது.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட 50 பேர் காய்ச்சல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தண்டராம்பட்டு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளனர். அங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ##swineflu
    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச்செயல்களை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருட்டு, கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல், சாராயம், மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைக்கின்றனர்.

    இவ்வாறாக ஜெயிலில் அடைக்கப்படும் நபர்கள் ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, திருந்தி வாழாமல் தொடர்ந்து அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், கடந்த 10 மாதத்தில் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாராயம், மது விற்பனை செய்த 28 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 37 பேரும் என மொத்தம் 73 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர், எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் யாஸ்மின் தெரிவித்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நேற்று சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின், சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், சென்னையை சேர்ந்த மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் கீதாலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள், பெண்கள், மகப்பேறு பிரிவு, சித்தா, ஹோமியோ, தொழு நோயாளிகள் பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ள பிரிவுக்கு சென்று கொசுகள் கடிக்காத வகையில் இருக்க கொசுவலைகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளதா?, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

    மருத்துவமனை வளாகத்தில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி உள்ளதா?, அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளது, டெங்கு நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் மருத்துவமனையில் இருக்கிறதா? என்று பார்வையிட்டனர்.

    அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது ரத்தத்தில் அணுக்கள் எந்த அளவு உள்ளது. ரத்த அணுக்கள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக தேவையான சிகிச்சைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

    காய்ச்சல் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் ‘எலைசா’ பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி நோயை கட்டுப்படுத்த வேண்டும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் இணை இயக்குனர் யாஸ்மின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல், விஷ காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதே நிலை மீண்டும் தமிழகத்தில் வந்துவிடாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர் கலெக்டரின் உத்தரவுபடி போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில், வாலாஜா அரசு மருத்துவமனையில் இப்ராஹிம் (வயது 20) என்பவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவரை தனிவார்டில் வைத்து 24 மணி நேரம் கண்காணிப்பில் கொசுவலையுடன் கூடிய பாதுகாப்பில் வைத்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் இருப்பது அறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து சுற்றுபுற சுகாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்காக சுகாதார அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது பொதுமக்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அரக்கோணம் மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா, டாக்டர் சங்கர், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    சென்னை அனல் மின் நிலையில் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்க கூடிய காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலையில் 1 மணி முதல் மாலை 1 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்னூர், விண்ணமங்கலம், வடகரை, மாராபட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 3 வாரமாக பகலில் 2 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமும் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    வாணியம்பாடியில் பகலில் 2 மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுகிறது. ஆலங்காயம், திம்மாம்பேட்டை, அம்பலூர் பகுதிகளில் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.

    அரக்கோணம் பகுதியில் கடந்த 1 மாதமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர் மின் தடை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரமும் முறையாக வழங்கபடுவதில்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    வாலாஜா பகுதியில் கடந்த 2 வாராமாக 1 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, பெருந்துரைபட்டு, வாணாபுரம், அகரம்பள்ளிபட்டு சதாகுப்பம் பகுதிகளில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மின் வெட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    ×