என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலைமை ஆசிரியை புனிதா தெரிவித்தார்.
    • 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் இன்று உத்தரவிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் வாயில் தலைமை ஆசிரியை டேப் ( பிளாஸ்திரி) ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதற்கிடையே நடந்த விசாரணையில் வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் தெரியவந்தது.

    ஆனால் இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலைமை ஆசிரியை புனிதா தெரிவித்தார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அய்யம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்சி சுமாகுலேட் பெர்சி, முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் இன்று உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் சூரியனார்கோவில் ஆதீனமும் ஒன்றாகும்.
    • சூரியனார்கோவில் ஆதீனன் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் இதற்கு கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்நிலையில், திருமணமானவர்கள் ஆதீனமாக இருக்கக்கூடாது எனக்கூறி மகாலிங்க சுவாமியை சூரியனார்கோவில் ஆதீனத்தை விட்டு வெளியேற்றி மடத்திற்கு பக்தர்கள் பூட்டு போட்டனர்.

    இதனையடுத்து, கும்பகோணம் சூரியனார் கோயில் மடம் மற்றும் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆதீனம் ஒப்படைத்தார்

    • தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பிரதோஷ விழாவில் பங்கேற்கிறார்.
    • விழா முடிந்தவுடன் காரில் புறப்பட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வருகிறார்.

     தஞ்சாவூர்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (புதன்கிழமை) தஞ்சாவூருக்கு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சாவூருக்கு வருகிறார்.

    பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில் தஞ்சை சரசுவதி மகாலுக்கு செல்கிறார். அங்கு ஓலைச்சுவடிகள், அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    பின்னர் மாலை 4 மணி அளவில் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பிரதோஷ விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் காரில் புறப்பட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது.
    • குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27).

    இவர்களுக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். விருந்து முடிந்த பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள வீட்டிற்கு வந்து விட்டனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த மோகனசுந்தரி நேற்று மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். பின்னர் சரத்குமாரும் அதே சேலையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமார், மோகனசுந்தரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றறை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
    • இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாமன்னர் ராஜராஜசோழன் 1039-வது சதயவிழா நடந்து வருகிறது. விழாவில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியகோவில் மிக புண்ணியம் பெற்றது. திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் ஏற்ப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜசோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள்.

    அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு.

    எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன்.

    தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகத்தை இந்த அரசு நடத்துவதை சாதனையாக பார்க்கிறேன். பெரிய கோவில்களை காட்டிலும், கிராம கோவில்களின் உண்டியல் வருமானம் அதிகளவில் உள்ளது. கிராம கோவில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த கோவில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.

    இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான ரூ.400 கோடி மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் ரூ.500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வினோத தேங்காய்யை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
    • தேங்காயை பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போகிறோம் என்றார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள நரிக்குடி கிராமத்தில் மெயின்ரோட்டில் வசிப்பவர் காசிநாதன் (வயது 60). விவசாயி. இவரது தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தோப்பில் உள்ள தென்னை மரங்களில் விளைந்த தேங்காய்களை (மட்டையுடன்) பறித்து, அதனை வீட்டில் வைத்திருந்தார். பின்னர், நேற்று அவர் பறித்த தேங்காய்களில் இருந்து மட்டை தேங்காய்களை உறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது ஒரே மட்டையில் ஒரு பெரிய தேங்காயுடன் இயற்கையாகவே விளைந்த குட்டி தேங்காயும் நாருடன் சிக்கி இருந்துள்ளது. அந்த குட்டி தேங்காயின் அளவு சுமார் 3 செ.மீ வரை இருந்துள்ளது.


    இதனை கண்ட அவர் ஆச்சரியம் அடைந்தார். பின்னர், இதுகுறித்து அவர் குடும்பத்தினருக்கு தெரிவித்த, அவர்களும் இந்த வினோத தேங்காய்யை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

    பின்னர், இதுகுறித்து விவசாயி காசிநாதன் கூறுகையில்:-இது போன்ற வினோதமான தேங்காய் இதுவரை விளைந்ததில்லை. எனக்கு தெரிந்து இதுவே முதன்முறை. எனவே, இந்த தேங்காயை நாங்களே (குடும்பத்தினர்கள்) பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போகிறோம் என்றார்.

    மேலும், இந்த ருசிகர சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தினர், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அந்த குட்டி தேங்காயை கண்டு புன்னகைத்து மகிழ்ந்தனர்.

    • இரும்பு கம்பியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் பாய்ந்து தங்கமணியை மின்சாரம் தாக்கியது.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி தங்கமணி (வயது 43), இவர்களுக்கு திருமண நாளான நேற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்துள்ளனர்.

    இவர் துணிகளை துவைத்து காய போடுவதற்காக வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கொடி கட்டியிருந்தனர். அதன் அருகே மற்றொரு சிறிய கம்பியை கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த கொடி கம்பியில் நேற்று தங்கமணி துணி காய போட்டுள்ளார்.

    பின்னர் அவர் துணிகளை எடுக்க சென்றபோது வீட்டில் உள்ள இரும்பு கம்பியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் பாய்ந்து தங்கமணியை மின்சாரம் தாக்கியது.

    இதில் மூக்கில் ரத்தத்துடன் சுருண்டு விழுந்து தங்கமணி உயிருக்கு போராடினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் தங்கமணி உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி இறந்த தங்கமணிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் திருவோணம் அருகே திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தஞ்சை பெரிய கோவிலில் இன்று மதியம் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
    • நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்.

    தஞ்சாவூா்:

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று மதியம் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முதல் முறையாக தஞ்சாவூா் பெரிய கோவிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். விஜய் பெரிய வெற்றி அடைய வேண்டும்.

    விஜயும்-உதயநிதியும் அரசியலில் எதிரி என்பது சரிதான். விஜய்-உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள். நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார்.

    இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது.

    இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

    விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு அரண்மனை பரம்பரை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி ஆதீனம் குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து வரலாறாக வாழும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதையடுத்து பிற்பகலில் நாதசுரம், பரதநாட்டியம், யாழ் இசை, வில்லுப்பாட்டு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவின் 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை புத்தாடைகள் வழங்குகிறார். காலை 7.20 மணிக்கு அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும். காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.30 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும்.

    தொடர்ந்து 1039 கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

    • மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படுகிறது.
    • செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.

    தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. அதற்கான மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படுகிறது.

    கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.

    448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    • கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு.
    • 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர். சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஐ.ஆர். சி.டி.சி. மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.

    இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார்.
    • சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

    குத்தாலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்ட சம்பவம் வெளியாகி வைரலாகியது.

    இதுகுறித்து சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய அவரை டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக ஹேமாஸ்ரீயை பதிவு திருமணம் செய்து கொண்டேன். நான் எதையும் மறைக்கவில்லை.

    இதற்கு முன்பு சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர். சூரியனார்கோவில் ஆதீனத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் காவி வாங்கி ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

    மேலும், 54 வயதாகும் சூரியனார் கோவில் ஆதீனம் திடீரென திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×