என் மலர்
திருநெல்வேலி
- 75 கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
- நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மார்க்கெட் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுனில் போஸ் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை முழுவதும் இடித்து புதிதாக கட்டும் பணி நடைபெற்று வந்தது.
அந்த பணிகள் முடிந்து தற்போது 75 கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக இருந்த மார்க்கெட் கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.26 வாடகை வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் சதுர அடிக்கு ரூ.110 வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க ஏற்கனவே இருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் கடைகளுக்கு பொது ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மார்க்கெட் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதற்கிடையே பொது ஏலத்தை நிறுத்தி விட்டு பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி அறிவித்துள்ள படி சதுர அடி ரூ.110-க்கு வழங்க வேண்டும் என கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று போஸ் மார்க்கெட் பழைய வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, நாங்கள் புதிதாக தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டும் என நேற்று மாலை தீர்ப்பு வந்துள்ளது.
எனவே அதன்படி எங்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்ததும் சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
- எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.
- வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது.
நெல்லை:
நெல்லையில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் இளைஞர் படை அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. ஜெயலலிதாவின் கொள்கைகளை நூற்றாண்டுகளுக்கு எடுத்துரைப்பதே எங்களின் லட்சியம். தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கொள்கையை தாங்கி பிடிப்போம். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கவர்னரின் தயவினால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர். அவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேட்டினாலும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும் நினைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வெற்றிக்கனியை தந்தனர். வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.
மகளிர் உரிமை திட்டம் தகுதியான பலருக்கும் கிடைக்கவில்லை. சிறு-குறு தொழில் முனைவோர் கடுமையான மின்கட்டண உயர்வால் திணறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் ரத்தாகி உள்ளது. அரசின் கடன் சுமையை குறைப்போம் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி மறக்கப்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது.
கூட்டணி பலத்தால் வெற்றியாளர்களை போல் காட்டி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. உள்ளது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும். வருகிற தேர்தலில் தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே அ.ம.மு.க. வின் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது.
- கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது.
நெல்லை:
ககன்யான் திட்டத்தின் மூலம் வருகிற 2025-ம் ஆண்டில், 3 இந்திய விண்வெளி ஆய்வாளர்கள், விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் செல்லும் ராக்கெட் ஏவும் வாகனம் மார்க்-3 (எல், வி.எம்-3) வகையை சேர்ந்தது. இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.
இந்த ராக்கெட்டுக்கான சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அந்தவகையில் இதில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் மகேந்திரிகிரியில் இஸ்ரோ வளாகத்தில் நேற்று நடந்தது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 (எல்.வி.எம்.3) என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது. இது கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்வெளிக்கு இயக்கப்படுகிறது.
இந்த கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது. என்ஜின் சகிப்புத்தன்மை சோதனைகள், செயல்திறன் மதிப்பீடு, கலவை விகிதம் மற்றும் உந்து சக்தி தொட்டி அழுத்தம் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன.
தற்போது, மனித மதிப்பீடுகளின் தரநிலைகளுக்கு சிஇ-20 என்ஜின் தகுதி பெற, 4 என்ஜின்கள் வெவ்வேறு இயக்க நிலைமைகளின் கீழ் 8 ஆயிரத்து 810 வினாடிகளுக்கு 39 முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. குறைந்தபட்ச மனித மதிப்பீடு தகுதித் தேவையான 6 ஆயிரத்து 350 வினாடிகள் நடந்தது. இதன் மூலம் தரைத் தகுதிச்சோதனைகள் நிறைவடைந்துள்ளன.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ககன்யான் பணியின் வளர்ச்சியை நோக்கிய ஒரு பெரிய நகர்வில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பெருமிதம் அளிக்கிறது என்றனர்.
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
- குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நெல்லை:
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தொடர பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் 370-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி தனது பிரசாரத்தை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
வருகிற 27-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதைத்தொடர்ந்து கேரளா செல்கிறார். மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடி துறைமுகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார்.
அப்போது குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு அரசு திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித்ஷா நெல்லை வந்தபோது பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள இடம், சாரதா கல்லூரி அருகே அமைந்துள்ள இடங்களை பா.ஜனதாவினர் ஆய்வு செய்தனர்.

பாளை கோர்ட்டு எதிரே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்த காட்சி
அதன் ஒரு பகுதியாக பாளை கோர்ட்டு எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு நடத்தினால் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்க வசதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு இந்த மைதானம் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜனதா அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
- வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
- பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.
நெல்லை:
ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.
இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.
எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.
கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
- பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த பஸ் நிலையத்தை இடித்து புதிய நவீன பஸ் நிலையமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.
நீதிமன்ற வழக்குகள், கொரோனா காலக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பஸ் நிலைய பணிகள் ரூ.85½ கோடியில் முழுமையாக முடிந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் நெல்லை மாவட் டத்தில் ரூ.436 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.85½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சந்திப்பு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து ரூ.572 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு திட்ட விளக்கவுரையாற்றினார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 85.56 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நமது ஆட்சியில் விளையாட்டுத்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளது. தற்போது விளையாட்டு துறை சார்பில் டார்லிங் நகரில் ரூ.6.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டி போட்டது. மழை வெள்ளத்தால் இந்த பஸ் நிலையம் பாதிக்கப்பட்டது. இரவோடு இரவாக மழை வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டார்.
