search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthikai month"

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
    • 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக அமாவாசை நாட்களில் தர்பணம் செய்வது சிறப்புக்குரியதாகும்.

    அதன்படி இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதல் கார், பஸ், வேன் மூலம் வருகை தந்ததனர். அமாவாசை நாளான இன்று அதிகாலை திரளான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதன் பின் பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் கோவில் பவுர்ணமி, பிரதோஷ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச் சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு கட்டாறுகள் மற்றும் நீரோடைகளை கடந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 10 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

    இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கடந்த மாதம் அமாவாசை வழிபாட்டிற்கு கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழிபாடு செய்ய முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த கோவிலுக்கு மலையேறிச் செல்வதற்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    • கார்த்திகை மாதம் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும்.
    • சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம்.

    சோமவார விரதம் மேற்கொள்ளும் அதேநாளில் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். எனவே சோமவார விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று சங்காபிஷேகத்தை பார்த்து சிவனை தரிசிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நேரம் `திருக்கார்த்திகை' திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

    இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, அதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு, சங்காபிஷேக பூஜை நடத்தி குளிர்விக்கப்படுகிறது. சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும்.

    இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்க மாகும். சங்கு செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். அப்படி தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறை வனை நீராடினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணமும் சொல்கிறது. இதன் காரணமாகவே சங்கை கொண்டு சங்காபிஷேகம் பெரிய பெரிய சிவாலயங்களில் நடத்தப்படுகிறது.

    கார்த்திகை சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள்.

    1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்தர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.

    ஓம்கார சொரூபமான சங்கில் நாம் எந்த வேதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த வேதா மூர்த்தம் தனது அருள் நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.

    இதன் அடிப்படையிலேயே கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்காபிஷேகத்தை பார்ப்பவர்களின் வாழ்வில் அவ்வப்போது எதிர்படும் கஷ்டங்கள் வந்த சுவடு தெரியாமல் விலகிச் செல்லும்.

    • தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும்.
    • 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் - தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி - எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    -சிவசங்கர்

    ×