என் மலர்
நீங்கள் தேடியது "திருக்கார்த்திகை"
- வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 4-ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அணுகை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மறுநாள் 5-ம் தேதி வியாழக்கிழமை திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருலுதல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை சுவாமி திருவீதி உலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
தொடர்ந்து 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
- அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
- மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும். மேலே அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி கூடம் 1881 (மத்திய சட்டம் XXVI/1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2024ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
- இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கார்த்திகை தீபம் 12-ந்தேதியும் பவுர்ணமி 14-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1982 பஸ்களும், சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து 8127 பஸ்களும் என மொத்தம் 10,109 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstcofficial app. ஆகிய இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
- மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.
- தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும். அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.
இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.
தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர். மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் இடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, வருகிற 13-ந்தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.
இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.
மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில், மலை ஏற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு என தனியாக மண் உள்ளது.
- சிறிய சுட்டி விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உடுமலை:
திருக்கார்த்திகை விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில் மற்றும் தெருக்களில் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள்.
இந்தநிலையில் திருக்கார்த்திகைக்கு தேவையான மண் விளக்குகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் என உடுமலை சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் பாரம்பரியமாக இதனை செய்து வருகின்றனர். விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பஞ்சலிங்கம் என்பவர் கூறியதாவது:-
கார்த்திகை தீபத்திற்கு ஒரு முக விளக்கு, 2 முக விளக்கு, ஐந்து முக விளக்கு, 10 முக விளக்கு என பல்வேறு விளக்குகளை தயார் செய்கிறோம். மேலும் கொடிக்கம்பத்தில் வைக்கக்கூடிய பெரிய வகை விளக்குகளும் தயார் செய்யப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.
மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு என தனியாக மண் உள்ளது. செம்மண், களிமண், மணல் ஆகியவற்றை முறையாக கலந்து, நீரில் கரைத்து, கற்கள், குப்பைகளை அகற்றி வடிகட்டப்படுகிறது. அதற்குப்பிறகு, பிசைந்து பசை போல் ஆன பிறகு, மண் சக்கரத்தில் இட்டு சுழற்றப்பட்டு விளக்குகளாக மாற்றப்படுகிறது. அதற்கு பிறகு, சூளையில் வைத்து 15 நாட்கள் வரை வேக வைத்து, விளக்குகள் தயார் செய்யப்படுகிறது.
சிறிய சுட்டி விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் தயாரிக்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில் உற்பத்தி செய்யும் விளக்குகள், கோவை, திருப்பூர், திண்டுக்கல், கேரளா, மூணாறு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
- முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
- அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.
கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.
இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.
- திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும்.
- பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை.
தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.
திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்.

பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை.
இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு.
மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.
இரண்டடி உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.
இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான்.
பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க.
சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும்.
அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும்.
அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும்.
கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும்.
7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும்.
கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!
அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயே பல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.
- கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி :
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, ஆவரைகுளம், மாடநாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர், ராதாபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு ஆகிய பகுதியிலிருந்து பிச்சிப்பூ.
சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூ. பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தி பட்டரோஸ். திருக்கண்ணங்குடி அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி. தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், கோழிக்கோடு பொத்தை ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, அருகம்புல், கனகாம்பரம், தாமரை. சேலத்தில் இருந்து அரளிப்பூ பூச்சந்தைக்கு வந்து பின்னர் மாநிலம், மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1500, மல்லிகைப்பூ ரூ.1500, அரளி ரூ.200 சேலம்அரளி ரூ. 200, சம்பங்கி ரூ.100, ரோஜா பாக்கெட் ரூ.30, பட்டர் ரோஸ் ரூ. 150, கனகாம்பரம் ரூ.500, துளசி ரூ.30, கொழுந்து ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.90, சிவப்பு கிரோந்தி ரூ.100-க்கும் விற்பனையானது. மேலும் மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- நாளை மறுநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது
- 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
என். ஜி. ஓ. காலனி :
குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லுவிளை யில் பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், 7.30 மணிக்கு சாமி, வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது.
விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு முகிலன்விளை ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை பாடல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கடல் நீராட செல்லுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் 21 வகை காய்கறிகள் படைத்து பூஜையும், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. ெதாடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 8:00 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சி களும் நடை பெறுகிறது.
விழாவின் 8-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பக்தர்கள் சிங்காரி மேளதா ளத்துடன் சொக்கப்பனை வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 11 மணிக்கு சொக்கப்பனை நாட்டுதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு திருக்கார்த்திகை சிறப்பு பூஜையும், 1 மணிக்கு மகா அன்னதானமும், மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் போட்டியும், இரவு 8 மணிக்கு ராஜமேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும், 11.30 மணிக்கு பெருமாள் சுவாமி கதை வில்லிசையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாரா தனையும் நடைபெறுகிறது.
9-ம் திருநாளான நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், 5:30 மணிக்கு வான வேடிக்கையும், 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8 மணிக்கு ராஜ மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், பகல் 1 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதணைகளும், மாலை 3 மணிக்கு வண்ண கோலப் போட்டியும், பிற்பகல் 3:30 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக சிங்காரி மேளதாளத்துடன் பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதனையும், 8:30 மணிக்கு சோமாண்டி கதை வில்லிசையும் நடைபெறு கிறது.
விழாவின் 10-ம் நாளான 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக கருடர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருக்கார்த்திகை திரு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர் மற்றும் ஊர் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
- திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.
கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல.
ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம்.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த
திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களில் பிரகாசமான
தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி நரம்புகளெல்லாம்
சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.
அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும்.
அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான்.
இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார் எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.
- அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
- இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்
நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.
அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.
இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று
விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
- கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
- வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக இவை காட்டப்படும்.
கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீப தரிசனத்திற்காக 2500 முதல் 3000 பக்தர்கள் வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கோவில்களில் திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் ஒளி படும் படி ஏற்ற வேண்டும்.
இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. இந்த பரணி தீபத்தினை வீட்டில் நாம் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாம் செல்லும் உலகங்களில் எம்னுடைய வதம் இன்றி துன்பம் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.
இந்த பரணி தீபத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் பஞ்சபூதம் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுதான். இந்த பரணி தீபம் 5 விளக்குகளைக்கொண்டு ஏற்றப்படுகிறது.
அப்படி ஏற்றுவதினால் அகமும் புறமும் சிறப்பாக செயல்படும் மகிழ்வாக இருப்போம் என்பது ஐதீகம் மேலும் பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட அனைத்தும் அளவாக நமக்கு கிடைக்க வேண்டிதான் இந்த பரணி தீபம் ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.
நமது வீட்டு பூஜையறை யில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
திருவண்ணாமலையில் நேற்று பஞ்சரத தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் மகாதீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ப்பட்டுள்ளன. 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.