சேலம் மாநாட்டை ரத்து செய்து இங்கேயே அமைச்சர்களும் நானும் 3 நாட்களாக தங்கி இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம்.
இன்று பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு தமிழகம் ரூ. 6 லட்சம் கோடியை கொடுத்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 1.5 லட்சம் கோடியை மட்டுமே தந்துள்ளது.
ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ் காலத்தில் மட்டு மல்ல எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு திட்டத் தோடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
சென்னையில் இருப்பது நெல்லையிலும் இருக்க வேண்டும்,நெல்லையில் இருப்பது தென்காசியில் கிடைக்கவேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தி.மு.க. அரசு நெல்லையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நன்றி கூறினார்.
பஸ் நிலையம் திறப்பு விழாவையொட்டி சுற்றிலும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயில்களில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
நெல்லை நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த சந்திப்பு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.
பஸ் நிலைய நடை பாதைகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நமது நெல்லை செல்பி பாயிண்ட் முன்பு நின்று பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
- ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது.
- மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.
நெல்லை:
'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா எந்தவொரு மசோதாவை கொண்டு வந்தாலும் மாநில உரிமைகளை பறிக்கும் உள்நோக்கத்துடனே கொண்டு வருகிறது. புதிய திட்டங்களின் பெயர்களைக் கூட இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சாமானிய மக்களுக்கு புரியாத வகையில் வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றாலும் திருக்குறளைக் கூறி பெருமை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழ்தான் பழமையான மொழி என்றும் கூறுகிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு வழங்குகிற நிதியில் பாதிகூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது இல்லை.
ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது. ஒரு ரூபாயில் தமிழகத்திற்கு 29 பைசாவை மட்டுமே திரும்ப தரும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.2.02 வழங்குகிறது. 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் உத்தரப்பிரதேசம் இன்றளவும் முன்னேற வேண்டிய மாநிலமாகவே தொடர்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெருமழை பெய்தது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் சிரமம் அடைந்தனர். மழை சேதத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆய்வுக்கு பின்புகூட எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.
பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தால் அந்தக் கட்சியே ரூ.6,564 கோடி நிதி பெற்றுள்ளது. நாட்டில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள நிதியை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பா.ஜனதாவின் நேர்மை மிகவும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுக்கப்படவில்லை.
மணிப்பூரில் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி எந்தவித நலத்திட்டங்களையும் அளிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதிலேயே பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அரசுக்கு எதிராக போராட டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை, தீவிரவாதிகளை போல சித்தரித்து டிரோன்களை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது, மதநல்லிணக்கத்தை பேணுவது, எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கான கல்வி குறித்து சிந்திக்காமல், மத அரசியலை மக்களிடம் திணித்து ஆட்சியில் தொடர பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். பா.ஜனதாவை பல்வேறு மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மக்கள் தூக்கி எறியும் காலம் வரும். அந்த நாளே இந்தியாவுக்கான நாளாக அமையும். பா.ஜனதாவின் வெற்றி என்பது நம் நாட்டின் தோல்வியாகிவிடும். ஆகவே, பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்.
- அப்போது, மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.
நெல்லை:
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக்கூட்டங்களை நடத்துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், நெல்லையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. எம்.எல்.ஏ. அப்துல் வகாப், தி.மு.க. மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், நெல்லை மேயர் சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன.
பிரதமர் பல இடங்களில் திருக்குறள் சொல்கிறார். உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என கூறுகிறார் என்று பா.ஜ.க.வினர் சொல்கின்றனர். ஆனால் சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளிக் கொடுக்கும் அவர்கள் தமிழுக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.
பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார்.
- அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
நெல்லை:
நாடு முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லையில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், அனைத்திந்திய கிராமப்புற விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தர்மன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும் என்று கூறியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பச்சை நிற துண்டு தோளில் போட்டபடி கொக்கிரக்குளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் கழுத்தில் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மாலையாக கட்டி அணிந்திருந்தனர். மேலும் கையில் மோடி என்ற வாசகம் அடங்கிய தடியங்காயை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து கையில் வைத்திருந்த தடியங்காயை சாலையில் போட்டு உடைத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
- 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (16-02-2024) நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான திரு.பிரேம் பங்கேற்று பேசுகையில்:
"கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 14 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை, நட்டாலம், புதுக்கடை, மார்த்தண்டம், மேலப்புறம் ஆகிய பகுதிகளிலும் வலம் வர இருக்கிறது. முன்னதாக இந்த ரதம் பிப் 8 ஆம் தேதி முதல் பிப் 13 ஆம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளுக்கு வருகை தந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடைய உள்ளன.
ரதம் பயணிக்கின்ற ஊர்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் திருநெல்வேலியில் சேரன்மகா தேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால், கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகர்கோவில், சாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்






